Wednesday, July 26, 2017

எனக்குள் ஓவியா......

உலக நடப்பை தெரிந்து கொள்ள முக நூலில் சிறிது நேரம் உட்புகுந்தேன். மூன்று நான்கு நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இன்று வானம் கொஞ்சம் இரக்கப்பட்டு சூரியனை மறைத்துக்கொண்டது. கொஞ்சம் போல் இருட்டியது போல் காணப்பட்டது. எந்நேரம் வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்று தோன்றியது. அதனால் அவ்வப்போது சன்னல் வழியே வெளியில் பார்த்துக் கொண்டே கண்களை முகநூலில் ஓடவிட்டுக் கொண்டு இருந்தேன். ஆஹா மழைத் தூரல் போல் தெரிகிறதே என்று நினைத்து முடிக்கக்கூட இல்லை சட சட என்று மழை பெய்ய ஆரம்பித்தது. ஓடி போய் சன்னல்களை சாத்த எழுந்தேன்.
சன்னலை இழுத்து சாத்தும் பொழுது மழைத்தண்ணீர் கைகளில் பட்டது. மழை துளி பட்ட அந்த மறு நொடி சட்டென ஓவியாவின் முகம் கண் முன் வந்து போனது. அவள் மழையில் ஒரு புள்ளி மானென துள்ளி ஆடியது ஞாபகத்திற்கு வந்தது. வெளியில் நீட்டிய கைகளை உள் இழுக்க மனம் இன்று அப்படியே மழையை ரசித்தேன். விரல்களை நனைத்த மழைத்துளிகள் என் கைவளையையும் நனைத்து பின் கீழே சொட்டு சொட்டாக சொட்டியது. விரல்களை குவித்து மழை நீரை சேகரிக்க முயன்று தோற்றேன். ஆனாலும் கைகளில் இருந்த அந்த ஈரத்தை கொண்டு முகம் வருடினேன். ஆஹா என்ன ஒரு சுகம். முகம் மட்டும் நனைவதே இவ்வளவு சுகம் என்றால், முழுவதுமாக நனைந்தால் எவ்வளவு சுகம். இதனால் தான் அந்த புள்ளி மான் முழுவதுமாக மழையில் ஆடியதோ? எனக்கும் ஆசை முழுவதுமாக மழையில் நனைய ஆனால் எட்டாவது மாடியில் இருந்து கைகளை மட்டுமே நனைக்க முடியும் .தலையும் நனையட்டும் என்று நான் நீட்டினால் தரையில் போய் சிதறு தேங்காயாய் விழுவேன் என்று என் சிற்றறிவு ஞாபகப்படுத்தியது. நீட்டிய கைகளை சில மணித்துளிகள் நனையவிட்டபடி வெளியில் பார்த்தேன். கீழே அழகிய சில தென்னை மரங்கள் காற்றில் தலை அசைத்து என்னுடன் சேர்ந்து மழையை ரசித்துக்கொண்டிருந்தது.
மண் வாசம் தேடி போலீஸ் நாய் போல் என் மூக்கு மோப்பம் பிடித்தது. ஆனால் டைல்ஸ் போட்டு வழுவழுப்பாக பள பள என மின்னிய தரையில் எங்கிருந்து மண் வாசனை மேல் எழும்பி வரும்?. என் மண்ணின் வாசனை கற்பனையில் என் நாசி தழுவி சென்றது. மேல் இருந்து பார்க்கையில் நீச்சல் குளத்தில் விழும் மழை நீரை பிரித்து பார்க்க முடியவில்லை. தெளிந்த மழைநீரும் நீலமாய் நிறம் மாறிப்போனது. மழை பெய்கையில் கடற்கரையில் இருக்க வேண்டும் என்று எனக்கு நீண்ட நெடுநாள் ஆசை ஒன்று உண்டு. நடுகடலுக்குள் போக வேண்டும் என்ற ஆசையும் உண்டு. மழையை ரசித்தபடி நின்ற எனக்கு அப்புறம் தான் மற்ற அறை சன்னல்களை மூட மறந்தது நினைவிற்கு வந்தது. மனம் இல்லாமல் கைகளை உள்ளிழுத்து சன்னலை சாற்றி விட்டு அடுத்த அறைக்குச் சென்றேன். கடைசியாக ஹால் சன்னலை சாத்த போனபோது தான் பார்த்தேன் சன்னல் அருகே இருந்த சோபா மழைநீரில் நனைந்து இருப்பதை..... அவசர அவசரமாக அந்த சன்னல்களையும் சாத்திவிட்டு சோபா காய மின்விசிறியை சுழலவிட்டேன். என் கைகளில் ஈரம் காயவில்லை. துடைக்க மனம் வரவில்லை. மீண்டும் வந்து முகநூலைப் பார்க்கலாம் என்று வந்து அமர்ந்தேன் . திரும்பி சன்னலை பார்க்கையில் மழை நின்று விட்டிருந்தது. தனக்குள் சேகரித்து வைத்திருந்த நீரையெல்லாம் ஒரு சில நிமிடத்தில் கொட்டி தீர்த்த சோர்வில் அந்த மேகம் மீண்டும் நீர் சேகரிக்க வேறு இடம் நோக்கி நகர்ந்து விட்டது......
வாழ்க்கை பந்தயத்தில் வேகமாக ஓடிக்கொண்டே இருக்கும் நமக்கு நம்முடைய சின்ன சின்ன ஆசைகளை , ரசிப்புத்தன்மையை வெளிக்கொண்டு வர யாராவது ஒருவர் கோடிட்டு செய்து காட்டி ஞாபகப்படுத்த வேண்டி இருக்கிறது. அந்த உந்து சக்தியாக நமக்கு ஓவியாக்கள் தேவைபடுகிறார்கள். சின்ன சின்ன விஷயங்களை ரசிக்க மறந்ததால் தான் என்னவோ வாழ்க்கையில் நமக்கு சலிப்பும் ஏமாற்றமும் சீக்கிரமே வந்து விடுகிறது. வாழ்க்கையில் சிறு சிறு விஷயங்களை சில நிமிடங்கள் ரசிக்க கற்றுக்கொண்டுவிட்டால் நாம் ஒவ்வொருவரும் ஓவியாவே....

Monday, July 24, 2017

ஏன்??ஏன்??

ஏன்??ஏன்??
இன்றைய சூழலில் ஆண் பெண் பேதமின்றி காயத்திரியையும், ஓவியாவையும், ஜூலியையும், இன்னும் மற்ற பிக்பாஸ் குடும்ப உறுப்பினர்களையும் அறியாதாவர்கள், தெரியாதவர்கள் மிகக்குறைவே! ஏன் இந்த நிகழ்ச்சியின் மேல் இப்படி ஒரு ஈர்ப்பு என்று நான் யோசித்தேன். நமக்கு மிகவும் நெருங்கியவர்களைப்போல் அவர்களைப்பற்றி தினமும் பேசுகிறோம், அவர்களைப் பற்றி ஆராய்கிறோம். எதனால் இது? பேசுபவர்கள் பலர் அதில் பங்கு பெறுபவர்களின் தீவிர ரசிகர்கள் எல்லாம் இல்லை. ஆனாலும் நாள் தவறாது பார்க்கிறோம். நம் வாழ்வில் இவர்களைப்போன்ற பல கதாபாத்திரங்களை நாம் சந்திக்கிறோம், சில நேரங்களில் அவர்களுடனேயே வாழ்கிறோம், அல்லது பழகுகிறோம். பார்த்தோம் , சிரித்தோம் என்று கடந்து போகும் கதாபாத்திரங்கள் அல்ல அவர்கள். நம் வாழ்வில் பங்கு பெறுபவர்களாக இருப்பார்கள். இந்நிகழ்ச்சி மீண்டும் நமக்கு அந்த நிஜ கதாபாத்திரங்களை நினைவு படுத்துவதாக அமைகிறதா?. பல தரப்பட்ட மனிதர்களை எப்படி கையாள்வது என்பதை நாம் இதன் மூலம் கற்றுக்கொள்ள விழைகிறோமா? நிஜ வாழ்க்கையில் நமக்கு காயாளத்தெரியாத சில விசித்திர கதாபாத்திரங்களை இந்நிகழ்ச்சியில் சிலர் லாவகமாக கையாள்வதை பார்த்து ஒரு வித ஆனந்தம் அடைகிறோமா? நமது ஆழ் மனதில் புதைந்து இருக்கும் புறம் பேசும் தன்மையை அது வெளிக்கொணர்கிறதா? நம் முதுகில் இருக்கும் அழுக்கை உணராது அடுத்தவர் முதுகில் இருக்கும் அழுக்கை உற்று நோக்கும் நம்முடைய அடிப்படை குணத்தினை இது வெளி கொணர்கிறதா? அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதில் நமக்கு இருக்கும் அலாதி பிரியத்தை இது எடுத்து உரைக்கிறதா? இதை பார்க்கும் பொழுது கோபமும், சந்தோஷமும் கலந்து உணர்வது அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றியா அல்லது நம் மனநிலையை பிரதிபளிக்கிறதா? அடி மனதில் கட்டுண்டு கிடக்கும் அழுக்குகளையும், வக்கிரத்தையும், பழிவாங்கும் ஊணர்வையும், சுயநலத்தையும், பாராமுகத்தையும், பச்சோந்திதனத்தையும், சந்தர்பவாததனத்தையும், பொய்மையும், ஆண்டான் அடிமைதனத்தையும், தாழ்வு மனப்பான்மையையும், அடிமை உணர்வையும், குழந்தைமனத்தையும், ஆசைஅபிலாஷைகளையும், பயத்தையும், தற்பெருமையையும், கர்வத்தையும், ஆணவத்தையும், அகங்காரத்தையும் , பாதுகாப்பற்ற நினைப்பையும், கட்டவிழ்த்து வெளிச்சம் போட்டு காண்பிக்கின்றதா?இதனை பார்ப்பதன் மூலம் நேரத்தை விரயம் செய்கிறோமா, அல்லது பாடம் கற்கிறோமா?உள்ளிருப்போரின் குணாதிசயங்கள் மாறுகிறதோ இல்லையோ வெளியில் வாழ்வோர் பலரின் குணாதிசயங்களை இது மாற்றி விடுமோ? சந்தர்ப்பத்தை ஒருவருக்கு எப்படி சாதகமாக ஆக்கிக்கொள்வது என்பதை இதனை பார்த்து அறிகிறோமா? எப்படி பட்ட கண்காணிப்பில் இருந்தாலும் சிலர் அவர்களின் அடிப்படை குணாதிசயங்களை எவருக்காகவும் எதற்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்ற உண்மையை புரிந்து கொள்ள முற்படுகிறோமா? ஒன்று மட்டும் நிச்சயம், பெரும்பாலோருக்கு கடினமாக பேசுபவரையோ, கோபப்படுவோரையோ, சண்டை போடுவோரையோ பிடிக்கவில்லை . ஆனாலும் நிஜ வாழ்வில் பெரும்பாலானோர் அதையே செய்கிறோம், உறவுகளிடமிருந்து பிரிந்தும், சிதறியும் வாழ்கிறோம்....
மொத்ததில் பிக்பாஸ் கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பலரும் அந்த வீட்டில் மனதளவில் சிறை வாசம் செய்கிறார்கள்...... நிகழ்ச்சியின் முடிவில் அந்த வீட்டில் வாழ்ந்தவர்களுக்கு பணம் , புகழ் நிச்சயம். பார்த்தவர்களுக்கு கரண்டு பில், இண்டர்னெட் பில், , போன் பில் , என்று பல பில்களும், வீட்டில் புது பிரச்சனைகளுமே மிச்சமாகக்கூடும்......

Saturday, July 15, 2017

மாற்றம் ஒன்றே மாறாதது

மாற்றம் ஒன்றே மாறாதது
அன்று:
அப்பா திரைப்படத்திற்கு அழைத்துச் செல்வார். படம் பார்த்து விட்டு திரையரங்கை விட்டு வெளியே வரும் பொழுதே படம் பற்றிய நினைப்பை, பேச்சை நிறுத்தி விட வேண்டும். வீட்டிற்கு வந்து அதைப் பற்றி பேசுவதோ , ஆராய்ச்சி செய்வதோ கூடாது. மீறி பேசினால் “படம் என்பது பொழுது போக்கிற்கு பார்ப்பது. படம் பார்த்தோமா மறந்தோமானு இருக்கனும். வீட்டிற்கு வந்து அதைப்பற்றி பேசினால் இனி படம் பார்க்க அழைத்து செல்ல மாட்டேன்” என்பதுடன் சேர்ந்து சில பல அர்ச்சனைகள் விழும். அர்ச்சனைக்கு பயந்து வீட்டில் படம் பற்றி பேசாமல் இருந்து விடுவோம் . பள்ளி சென்று படம் பற்றி பேசும் அளவிற்கு ஞானம் இல்லை.படம் நன்றாக இருந்தது அல்லது படம் நன்றாக இல்லை என்பதை தவிர வேறு விவாதம் நடந்ததாக ஞயாபகம் இல்லை. ரேடியோவில் பாட்டு கேட்பது உண்டு--அதுவும் காதை ஸ்பீக்கரில் அமுக்கி வைத்துக்கொண்டு. அதைப் பார்க்கும் அப்பா,” ரேடியோகுள்ளவே போயிடு இந்த ரேடியோவை தூக்கி போட்டு உடச்சாதான் சரிபடுவ.” என்று கோபிப்பார். அப்பா வீட்டில் இல்லாத நேரம் பசை போட்டு ஒட்டியது போல ரேடியோ கேட்பது உண்டு. அதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்தது.
இன்று:
பேத்தியுடன் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்க்கிறார். பிடிக்கவில்லை என்றாலும் நிகழ்ச்சி பற்றி பேத்தி கூறும் கருத்துக்களை, விமர்சனங்களை அமைதியாக கேட்கிறார். மகளை அர்ச்சித்தது போல் பேத்தியை அர்ச்சிப்பது இல்லை.பேத்தியை கண்டிக்க மகள் இருக்கிறாள் என்ற நினைப்போ என்று தெரியவில்லை. அவருக்கு தெரியாது நாங்கள் படம் பார்த்துவிட்டு வரும் போது காரிலேயே படத்தைப்பற்றி குடும்பமே சேர்ந்து ஆராய்ந்து பீராய்ந்து விடுவோம் என்று. கதை எப்படி, இசை எப்படி , நடிப்பு எப்படி என்று பிஹெச்டி பட்டம் வாங்கும் அளவிற்கு ஆராய்ச்சி நடக்கும். எல்லோருமே சுப்புடு ஆகிவிடுவோம். வீட்டிற்கு வந்தவுடன் சமூக வளைதளங்களில் படத்தை பற்றிய மற்றவர்களின் கண்ணோட்டத்தையும் பார்ப்போம். அன்று நான் ரேடியோ ஸ்பீக்கரில் பசைபோட்டு ஒட்டியது போல் பாட்டு கேட்டேன் இன்று என் பிள்ளைகள் ஹெட்போனுடனேயே பிறந்தது போன்று அலைகிறார்கள். என் அப்பாவிற்கு வந்த அதே கோபம் எனக்கும் வருகிறது ஆனால் அப்பா எப்படி ரேடியோவை கடைசிவரை போட்டு உடைக்கவில்லையோ அதே போல் நானும் ஹெட்போனை தண்ணீரில் தூக்கி போடுவேன் என்று சொல்கிறேனே தவிர செய்வதில்லை. காசு போட்டு நாம் அல்லவா வாங்கி கொடுத்து இருக்கிறோம்.