Wednesday, May 22, 2019

நான் புத்தன் அல்ல!!

நான் புத்தன் அல்ல!!
இரண்டு நாட்களுக்கு முன் விசாக தினம் வந்தது. நம்முடைய விசாக நட்சத்திர தினத்தை தான் பெளத்த மதத்தை சேர்ந்தவர்கள் விசாக தினமாக கொண்டாடுகிறார்கள். புத்தர், பிறந்ததும், ஞானம் பெற்றதும் , இறந்ததும், இந்த நாளில் தானாம். காலையில் வானொலியில் “புத்தம், சரணம் , கச்சாமி”,,,, என்று ஒலித்துக் கொண்டிருந்தது. சரி இன்று ஒரு நாளாவது நாமும் புத்தரைப் போல் பொறுமையாக, அமைதியாக, பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருந்து பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே அடுக்களைக்குள் சென்றேன்.
அங்கு நான் பார்த்த காட்சி என் ஒரு நிமிட தவ நினைப்பை அறுத்தெறிந்து விட்டது. ஒருவன் வரவால், ஒன்பது பேரை நான் மீண்டும் கழுவி , சுத்தம் செய்ய வேண்டி இருந்தது. ஆம் , நான் முந்தின இரவு கழுவி , காயவைத்திருந்த பாத்திரங்களின் மேல் ஒரு கொழு கொழு , அடர்ந்த காப்பி கொட்டை நிற கரப்பான்பூச்சி தன்னிச்சையாக , அழையா விருந்தாளியாக, ஓடி விளையாடி கொண்டிருந்தது.
அதை பார்த்ததும் வந்ததே எனக்கு கோபம்! உடனே ஹிட் கரபான்பூச்சி கொல்லி மருந்தை கையில் எடுத்தேன். எதிரி ஒருவன் என் மண்ணில் , என்னிடம் வசமாக மாட்டிக்கொண்டான் என்ற நினைப்பு எனக்கு. என் கையில் இருந்த ஹிட் எனக்கு குறி பார்த்து எதிரியை தாக்கும் ஏவுகனையாய் தோன்றியது. உணர்ச்சி வசப்பட்டு உடனே அந்த ஏவுகனையை ஓடிக் கொண்டிருந்த கரப்பான்பூச்சி மேல் பாய்ச்சாமல், சாதுர்யமாக அதனை முதலில் பாத்திரக்கூடையில் இருந்து கீழே இறங்கும் படி செய்தேன். ஏனென்றால் , பாத்திரக்கூடையில் இருக்கும் பொழுது அடித்து வீழ்த்தி விட்டால் பாத்திரம் முழுவதும் மருந்து நாற்றம் அடிக்கும். மேலும் அதனை சுத்தம் செய்வது அவ்வளவு எளிது அல்ல. அது மட்டுமா, நான் மருந்தை அடிக்கும் பொழுது அது லாவகமாக எங்காவது ஓடி ஒளிந்து கொண்டால் எப்படி கண்டு பிடித்து வீழ்த்துவது?
கீழே வந்த கரப்பானை நெருங்கி நின்று குறி வைத்து ஹிட் மருந்தை அதன் மீது அடித்தேன். முதல் வீச்சிற்கு அது சாயவில்லை. மேலே மருந்தின் காற்று பட்டவுடன் குடு குடு என்று தப்பித்து ஓட ஆரம்பித்தது. நானா விடுவேன்? அது ஓடிய இடமெல்லாம் துரத்தி, துரத்தி, என் மூக்கை பிடித்துக் கொண்டு , மருந்தை அதன் மீது அடித்தேன். எங்கே மருந்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக என் மீது ஏறி விடுமோ என்ற பயம் வேறு. ஒரு வழியாக அது ஓடி தப்பிக்க முற்பட்ட பொழுது குப்புற விழுந்து விட்டது. குப்புற விழும் கரப்பானால் மீண்டும் திரும்பி படுக்க முடியாதாம். அதன் வீழ்ச்சி அங்கே தான் ஆரம்பமாகிறது. அது கை கால்களை ஆட்டியபடி திரும்ப முயற்சித்துக் கொண்டிருந்தது.
அப்படியே விட்டிருந்தால் அது சிறிது நேரத்தில் இறந்து இருக்கும். ஆனால் என்னுள் இருந்த ”அன்னியன்” அதை ஏற்க என்னை விடவில்லை. உடனே அதனை ”கொல் கொல்” என்று என் கொலை வெறியை தூண்டி விட்டது. மீண்டும் ஒரு முறை குப்புறக்கிடந்த கரப்பான் மீது மருந்தை அடித்து அது துடி துடித்து சாகும் வரை பொறுமையாக ( விசாக தினத்தன்று பொறுமையை கடைபிடித்தாகி விட்டது)காத்திருந்து பின் அதை குப்பையில் தூக்கி போட்டேன். அந்த குப்பை தொட்டியே அதன் சவக்குழி ஆனது. யார் துனையும் இல்லாமல் எதிரியை தனியாக எதிர் கொண்டு வீழ்த்திய சந்தோஷம் ஒரு புறம் இருந்தாலும், ஆஹா நமக்குள் இப்படி ஓர் கொலை வெறியா என்று ஒரு வித கசப்புணர்வை உணர்ந்தேன். ஓர் உயிர் போவதை, அதுவும் துடி துடித்து சாவதை என்னால் எப்படி இப்படி ரசிக்க முடிகிறது? அப்படி என்ன அதன் மீது எனக்கு தீராப்பகை? ஒரு வேளை அந்த கரப்பான் என் வீட்டிலேயே வளர்ந்து இப்படி திரிந்திருந்தால் நான் மன்னித்திருப்பேனோ என்னவோ ?ஆனால் அது அடுக்கு மாடி குடியிருப்பில் எந்த வீட்டு குளியல் அறையில் இருந்து என் வீட்டுக்கு கழிவு நீர் குழாய் வழியாக வந்ததோ என்ற அருவருப்பு என்னை கோபங்கொள்ள வைத்து ஒரு கொலைகாரியாக , அதுவும் விசாக தினத்தன்று ஒரு கொலைகாரியாக மாற்றி விட்டது. என் கோட்டைக்குள் வந்த ஓர் எதிரியை எப்படி நான் மன்னித்து விடுவது? ஒரு வேளை நான் அப்படி அதை உயிர் தப்ப விட்டு இருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் அது ஒரு பெரும் படையாக அல்லவா உருவாகி இருக்கும்!
ஒருவன் நல்லவனாக இருப்பதும், கெட்டவனாக மாறுவதும் அவனவன் கையில் இல்லை போலும். நம்முடைய சந்தர்ப்ப சூழ்நிலைகளே அதனை நிர்ணயம் செய்கின்றது என்பதற்கு இதுவே சாட்சி.புத்தனுக்கு வாய்த்த சந்தர்ப்ப சூழ்நிலை அவனை புத்தனாக வாழ வழிசெய்தது. நமக்கு வாய்க்கும் சந்தர்ப்பம் யாவும் நம்மை வழி மாறி போகச்செய்கிறது. அன்று மட்டும் அந்த கரப்பான் பூச்சி என் கண்ணில் படாமல் இருந்திருந்தால் நான் ஒரு நாளாவது புத்தனாக வாழ்ந்திருப்பேன்...என்னடா இவள் , எவ்வளவு வெட்டியாக இருந்தால் ஒரு கரப்பான் பூச்சியை கொன்றதுக்கு இவ்வளவு பில்டப் கொடுத்து இப்படி எழுதி நம்மை கொல்கிறாள் என்று நினைக்கிறீர்களா? புன்பட்ட மனதை புலம்பித்தானே தீர்க்க வேண்டும்......

Mom, Rishi and DAD

Mom, Rishi and DAD
Mom: Rishi , how many times on earth do I ask you to put your lunch box for wash.
Rishi: Ya ma will do it.
After one hour mom again sings the same song. Rishi also plays the same music,"Ya ma will do it".
After two hours when all the kitchen work is done and the sink is clean mom again remembers about the lunch box. This time she loses her temper,
Mom: RISHIIIIIIII can't you listen to me. Do you think I am tied up with the sink and will do the dishes one by one as they come?
She raises her voice. Dad , who has been silently watching TV and meddling with his phone jumps into the scene.
Dad: Rishi, I have been hearing to mama's screaming for the past two hours. Why don't you listen to her? Why don't you have it as a habit to put the lunch box in the sink as soon as you come home?
He sings his part of the song for solid five minutes. Mom suddenly remembers the next issue.
Mom to Dad: Ravi , where is your lunch box?
Dad brings down his volume as well as his "Shruthi" : "Oh ya, I left it in the office."
Mom is triggered even more but is helpless. She hates to clean the stinking lunch boxes the next day. With "Argrhhhhh" and "mmmmmmmm" she murmers : "Now I know from where this gene comes from!!!!
Silently Rishi comes to Mama : Mama, do you see who pretends to be the Prophet of the house?"
After few minutes Mom could see both the Prophet and the Disciple sitting together and happily watiching the TV. ........
Who is better ? The one who forgets to bring the lunch box home or the one who doesn't put it for wash... To mom both weigh the same........ because at the end of the day it is she who is going to clean the stinking lunch boxes........

Sunday, May 12, 2019

அம்மா “நீ யார்?”


நீ என்பதும் நான் என்பதும் !


அம்மா, நீயும் ஓர் சராசரி தாய் தான். பத்து மாதம் சுமந்து பெற்றாய். பால் ஊட்டினாய், சீராட்டினாய், தூக்கம் துறந்தாய், உன் பசி மறந்து என் பசி போக்கினாய், பிள்ளைகளுக்காக உன் தேவைகளை குறைத்துக்கொண்டாய், பார்த்து பார்த்து பேணினாய், நான் நோய் வாய்ப்பட்ட பொழுது துடிதுடித்தாய், நல்லது கெட்டதை போகிற போக்கில் சொல்லிக்கொடுத்தாய். இவை யாவும் நீ செய்ததில் எனக்கு எந்த வித ஆச்சரியமும் இல்லை. இவை யாவும் காலம் காலமாக எல்லா தாயும் தன் குழந்தைகளுக்கு செய்வது தான். இவை எல்லாம் மீறி ”நீ யார்? ” அப்படி என்ன நீ செய்து விட்டாய்? ஆம் நீ ஒரு குடத்தில் இட்ட விளக்கு!

உன்னை அறியாமல் உன்னில் இருந்த பலவற்றை உன் அணுமூலம் என்னுள் கடத்தினாய். நீ கவிதை எழுதினாய். அப்பொழுது வீட்டில் இருந்த யாருக்கும் அவற்றை படிக்க நேரம் ஒதுக்க தெரியவில்லை. அதை மெச்சி கொண்டாட நாங்கள் நினைத்ததும் இல்லை. கல்வி அறிவு சிறிதெனினும் நீ புத்தகப் புழுவாய் படித்துக்கொண்டே இருந்தாய். அந்த உன் அணுவின் வீச்சம் என்னில் மட்டுமல்லாது என் பிள்ளைகளுக்குள்ளும் செல்லும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருந்திருக்கிறது. மிக பெரிய ஓவியமாக இல்லாவிட்டாலும் உன் எண்ணங்களை ஓவியமாய் தீட்டினாய். வீட்டில் இருந்த வேண்டாத காகிதங்களுக்கு ஒரு புத்துயிர் தந்தாய்.

நீ, நூலும் ஊசியும் கொண்டே ஓர் துணியிலேயே வண்ணமிகு தோட்டத்தை வளரச்செய்தாய். சமையல் என்று வந்து விட்டால் நீ எப்பொழுதும் ஆராய்ச்சி மாணவியாய் உருமாறுவாய். அக்கலையில் உன் கண்டு பிடிப்புக்கள் யாவும் என்றுமே வாய்க்கும், வயிற்றிற்கும் மட்டுமல்லாது கண்களுக்கும் வசீகரமாணவை தான். உன் மெல்லிய குரலில் ஒலித்த இசையாவும் ”குரலோவியம்” தான். இன்று வரை என் பிள்ளைகளின் திகட்டாத தாலாட்டும் அது தான். ஏனோ தெரியவில்லை இதில் மட்டும் நான் குயிலுக்கு பிறந்த மயிலாகி போனேன். வாசலில் நீ போடும் கோலத்தில் கூட வெள்ளை மயில் ஆடிவரும். கொத்து கொத்தாய் உன்னிடத்தில் ஊற்றெடுக்கும் உன் திறமையாவும் திராட்சை கொத்தாய் வாசலிலே கோலமாகும்.

உன் குடிலே உன் கோவிலென இருந்து விட்டாய். உனை தேடி வந்தோரை கொண்டாடி மகிழ்ந்தாய். ஊர் வம்பு பேசாமல் ஒதிங்கியே வாழ்ந்தாய். பார்ப்பவை யாவையிலும் அழகு கலையை புகுத்தி விட்டாய். உன்னை அறியாமல் என் ரசனையை கூட்டிவிட்டாய்! நீ சிலந்தி வலைபோல் நூல் கொண்டு பின்னிய அந்த ”க்ரோஷா” கலை மட்டும் இன்று வரை எனக்கு கைவசப்படவில்லை.

இத்தனை சொத்துக்கும் சொந்தக்காரி நீ . அத்துனை சொத்தையும் எனக்கு மட்டுமா எழுதி கொடுத்தாய், என் மகளுக்கும் அல்லவா எழுது கொடுத்து இருக்கின்றாய். ஏழேழு கடல் தாண்டினாலும், ஏழேழு பரம்பரைக்கு பின்னும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாத , பங்கு கேட்க முடியாத அழியா சொத்தல்லவா!அத்துனையும் எழுதி கொடுத்து விட்டு , உரிமை கொண்டாடாமல் மேலும் இச்செல்வங்களை பெருக்கிக்கொள்ள ஊக்கம் அளிக்கின்றாய், மகிழ்ச்சியுடனேயே இருக்கின்றாய். உன்னிடம் இருந்த வரையில் எல்லா சொத்தையும் அமைதியாய் அனுபவித்தாய். என்னிடம் வந்தப்பின் ஊர் மெச்ச வேண்டும் என்று எனக்கு நானே சர விளக்கு தொங்கச் செய்து பறைசாற்றுகின்றேன்.

இத்துனை காலங்கள் ஆனது உன் ஒளியை நான் உணர. காலங்கள் கடந்தாலும் ஒளியின் தன்மைதான் மாறுமோ? தேனின் சுவை தான் மாறுமோ?அன்று உன்னை கொண்டாட தெரியவில்லை. நீயும் அதை உணர்த்த வில்லை. இன்றோ என் மகளுக்கு அதனை புரிய வைத்து அன்னையின் புகழ் பாட கட்டளை இடுகின்றேன். நீ மட்டும் குடத்தில் இட்ட விளக்காய் வாழ்ந்து விட்டாய் . என்னை குன்றின் மேல் இட்ட விளக்காய் ஆக ஊக்குவித்தாய். உன் துணையோடு வாழும் காலம் வரை வாழ வேண்டும் என அந்த ஆண்டவனை வேண்டுகின்றேன்.
அனைவருக்கும் என் அன்னையர் தின வாழ்த்துக்கள்!