Sunday, November 26, 2017

இஞ்சி , இஞ்சி, இஞ்சீஈஈஈஈ மரப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆ...........

இஞ்சி என்றாலே இஞ்சி இடுப்பழகி பாட்டு  ஞாபகத்திற்கு வராதவர்கள் இருக்க முடியாது. தினமும் இஞ்சியை உணவில் சேர்த்தால் இரத்தம் தூய்மை அடையும், தினம் இஞ்சி சாறு பருகினால் வாயுத்தொல்லை நீங்கும், கொழுப்பு கரையும் அது இது என்று எண்ணற்ற பயன்கள் இஞ்சிக்கு உண்டு . இதன் சாற்றை  எப்படி பருகினால் , எதனுடன் பருகினால், எப்பொழுது பருகினால் நன்மை என்ற பல வழிமுறைகளும்  உண்டு. நமக்கும் அதோ இதோ என்று பாதி கிணற்றை கடக்கும் வயது வந்தாகி விட்டது. கூடவே வயதிற்கான அத்தொல்லை, இத்தொல்லை என்று எல்லாம் எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டது.   நாமும் இஞ்சி சாறு பருகி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று அதனை பல வழிகளில் உணவில் சேர்த்துக் கொள்வது வழக்கமாகிப் போனது.

காய்கறி வாங்கும் பொழுது இஞ்சி வாங்க மறப்பதே இல்லை. நான் சிறுமியாக இருந்த பொழுது காய்கறி வாங்கச்சென்றால் தவறாமல் ஐம்பது காசுக்கு இஞ்சி, கொத்தமல்லி இலை வாங்கச் சொல்வாள் என் அம்மா. அந்த இஞ்சியும், கொத்தமல்லி தழையும் மண்ணில் தோய்ந்து இருக்கும். ஆனால் இன்று சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் இஞ்சி சர்ப்ஃபில்  ஊறவைத்து கழுவியது போல் வழ வழ என்று சுத்தமாக கிடைக்கிறது. அது மண்ணின் அடியில் விளைந்ததற்கான அறிகுறியே இருப்பதில்லை.  சுத்தமான காய்கறிகளை வாங்கி பழக்கப்பட்டு போனதால் இப்பொழுதெல்லாம் மண் இருக்கும் காய்கறிகளைக் கண்டால் கொஞ்சம் அருவருப்பாக இருக்கிறது. இப்படி சுத்த சிகாமணியாகி போனது தான் வீட்டில் நடக்கும் பல பிரச்சணைகளுக்கு காரணம்.

காய்கறிகளை  எடுத்துக்கொண்டு பில் போடுவதற்காக க்யூவில் நின்று கொண்டு இருந்தேன். அப்பொழுது அங்கே ப்ளாஸ்டிக் பேப்பர் சுற்றிய இஞ்சிமரப்பா மிட்டாயை பார்த்துவிட்டார் கணவர். உடனே இஞ்சிமரப்பா ஒரு நாலைந்து, எள்ளு மிட்டாய் நாலைந்து எடுத்து பில் போட்டார்.எள்ளு மிட்டாய் வாங்குவதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. அது எப்படி இருக்குமோ என்ற தயக்கம். இஞ்சி மரப்பா பார்க்க அழகாக பொன் நிறத்தில் இருந்தது. எள்ளு மிட்டாயோ கருநிறத்தில் பார்க்க அவ்வளவு கவர்ச்சியாக இருக்கவில்லை. என்னதான் நிறபேதம் பார்ப்பதில்லை என்று நினைத்தாலும் மிட்டாய் வாங்கும் பொழுது கூட நம் ஆழ் மனதில் இருக்கும் அந்த பேதமை உணர்வு தலை எடுத்துவிடுவதைக் கண்டு எனக்கு வெட்கமாக இருந்தது. வெள்ளை சீனியின் விலை ஏற்றத்திற்கும், வெல்லத்திற்கான விலை இறக்கத்திற்கும் இந்த நிற வேற்றுமை ஒரு காரணமாக இருக்குமோ??

 இஞ்சி மரப்பாவை  பார்த்தவுடன் பல எண்ணங்கள் மனதில் தோன்றி மறைந்தன. அப்பொழுதெல்லாம் பேருந்து நிலையத்தில் தவறாமல் இஞ்சிமரப்பா விற்கப்படும். நாம் பேருந்தில் அமர்ந்திருக்கும் பொழுது பேருந்துக்குள்ளோ அல்லது வெளியிலோ அழுக்கு உடை அணிந்த ஒரு  சிறுவனோ அல்லது பெரியவரோ ஒரு தட்டில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இஞ்சிமரப்பாவை, இஞ்சி , இஞ்சி, இஞ்சீஈஈஈ மரப்பாஆஆஆஆ என்று கத்திக் கொண்டே விற்பார்கள். கூடவே அதனை உண்பதனால் ஏற்படும் பலன்களையும் கூறி விற்பார்கள். ”அஜீரனமா, புளித்த ஏப்பமா, இத வாங்கி சாப்பிடுங்க நொடியில சரியாயிடும்”, என்று தங்களின் மார்க்கெட்டிங் டெக்னிக்கை கையாள்வார்கள். அவர்கள் அந்த இஞ்சிமரப்பாவை விற்பதில் ஒரு கலைநயம் இருக்கும்.

இஞ்சி மரப்பா விற்பவரே பெரும்பாலும் கமார்கெட் மிட்டாயும் விற்பார். பொதுவாக சிறுவர்கள் கமார்கெட்டும், பெரியவர்கள் இஞ்சி மரப்பாவும் வாங்கிக் கொள்வார்கள். இஞ்சி மரப்பா விற்கப்படாத பேருந்து நிலையமே இருந்ததாக எனக்கு நினைவில்லை. பெட்டிக்கடைகளில் கூட இஞ்சி மரப்பா விற்கப்படும். அது கண்ணாடி பாட்டிலில் , தேன்கூட்டின் உள் அறைகளைப்போல் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஐந்து பைசா அல்லது பத்து பைசா என்பது தான் அதன் விலை. இப்பொழுது அழகாக ப்ளாஸ்டிக் பேப்பரில் சுற்றி விற்பது போல விற்கப்படவில்லை. ஆனாலும் அதனை விற்பவரின் கை சுத்தமாக இருக்கிறதா, இல்லை அவர் மூடி விற்கிறாரா என்றெல்லாம் பார்ப்பது கிடையாது. அதில் பேருந்தின் புகை படிந்து இருக்கிறதா, புழுதி படிந்து இருக்கிறதா என்று அலைசி அராயப்படவில்லை. இஞ்சி மரப்பாவின் ருசி மட்டுமே  கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் காரம் கருதி நான் அதனை சீண்டிப்பார்த்ததே இல்லை. எங்கள் பாட்டி எப்பொழுது வந்தாலும் வாங்கி வருவார்கள். அவர்கள் வைத்திருப்பதில் ஒரு சிறு துண்டு வாங்கி நக்கி பார்ப்பதுண்டு எப்பொழுதாவது. அதன் ருசி எனக்கு பரிட்ச்சயமான ஒன்று தான்.

ஒரு முழு இஞ்சி மரப்பாவை அப்படியே வாயில் போட்டு சப்பி சாப்பிட ஒரு தைரியம் வேண்டும். அவ்வளவு காரம் இருக்கும் அதன் சுவையில். மதிய சாப்பாட்டிற்குப் பின் ஏதாவது ஒரு இனிப்பை சாப்பிடுவது பழக்கமாகிவிட்டது. சாக்லெட் சாப்பிட்ட வயது கடந்து இப்பொழுது கடலை மிட்டாயை சாப்பிட ஆரம்பித்தாகிவிட்டது. இப்பொழுது புதிதாக இஞ்சி மரப்பா ஒரு சிறு துண்டை எடுத்து வாயில் போட்டு சுவைக்கிறேன். வயதாக வயதாக நாக்கின் சுவைக்கேற்ப சாப்பிடுவது போய் வயிற்றின் தேவை மற்றும் பலம் அறிந்து சாப்பிடுவது என்றாகிவிட்டது. வயிற்றுக்கு ஒவ்வாத உணவுகளை நா இயல்பாகவே சுவைக்க மறுக்கிறது. மூளையும்”இதனை சுவைத்துப்பார்” என்ற எவ்வித சமிக்கையும் நாவிற்கு  அனுப்புவது இல்லை. இது காலத்தின்  கட்டாயம் போலும். சில நேரம் டீ போடும் போது இஞ்சிமரப்பாவை சிறிது பொடி செய்து அதனுடன் சேர்த்து பருகினால் சுவை கூடுதலாக தெரிகிறது.

இஞ்சியை தோல் சீவிதான் பயன் படுத்த வேண்டுமாம். இல்லையெனில் அது விஷமாகிவிடுமாம். ஆனால் இஞ்சியின் தோலை சீவுவதற்கு ஒரு தனி திறமை வேண்டும். அதன் ஏற்ற இறக்க நெளிவு சுழிவுளுக்குள் கத்தியை லாவகமாக வைத்து தோலை சீவவேண்டும். அப்படி சீவும் பொழுது தோலை மட்டுமே சீவவேண்டும். இஞ்சியின் சதைப்பகுதியைச் சேர்த்து சீவாமல் இருக்க வேண்டும். இஞ்சிக்கு நிறைய நெளிவு சுழிவுகள் இருப்பதால் தான் அதனை உணவில் நாம் நிறைய சேர்த்துக்கொண்டால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து நாமும் நெளிவு சுழிவுகளுடன் அழகிய தோற்றம் பெறமுடியும் போல.

இப்பொழுதெல்லாம் எதை வேண்டுமானாலும் தண்ணீரில் காய்ச்சி அதற்கு டீ என்று பேர் வைத்து பருகலாம். இந்தோனேசியாவில் ஒரு முறை இஞ்சி டீ என்று ஒரு மசாஜ் பார்லரில் புத்துணர்ச்சி பெற கொடுத்தார்கள். அது அவ்வளவு சுவையாக இருந்தது. வீட்டிற்கு வந்து நானும் அதனை செய்து பார்க்க முயற்சித்தேன். அங்கு கொடுத்த டீயின் அதே சுவை வரவில்லையென்றாலும் கிட்டத்தட்ட அதன் சுவை கிடைத்தது. இப்படியாகத்தான் இஞ்சி டீக்கு அடிமையாகி போனேன்.


வீட்டில் இருந்த இஞ்சிமரப்பாவை ஒரு சிறு துண்டு நறுக்கி என் மகனுக்கு சுவைக்க கொடுத்து பார்த்தேன். வாயில் வைத்த மறுகணமே ”தூ” என்று துப்பிவிட்டான். நல்ல வேளை நான் அவன் முகத்திற்கு நேராக நிற்கவில்லை.  ஒரு இருபது ஆண்டுகள் கழித்து அவனும் இஞ்சி டீ குடிப்பான். அப்பொழுது அவனுக்கும் அது எங்கேயோ பழக்கப்பட்ட சுவையாக தோன்றும் என நம்புகிறேன். இஞ்சி மரப்பாவை அக்காலகட்டத்தில் யாரும் செய்து விற்பார்களா என்பது கேள்விக்குறியே. மடிந்து கொண்டிருக்கும் பல உணவுகள் கொண்ட பட்டியலில்  இஞ்சி மரப்பாவும் அடங்கிவிடும். அதுவரையில் பிழைத்துக் கிடந்தால் நான் இஞ்சி மரப்பாவுடன் கூடிய நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டு  அது கிடைக்கும் காலம் வரை சுவைத்துக்கொண்டே இருப்பேன். பல நேரங்களில் உணவு கொடுக்கும் சுவையை விட அதனோடு தொடர்புடைய மனிதர்கள், நடந்த சம்பவங்கள், அதனை உண்ட இடங்கள், கொடுக்கும் நினைவுகளின் சுவையே ருசியானதாகிறது. என்னைப் பொறுத்தமட்டில் இஞ்சி மரப்பாவின் சுவையும் அத்தகைய ஒன்றே!

Wednesday, November 22, 2017

கருங் காடு.....




இவை என்ன
வெட்கம் உதிர்த்த
மரங்களா?
வானில் வேயப்பட்ட
கருஞ்சிலந்தி
வலையா?
விண்மீன்களை
பிடிக்க
விரிக்கப்பட்ட
மீன் வலையா?
அப்பால் உதிக்கும்
செங்கதிர்கள்
எமை அண்டாமல்
காக்கும்
உயர்ந்து வளர்ந்த
குச்சி வேலியா?
தேவர்கள்
சொர்க்கத்தில்
வர்ணம் பூசியப்பின்
தூக்கி எறிந்த
தூரிகைகளா?
சொத்து சுகம்
இழந்த பின்னும்
ஒருவொருக்கொருவர்
துணையாய் என்றும்
வாழ்வோம் என்னும்
கூட்டு குடும்பமா?
எத்துனை முறை
மடிந்தாலும்
மீண்டும்
உயிர்தெழுவோம் என்ற
நம்பிக்கையின்
வெளிப்பாடா?
தாய்மண் பிடிப்பு
இருக்கும் வரை
தலை நிமிர்ந்து
நிற்போம் என்ற
ஆணவச்செறுக்கா?
இல்லை , இயற்கையின்
துகில் உரிப்பு
ஒத்திகையா?
உயிர்தலும்
உதிர்தலுமே
வாழ்க்கையின் நியதி!
இதுவே இக்காட்டின்
மெளன சாட்சி!

Tuesday, November 21, 2017

காலை வேளை!

காலை வேளை!
வான் திரையில் இருந்து 
சிறு சிறு தூரல்கள்!
மடை திறந்த அணைபோல்
கொட்டித்தீர்க்க காத்திருக்கும்
திரண்டு நிற்கும் கருமேகம்!
விடிந்து விட்டதா இல்லையா
என்ற குழப்பத்தில்
விட்டு விட்டு
கவிபாடும் குருவிகளின்
குரலோசை!
சன்னல் திரைச்சீலையை
ஆடவிட்டு அழகு பார்க்கும்
சிலு சிலு காற்று!
தூரலில் நனைந்த
கருநிற உடை அணிந்த
சாலையில்,மெதுவாய்
ஊரும் சிறு, பெரு வாகனங்கள்!
அவை எழுப்பும் ஒலி!
இல்லவாசிகள் யாவரும்
கூட்டை விட்டு போனப்பின்
வீட்டில் நிலவும் அமைதி!
இஞ்சியும் ஏலமும்
மனம் கமகமக்கும்
டீ என் கையில் உள்ள
அழகிய சிகப்பு நிற கோப்பையில்!
மெல்லிய ஒலியில்
மனதைக் கவரும்
இளையராஜாவின் என்பதுகளில்
வந்த பாடல்கள்!
டீயை நா ருசிக்க,
இசையை காது ருசிக்க,
மழை சாரலை தேகம் ருசிக்க,
தரையில் நீர் கோலமிடும்
தூரலை கண்கள் ருசிக்க,
சன்னல் அருகே
தனிமையில் இனிமை
தேடும் நான்........

Wednesday, November 8, 2017

சாக்லெட் ருசி

சாயங்காலம் ஆறு மணி இருக்கும். நானும் என் தோழியும் நடைப்பயிற்சி முடிந்து வீடு நோக்கி  எங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு மிக அருகில் வந்துகொண்டிருந்தோம். அப்பொழுது எதிரில் ஒரு சீனத் தாய் தன் இரண்டு குழந்தைகளை கூட்டிக்கொண்டு எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தார். அதில் ஒன்று ஆண், ஒன்று பெண் குழந்தை. ஆண் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும். தனியாக விட்டால் ஓடிவிடும் என்பதனால்  அக்குழந்தையை தன் ஒரு கையில்  பிடித்துக்கொண்டும், மறு கையில் சில பைகளை பிடித்துக் கொண்டும் வந்து கொண்டிருந்தார். 

அவருக்கு பின்னால் சில அடிகள் தூரத்தில் அப்பெண் குழந்தை நடந்து வந்துகொண்டிருந்தது. அதற்கு ஒரு மூன்று வயது இருக்கும். இரண்டு  குழந்தைகளுக்குமான இடைவெளி மிக குறைவாகவே எனக்குப்பட்டது. அப்பெண் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வருவது போல் இருந்தது. பள்ளிச் சீருடையில் இருந்தது. அழகாக இரண்டு சிண்டு போட்டு இருந்தது. நெற்றியில் சில முடிகீற்றுக்கள் விழுந்து கண்களை அவ்வப்பொழுது மறைத்தது.  முதுகில் புத்தகப்பை மாட்டப்பட்டிருந்தது.நம் ஊர் போன்று சுமையானது கிடையாது அப்பை. அக்குழந்தை தூக்கக்கூடிய சுமையே. எங்களை கடந்து சென்ற போது  அக்குழந்தையை நான் மிக அருகில் பார்த்தேன். அதன் கையில் சாக்லெட் இருந்தது. அதை அது சாப்பிட்டுக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தது. வாய் முழுதும் சாக்லெட் அப்பி இருந்தது. நாக்கும் , பற்களும் காப்பிக் கொட்டை நிறத்தில் இருந்தத்டு. வாயின் இரு ஓரங்களிலும் சாக்லெட் பூசப்பட்டு இருந்தது. இரு கைகளாலும் சாக்லெட்டை கீழே விழாதவாறு பிடித்துக்கொண்டு ரசித்து ,நக்கிக் கொண்டே வந்தது. அவ்வப்பொழுது அதன் புத்தகப் பையின் வார், அக்குழந்தையின் தோள் நழுவி கீழே வரும். அதனை தன் சாக்லெட் பிடித்த கைகளைக் கொண்டு மேல் எடுத்து விடமுடியாததால் தன் தோள்பட்டையை மேல் தூக்கி பை கீழே விழாதவாறு கவனமாக நடந்து கொண்டிருந்தது. நெற்றியில் விழுந்த முடிகீற்றையும் தன் முழங்கை கொண்டே பின் தள்ளியது.

முன் நடந்து கொண்டிருந்த அம்மா, பின் நடப்பவைப் பற்றி கொஞ்சம் கூட ஏதும் அறிந்தமாதிரி தெரியவில்லை. அவர் மகனை பிடித்துக்கொண்டு , எப்படியும் மகள் தன் பின்னே நடந்து வந்து கொண்டிருப்பாள் என்ற நம்பிக்கையில் போய் கொண்டிருந்தார். அக்குழந்தைக்கோ சாலையில் போகும் யாரும் தன்னை பார்ப்பார்களே என்ற கூச்சமோ, நாச்சமோ இருக்கவில்லை. சாலையில் ஏதாவது கிடக்கிறதா, தன் எதிரில் யாரும் வருகிறார்களா, தன் பின்னே சைக்கிள் மணி ஓசை ஒலிக்கிறதா என்ற எந்த கவனமும் இருக்கவில்லை. அது தான்  குழந்தை மனம் போலும்.  கருமமே கண்ணாயிரமாக அழகாக சாக்லெட்டை சாப்பிட்டபடி லாடம் போட்ட குதிரை போன்று தன் அம்மாவின் பின்னால் நடந்து கொண்டிருந்தது.. அக்காட்சி பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.

இதை பார்த்து மகிழ்ந்த சில நொடிகளில் நான் என் தோழியிடம் ,”இதுவே நம் பிள்ளைகள் என்றால் இப்படி சந்தோஷமாக பார்த்து ரசிப்போமா? உடனே,” எப்படி பூசி வச்சு இருக்க பாரு, சாக்லெட் சாப்பிடாதனா கேக்கறியா, வீட்டுக்குப் போனப்புறம் சாப்டா என்ன? இப்போ உன் கையை , வாயை எப்படி கழுவி விடுவேன்? ரோட்ல போறவங்க எல்லாம் உன்னை வேடிக்கை பாக்கறாங்க பார்? “ என்றெல்லாம் ஒரு பிரசங்கமே நடத்தி இருக்க மாட்டோமா?,” என்றேன். அவரும் ,”அமாம் , அமாம் நீங்க சொல்றது சரிதான்,”என்று என் சொற்களை ஆமோதித்தார்.

சில தினங்களுக்கு முன் தான் ஹாலோவீன் திருவிழா முடிந்திருந்தது. நல்ல வேளை என் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள். இல்லையென்றால் ட்ரிக் ஆர் ட்ரீட் என்ற பேரில் ஒரு பை நிறைய சாக்லெட் வீடு வந்து சேரும். அதில் வேறு பங்கு பிரியல் , ட்ரேடிங் நடக்கும். ஒரு வாரத்திற்கு சாயங்காலம் சிற்றுண்டி அந்த சாக்லெட் தான். சண்டை வேறு நடக்கும். எனக்கு பிடித்த சாக்லெட்டை யார் எடுத்தது என்று ரகளையே நடக்கும். வீடு முழுதும் சாக்லெட் காகிதம் எந்நேரமும் கண்ணில் படும். இப்பொழுது அக்காட்சிகள் எல்லாம் நம் வீட்டில் இல்லை என்று சந்தோஷப்படுவதா அல்லது பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் என்று நினைப்பதா ?


 ஒன்று மட்டும் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எப்பொழுதாவது பத்தாவது படிக்கும் என்  மகனின் முதலை வாய் போன்று திறந்தே இருக்கும் புத்தகப் பையின் உள்ளே கைவிட்டு பார்க்க நேர்ந்தால் அதில் சாக்லெட் காகிதம், பிஸ்கெட் காகிதம் என்று இருக்கத்தான் செய்கிறது. அம்மாவிற்கு தெரியாமல் ஒளித்து வைக்கும் இடம் அதுதான். ஆனால் அது சரியாக என் கண்களில் தான் அகப்படும். சில நேரம் துவைத்து வரும் பள்ளி சீருடையின் பாக்கெட்டில் இருக்கும். ஊரார் பிள்ளை வாய் முழுதும் பூசிக்கொண்டு சாக்லெட் சாப்பிடுவதை ரசிக்கும் நான் என் வீட்டில் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்வது எதனால்? சாக்லெட் சாப்பிட்டால் பூச்சிப்பல் வரும், சாப்பிட்டப்பின் வாய் கொப்பளித்தாயா? சாக்லெட் சாப்பிட்டால் முகத்தில் பரு வரும் என்று ஒவ்வொரு வயதிற்கும் சாக்லெட் ஏன் சாப்பிடக்கூடாது என்று ஒரு  காரணத்தை கண்டு பிடித்து வைத்திருக்கிறேன்.

ஒரு முறை என் தந்தை எங்களை கடலூரில் இருக்கும் இ.ஐ.டி பாரி சாக்லெட் நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே அவரின் நண்பர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். நிறுவனத்தை சுற்றிப் பார்த்த பொழுது அவர்கள் என்னிடமும் என் தங்கையிடமும்,” ஃபாக்டரிக்குள் நீங்கள் எவ்வளவு சாக்லெட் வேண்டுமானாலும் சாப்பிடலாம் ஆனால் வெளியில் எடுத்துச்செல்லக் கூடாது,” என்றார்கள். ஆசை யாரை விட்டது. காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் நுழைந்தது போல் முடிந்தமட்டும் வாய் நிறைய சாக்லெட்டை வைத்து அடைத்துக் கொண்டோம். ஆனாலும் ஆசை விடவில்லை. சில எக்லெர்ஸ் சாக்லெட்டை (பேப்பர் கிடையாது) எடுத்து சட்டைக்குள் போட்டுக் கொண்டேன். ஃபாக்டரி முழுதும் சுற்றிப்பார்த்துவிட்டு வீட்டிற்கு போகும் நேரம் வந்ததும் சட்டைக்குள் இருந்த சாக்லெட் பிசு பிசுக்க ஆரம்பித்தது. அதுவரை ஃபாக்டெரி முழுதும் அதிகமான ஏசி ஆதலால் சாக்லெட் உருக வில்லை. வெளியில் வந்தது தான் . எல்லாம் உருக ஆரம்பித்து சட்டையில் அங்கும் இங்குமாக ஒட்டிக் கொண்டு என்னை காட்டிக் கொடுக்க சாட்சியாய் நின்றது. இதை பார்த்த எங்கள் டிரைவர்,” பாப்பா, இப்போ பாரு உன்ன உள்ள புடுச்சு வச்சுக்க போறாங்க,”என்று வேறு பயமுறுத்தினார். எங்கே அங்கு இன்னும் சிறுது நேரம் நின்றால் , விடை பெற்றுக்கொள்ள காத்துக்கொண்டிருக்கும் என் தந்தையின் நண்பரிடம் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்று பயம். திருடனுக்கு  தேள் கொட்டியது போல்,”அம்மா வா சீக்கிரமா காருக்கு போகலாம், எனக்கும் கால் வலிக்குது,” என்று ஏதோ சாக்கு போக்கு கூறி காரில் சென்று அமர்ந்து கொண்டேன்.  வீட்டிற்கு சென்ற உடன் உடையை மாற்ற கழற்றினால் உடல் முழுதும் ஒரே பிசு பிசுப்பு.  சாக்லெட் உருகி உடல் முழுதும் பூசி இருந்தது. மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல், மெதுவாக குளியல் அறை சென்று குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டேன். சாக்லெட் எல்லாம் வீனாகி போனதே என்ற சோகம் வேறு. மறுநாள் அம்மா துணி துவைக்க துணியை எடுத்த பொழுதுதான் அதில் உலா வந்த  எரும்புகள் மூலம் என் குட்டு உடைந்தது.

நான் சிறுமியாக இருந்த பொழுது என் தாய் கடைக்கு போய்விட்டு வரும் பொழுதெல்லாம் தங்க நிற காகிதம் சுற்றிய வட்டமான அந்த தங்க காசு போன்ற சாக்லெட் வாங்கி வருவார். அதனை பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக கடித்து, ருசித்து, நாக்கிற்கும் மேல்வாய்க்கும் நடுவில் வைத்து சிறிது நேரம் அநுபவித்து சாப்பிடும் பொழுது ஏதோ காணக்கிடைக்காதது கிடைத்தது போன்ற மகிழ்ச்சி ஏற்படும். அதுமட்டுமல்ல அதை நிஜ தங்க காசை மென்று சாப்பிடுவது போன்று நிதானமாக ரசித்து விழுங்கியதுண்டு. எனக்கு இரண்டரை வயது ஆகும் வரை சாக்லெட் என்றால் என்ன என்றே தெரியாதாம். அதன் பிறகு வீட்டிற்கு வந்த யாரோ வாங்கி வந்து ருசி காட்டி விட்டார்களாம். அதன் பின் நான் ருசி கண்ட பூனை ஆகிவிட்டேனாம்.

இப்பொழுதெல்லாம் அந்த ருசியின் பால் இருந்த மோகம் என்னவாயிற்று என்று தெரியவில்லை. எப்பொழுதாவது தான் சாக்லெட் சாப்பிடும் ஆசை வருகிறது. அதுவும் உடம்பிற்கு நல்லது நல்லது என்று எல்லோரும் கூவக்கேட்ட டார்க் சாக்லெட்டை ஏதோ வேண்டா வெறுப்பாக சாப்பிடுவேன். பல ஆண்டுகளாக ரசித்து ருசித்த பல உணவுகளின் மேல் இருந்த ஆர்வம் குறைய குறையத்தான் ஆஹா நமக்கு வயதாகிறது என்ற நிதர்சனத்தை உணரமுடிகிறது.   சிறு வயதில் பிடித்த பல உணவுகள் இப்பொழுது பிடிப்பதில்லை. இப்பொழுதெல்லாம் வயிற்றிற்கு எது உகந்ததோ அது தான் நாக்கிற்கு ருசி சேர்க்கிறது. இதனை உணரும் பொழுது குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த சில உணவுகளை குழந்தையாக இருக்கும் பொழுது உண்டு மகிழட்டும் . எப்படியும் ஒரு வயதிற்கு அப்புறம் இதை சாப்பிடக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது என்று ஆகிவிடும் என்று தோன்றுகிறது. ஒன்று நிச்சயம், அமிர்தமே ஆனாலும் அளவிற்கு மீறினால் நஞ்சாகிவிடும்.