Friday, November 25, 2011

இப்போ என்ன செய்வேன்??

அன்று என் மகனுக்கு மட்டும் பள்ளி விடுமுறை.  மகள் பள்ளிக்குச் சென்று விட்டாள்.  வழக்கமாக பள்ளி இருக்கும் நாட்களில் அவனை நான் தண்ணீர் ஊற்றி எழுப்பாதது தான் பாக்கி. தொண்டை வறண்டு போகும் வரை “ரிஷி எழுந்திரி, ரிஷி எழுந்திரி, ஸ்கூலுக்கு டைம் ஆயிடுச்சு, லேட் ஆகுது” என்று தேய்ந்த ரெக்கார்டாய் கத்திக்கொண்டே இருப்பேன். அது என்னவோ செவிடன் காதில் சங்கு ஊதிய கதை தான் தினமும். இரவு சீக்கிரமாக தூங்கச் சொன்னால் அது  ஒரு குற்றச்செயல் போன்று அவனுக்குத் தோன்றும்.  அவன் தூங்கி விட்டால் அவனுக்குத் தெரியாமல் இந்த உலகில் பல விஷயங்கள் நடந்தேறி விடுமோ என்ற அச்சம் போலும்.  சீக்கிரம் தூங்கினால் தானே சீக்கிரமாக எழ முடியும்? படுக்கச் சொன்னால் அப்பொழுது தான்  அவன் தன் விளையாட்டுப் பொருக்களை   பல நாட்கள் காணாதது போல் எடுத்து வைத்து விளையாட ஆரம்பிப்பான். பின் அவற்றை நான் தான் பொறுக்கி வைக்க வேண்டும்.  ஒவ்வொரு நாள் இரவும் தான் எனக்கு, இனி எந்தப் பொருளும் புதிதாக வாங்கிக் கொடுக்கக் கூடாது என்று தோன்றும்.  ஆனால் அந்த முடிவு குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு கதை தான்.  ஒரு வழியாக விளக்குகளை அணைத்துவிட்டு தூங்க வைப்பதற்குள் எனக்கு தூக்கம் வந்து விடும். தினமும் காலையில் என் “எழுந்திரி ரிஷி சுப்ரபாதம்” ஒலித்துக்கொண்டே தான் இருக்கும் ஆனாலும்  அவன் தன் இஷ்டம் போல தான் எழுவான், கிளம்புவான்.  பஸ் வந்துவிடும் என்று நான் தான் அடித்துக்கொள்வேன். அவன் தன் பாட்டிற்கு ஆடி அசைந்து கிளம்புவான். இது தினமும் அரங்கேறும் காட்சி ஆதாலால் நான் எவ்வளவு கத்தினாலும் அவன் , (சொல்லக்கூடாது தான் ஆனால் என்ன செய்வது ? கோழி மிதித்தா குஞ்சு நொடமாகும்?) எருமை மாட்டில் மழை பெய்தது போல் தன் போக்கிற்கு போவான்.


பள்ளி நாட்களில் தான் இப்படி சீக்கிரமாக எழுந்து விட வேண்டியதாகி விடுகிறதே, விடுமுறை நாட்களில் நன்றாக தூங்கட்டும் என்று நான் நினைத்துக்கொண்டு எழுப்பாமல் விட்டுவிடுவேன்.  ஆனால் விடுமுறை நாட்களில் நான் எழுப்பாமலேயே சங்கு ஊதியது போல் ”ட்டான் ” என்று அவனாக எழுந்து விடுவான்.  அன்றும் அப்படித்தான்.  காலை 7.30க்கே எழுந்து உட்கார்ந்து கொண்டான். ஆஹா இன்று நாமும் கொஞ்சம் நேரம் தூங்கலாம் என்ற என் கனவிற்கு முற்று புள்ளி வைத்துவிட்டான்.  எழுந்த உடனேயே “அம்மா நான் என்ன செய்வேன்?” என்று கேட்டான்.  என்னுடையதும் வழக்கமான பதில் தான்.” போய் முதலில் பல் தேய்த்து விட்டு வா, காம்ளான் தருகிறேன் குடித்து விட்டு ஹோம் வொர்க் இருந்தால் எடுத்து செய் “ என்றேன்.  “இல்லை எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் படுக்க வேண்டும் போல் உள்ளது”, என்றான்.  நான் மட்டும் அந்த ஹோம் வொர்க் என்ற வார்த்தையை உபயோகிக்காமல் இருந்திருந்தால் அவன் எழுந்திருத்திருப்பான்.  ஹோம்வொர்க் என்ற வார்த்தையை கேட்ட உடன் ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்ததை போல் உணர்ந்து மீண்டும் ஒரு அரை மணி நேரம் படுக்கையிலேயே உருண்டு பிரண்டு கொண்டிருந்தான்.  என் கணவர் அதட்டியதை கேட்டு பின் எழுந்து விட்டான்.  எப்படியோ என்னை தூங்காமல் செய்து விட்டான்.


 பல் துலக்கி, பால் அருந்தியப்பின் டிவி ரிமோட்டை எடுத்து ஆன் செய்து சோபாவில் செட்டில் ஆகிவிட்டான்.  ”சரி ஒரு அரை மணி நேரம் டிவி பார்த்து விட்டு அடுத்து படி என்றேன்.  சரி , இல்லை என்ற எந்த பதிலும் எனக்கு கிடைக்கவில்லை.  இது ஒன்றும் எனக்கு புதிதல்ல. என் கணவரும் இதையே தான் செய்வார். சில நேரம் டிவி பார்க்கும் பொழுது வாயில் குச்சியை விட்டு பதிலை பிடுங்க வேண்டும் போல் தோன்றும்.  தந்தை எவ்வழியோ மகனும் அவ்வழி.  அடுப்படியில் எனக்கு வேளை இருந்ததால் நானும் நேரத்தை கவனிக்க தவறி விட்டேன்.  ஒரு மணி நேரம் டிவி பார்த்து விட்டு பின் நான் காலை சிற்றுண்டி சாப்பிட அழைத்தமையால் மனமே இல்லாமல் டிவியை அணைத்து விட்டு சாப்பிட அமர்ந்தான். அது ஏனோ தெரியவில்லை, டிவியை போடும் பொழுது ரிமோர்ட் கண்ட்ரோல் உடனே கைக்கு கிடைத்து விடும் ஆனால் அதனை off செய்யச் சொல்லும் பொழுது மட்டும் ஒரு நாளும் உடனே கைக்கு கிடைக்காது. அதை தேடுவதை போல் ஒரு பத்து நிமிடம் பாவ்லா நடக்கும்.  என் குரல் உச்சசுருதியை அடையாமல் எந்த வேளையும் நடக்காது.  அரை மணிக்கு மேல் ஆகியும் தட்டில் வைத்திருந்த இரண்டு தோசையும் அப்படியே இருந்தது. சாப்பிடு, சாப்பிடு என்று பின் பாட்டு பாடிக்கொண்டே இருந்தேன். ஒரு மணி நேரம் அதில் கடந்தது. ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தான்.  “அம்மா இப்போ நான் என்ன செய்வேன்? என்று ஆரம்பித்தான். ” கொஞ்சம் நேரம் படிடா” என்றேன்.  நான் சொன்னதிற்காக ஒரு பத்து நிமிடம் ஏதோ பாட புத்தகங்களை உருட்டினான்.  திரும்பவும் என்னிடம் வந்து “அம்மா போர் அடிக்குது, இப்போ நான் என்ன செய்வேன்? என்றான்.  இன்று முழுதும் இந்த கேள்வியை இன்னும்   எத்துனை முறை நான் கேட்க வேண்டுமோ தெரியவில்லையே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்.



 அவன் தன் நண்பனுக்கு போன் செய்து பார்த்தான்.  அவனும் வீட்டில் இல்லை.  “அம்மா ப்ளீஸ் கொஞ்ச நேரம் நான் என் விடீயோ கேம் விளையாடட்டுமா?” என்று பாவமாக கேட்டான். அப்படி கெஞ்சி உருகி கேட்கும் போது உருகாத மனமும் தான் உண்டோ? சரி என்று அரை மணி நேரம் விளையாட அனுமதித்தேன்.  அந்த அரை மணி நேரமும் முக்கால் மணி நேரமாக விரிவடைந்து முடிந்தது.  மதிய சாப்பாட்டு  நேரம் வந்து விட்டதால் இருவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தோம்.   நான் சாப்பிட்டு விட்டு எழுந்த அடுத்த அரை மணி நேரத்தில் அவனும் ஒரு வழியாக சாப்பிட்டு எழுந்தான்.  உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு அல்லவா ? எனக்கு தினமும் ஒரு அரை மணி நேரம் மதியம் சாப்பிட்ட பின் உறங்கி பழக்கமாகி விட்டதால் தூக்கம் என் கண்களை தழுவியது.  “ரிஷி வா நாம் இருவரும் கொஞ்சம் படுத்து தூங்கலாம்”, என்றேன்.  அதான் ஏற்கனவே கூறியிருகிறேனே, தூங்குவது, அதுவும் பகலில் தூங்குவது அவனை பொருத்தவரையில் ஒரு குற்றச்செயல்.  படுக்க மறுத்துவிட்டு, என்னையும் தூங்க விடாமல் “அம்மா, I am feeling bored, what do I do now,",என்று என்னை நச்சரித்துக்கொண்டே இருந்தான்.



 அவன் அக்காள் இருந்தால் ஏதோ இருவரும் கொஞ்சநேரம் சண்டையாவது போட்டுக்கொண்டு நேரத்தை கழிப்பார்கள்.  சிறிது நேரம் கதை புத்தகம் வாசித்தான். மீண்டும் என்னிடம் வந்து அதே, “இப்போ நான் என்ன செய்வது” என்ற கேள்வியை கேட்டான்.  இருவரும் ஏதாவது போர்ட் கேம் விளையாடலாம் என்று முடிவு செய்து சிறிது நேரம் ‘மாஸ்டர் மைண்ட்” என்ற கேம் விளையாடினோம்.  அதுவும் சிறிது நேரத்தில் அவனுக்கு போர் அடித்து விட்டது.  அதை மூட்டை கட்டி வைத்து விட்டு “போய் நன்றாக குளித்து விட்டு வா” என்றேன்.  தண்ணீரில் சிறிது நேரம் விளையாடினால் ஆவது என்னை நச்சரிக்க மாட்டான், அவனுக்கு பொழுதும் கொஞ்சம் போகும்  என்ற நினைப்பு எனக்கு.  என் தோழியிடம்  இருந்து எனக்கு போன் வந்தது.  பிறகு கூப்பிடுகிறேன் என்று கூறிவிட்டு வைத்து விட்டேன். ஏனென்றால் அவன் வீட்டில் இருக்கும் பொழுது நான் யாரிடமும் போனில் பேச முடியாது. இது தான் சாக்கு என்று உடனே டிவியை ஆன் செய்து விட்டு பார்க்க ஆரம்பித்து விடுவான். இல்லையேல் , கம்ப்யூட்டரில் கேம் விளையாட ஆரம்பித்து விடுவான்.  நானும் போனில் சுவாரஸ்சியமாக பேசிக்கொண்டிருந்தால் கவணிக்க மறந்து விடுவேன் அல்லது கண்டும் காணாதது போல் விட்டு விடுவேன். இது தான் சமயம் என்று அவனும் சந்தில் சிந்து பாடி விட்டு போய்விவான்.  எல்லா பெற்றோருக்கும் இருக்கும் வீக் பாயிண்ட்டே இது தான்.  குழந்தைகளும் இதனை நன்றாக புரிந்து கொண்டு நாம் போனில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான் அவர்களுக்கு வேண்டியதை சாதித்து கொள்வார்கள்.

மாலை என் மகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பினாள்.  இப்பொழுது அவள் பங்கிற்கு அவள் டீவி முன் அமர்ந்தாள். அவள் பார்க்கும் பொழுது அவளுடன் இவனும் சேர்ந்து கொண்டு பார்க்க ஆரம்பித்தான்.  பின் மாலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, கீழே அவன் தன் நண்பர்களுடன் விளையாட போய் விட்டான்.  எனக்கு ஒரு பிரளயமே முடிந்தது போல் இருந்தது.  இனி “ I am bored , what do I do now" என்ற கேள்வியை இன்று இதற்கு மேல் கேட்க வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு  என் மாலை வேளைகளை நான் தொடர ஆரம்பித்தேன்.  வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது பல கேள்விகள் எனக்குள் தோன்ற ஆரம்பித்தன. இந்த ஒரு நாள் விடுமுறை எனக்கு பல உண்மைகளை உணர வைத்தது. இக்கால குழந்தைகளுக்கு டிவி, விடியோ கேம், மொபைல் போன், கம்ப்யூட்டரை விட்டால் விளையாட வேறு எதிலும் நாட்டம் இல்லை. அது மட்டுமல்ல போர்ட் கேம்ஸ் விளையாட பொருமை இல்லை. நான் பத்து வயது சிறுமியாக இருந்த பொழுது என் பிறந்தநாளுக்கு என் மாமா ஒருவர் “ட்ரேட்” என்ற போர்ட் கேமை வாங்கி தந்தார். நான் அதனை பொக்கிஷமாக போற்றி விளையாடுவேன்.  விடுமுறை நாட்களில் என் பெற்றோருடன் சீட்டுக்கட்டு விளையாடுவது உண்டு.  நண்பர்களுடன் சொப்புச் சாமான், டீச்சர் விளையாட்டு, திருடன் போலீஸ் விளையாட்டு, தாயம், பல்லாங்குழி,  என்று பலவாறு விளையாடியதுண்டு.  ஆனால் இன்று என் மகனின் நண்பர்கள் எங்கள் வீட்டிற்கு வந்தாலும் சரி அல்லது இவன் அவர்களின் வீட்டிற்குச் சென்றாலும் சரி உடனே ஏதாவது ஒரு electronic gadgetயை வைத்துக்கொண்டு தான் விளையாட ஆசைப் படுகிறார்கள்.  அவை இல்லை என்றால் உலகமே இருண்டது போன்று அவர்களுக்கு தோன்றுகிறது.  செய்வதறியாது தவிக்கிறார்கள்.  அவற்றை வைத்தில்லாதவர்களை வேற்று கிரக மக்களை பார்ப்பதை போன்று பார்க்கிறார்கள்.  சில சமயம் ஒருத்தன் மட்டும் ஏதாவதொரு வீடியோ கேம் வைத்து இருப்பான்.  அதுவரை ஓடி விளையாடிய மற்றவர்கள் அந்த வீடியோ கேமை பார்த்தவுடன் விளையாடுவதை விட்டு விட்டு பலா பழத்தை மொய்க்கும் ஈக்கள் மாதிரி அந்த ஒருவனை சுற்றி நின்று கொண்டு தலை கவிழ்ந்து , தன் நிலை மறந்து பார்த்துக்கொண்டிருப்பார்கள்.  வீடியோ கேம் வைத்திருக்கும் அவன் தான் அந்த நிமிட ஹீரோ.  விளையாட வேண்டிய அவசியம்கூட இல்லை அதனை பார்த்துக்கொண்டு இருந்தாலே பிறந்த பயனை அடைந்து விட்டதாக ஆனந்தமாக காணப்படுவார்கள்.  அந்த gadgets மேல் அவர்களுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு..


பெற்றோராகிய நமக்கும் அவர்களுடன் விளையாட பொறுமை இருப்பது  இல்லை.  அப்பொழுது எல்லாம் தாத்தா, பாட்டி  அத்தை, மாமா,என்று யாராவது ஒருவர் கூட இருந்தார்கள். வேலை பளுவை பகிர்ந்து கொண்டார்கள். தனித்தனி தீவுகளாக வாழும் நமக்கு கிடைக்கும் கொஞ்ச நேரத்தை அக்கடா என்று கழிக்கத்தோன்றுகிறது. நம்மை தொந்தரவு செய்யாமல் ஏதாவது அமைதியாக செய்தால் சரி என்று நாமும் குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு விடுகிறோம். நீண்ட தூர பயணங்களின் போது முன்பெல்லாம் இயற்கையை ரசிக்க நம் பெற்றோர் கற்றுக்கொடுத்தார்கள். மரம், செடி, கொடி, இயற்கை காட்சிகள், மக்கள், என எல்லாவற்றையும் ரசித்து வழியில் கிடைத்த தின்பண்டங்களை கேட்டு வாங்கி சாப்பிட்டு சந்தோஷம் அடைந்தோம். ஆனால் இப்பொழுதோ பயணத்தின் போது நம்மை தொந்தரவு செய்யகூடாது என நினைத்து ஒரு வீடியோ கேமையோ, மொபைலையோ, அல்லது எல்லாவற்றிற்கும் மேலாக, ஒவ்வொரு சீட்டுக்கும் பின் பக்கத்திலேயே ஒரு டிவி ஸ்கீரீன் வைத்து அவரவர் விருப்பத்திற்கேற்ப படங்களை போட்டு காண்பிக்கிறோம்.  சண்டை வராமல் இருக்க அதிலும் தனித்தனி ஸ்கிரீன். யாரும் யாருடனும் பேசும் சந்தர்ப்பத்தையே ஏற்படுத்துவதில்லை.   அவர்களுடன் பேசிக்கொண்டே பயணிக்க அலுப்படைகிறோம்.  என் தந்தை பயணங்களின் போது எங்களுக்கு பல விஷயங்களை சொல்லிக்கொடுத்தது நினைவிற்கு வருகிறது. என் தந்தை எங்களுக்கு செய்ததை நான் என் குழந்தைகளுக்கு செய்ய அலுப்படைகிறேன்.  இது தான் காலக்கோலாறு என்பதா??


 ஓடும் வண்டியில் இப்படி பார்ப்பது  கண்களுக்கு எவ்வளவு கெடுதல்?இதனை நாம் உணர்ந்தாலும் அப்பொழுதிற்கு நமக்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்கிறோம்.  பிள்ளைகளை சந்தோஷமாக வைத்துக்கொள்கிறோம் என்ற பேரில் அவர்களின் உடல் கேட்டிற்கு நாமே வித்திடுகிறோம்.     இதனால் கண்ட பலன் என்ன தெரியுமா? அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு தெரிவதில்லை.  அவர்களுக்கென்று ஒரு உலகத்திலேயே வலம் வருகிறார்கள். அதனை விட்டு அவர்களை வெளியில் இழுத்தால் தண்ணீரில் இருந்து வெளியே எடுக்கப் பட்ட மீனாய் தவிக்கிறார்கள். மேலும், சிறு வயதிலேயே குழந்தைகள் பலர் கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.  பல குழந்தைகள் உட்கார்ந்தே விளையாடுவதால் உடல் பருமனாகி அவதிக்குள்ளாகிறார்கள்.  இப்பொழுது காட்டுத்தீயாய் நம்மை சுட ஆரம்பித்திற்கும் சக்கரை வியாதிக்கு மூல காரணமே மாறிப் போன நம் வாழ்க்கை முறை தான்.  அதுவும் நம்முடைய அடுத்த தலை முறையினர் இந்த கொடிய நோய்க்கு கணக்கில்லாமல் ஆளாகி வருகிறார்கள்.    நம் வாழ்க்கை முறை மாறியதற்கு யாரை குறை கூற முடியும்? நாம் யாரையும் குறை கூறாமல் பொறுப்பை நம் மேல் சுமந்து நம்முடைய குழந்தைகளை இந்த 'gadget addiction" லிருந்து காக்கவேண்டும்.


 மாறிவரும் இந்த சூழல்களால் ஏற்படும் தீமையை உணர்ந்த  CBSE board, "integrity club"  என்ற ஒரு அமைப்பை பள்ளிகளில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.  இதன் நோக்கம் என்ன வென்றால் குழந்தைகளுக்கு, டிவி, கம்ப்யூட்டர் , தொலைபேசி இல்லா வேறு உலகை அவர்கள் முன் காட்டுவது.  வாழ்க்கை கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது, இயற்கையை ரசித்து அதனுடன் ஒன்றி வாழ்வது போன்றதை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது தான் இதன் நோக்கம். .  Moral values என்றால் என்ன , எப்படியெல்லாம் நம் வாழ்வில் அது முக்கியமானது என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பதும் அதன் மற்றொரு நோக்கமாக பார்க்கப்படுகிறது. .  முன்னொரு காலத்தில் எதார்த்தமாக நாம் கற்றுக்கொண்ட பல நல்ல விஷயங்களை இன்று “க்ளப்” வைத்து சொல்லிக்கொடுக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.  சுற்றத்தார், உறவினர்கள், நண்பர்கள், சமுதாயம் என்று எல்லா பக்கங்களிலிருந்தும் நாம் பல விஷயங்களை கிரகித்து கற்றுக்கொண்டோம். ஆனால் இன்று  நமக்குத்தான் எல்லாவற்றிற்கும் soft ware உள்ளதே. நம் குழந்தைகளுக்கு ஏதாவது கற்றுத்தர வேண்டும் என்றால் உடனே சந்தையில் கிடைக்கும் சிடியை வாங்கி கொடுத்து விடுகிறோம். நல்லது கெட்டது எதையுமே குழந்தைகளுடன் அவர்ந்து , பேசி புரிய வைக்க நமக்கு நேரம் இருப்பது இல்லை.  இல்லாவிட்டால் எதற்கெடுத்தாலும் கிளாஸிற்கு அனுப்புகிறோம்.  Dance class, art class, music class, grooming class, tuition class, coaching class  என்று எல்லாவற்றிற்கும் வகுப்புக்கள் காளானைப் போல் முளைத்துவிட்டன. பின் நாம் ஏன் வீணாக நம்மை வருத்திக்கொண்டு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இப்பொழுது பெற்றோரிடத்தில் வேரூன்றிவிட்டது.  இதற்கெல்லாம் காசை செலவிட யோசிக்காத நாம் நம் நேரத்தை குழந்தைகளுடன் செலவழிக்க யோசிக்கின்றோம்.   கூகுளும் , யூ ட்யூபும் தான் இன்று பல குழந்தைகளுக்கு பெற்றோர் செய்ய வேண்டியதை செய்கிறது.   இன்னும் சில காலம் கழித்து சக மனிதர்களுடன் பேசுவது எப்படி என்பதற்கும் வகுப்புக்களோ அல்லது சிடிக்களோ வந்துவிடும். 




அதுவும் வேளைக்குப்போகும் பெற்றோர்கள் தங்களால் தங்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என்ற காரணத்தால் குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சந்தோஷப்படவைக்கிறார்கள். அவர்களையும் அறியாமல் குழந்தைகளின் இந்த gadget addictionக்கு அவர்களே காரணமாகி  விடுகிறார்கள்.    சில பெற்றோருக்கு, ‘ என் பிள்ளை எல்லாவற்றையும் டிவி பார்த்தே கத்துக்கிட்டான்.  மொபைல் போனில் எனக்கு தெரியாத applications  கூட அவனுக்கு தெரியும். அவனே எல்லாவற்றையும் டவுன்லோட் பண்ணிவிடுவான்.  கம்ப்யூட்டரில் அவனுக்கு தெரியாத விஷயமில்லை, நான் எதுவுமே அவனுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. தானாகவே கத்துக்கொள்வான்,” என்ற பெருமை வேறு.  அப்படி பட்ட பெற்றோருக்கு என்னிடம் உள்ள கேள்வி என்ன தெரியுமா? “பின்  உங்களுக்கு உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் என்ன பங்கு? காசு சம்பாதித்து சேர்ப்பது தான் உங்கள் பங்கா?  இந்த முறை மாற வேண்டும். Parents should spend quality time with the children.   இதன் மூலம் தான் மனித நேயம் , உறவுகள் , பற்றி அவர்களுக்கு புரியவைக்க முடியும் . இல்லையேல் நம் குழந்தைகள், gadgets உடன் தான் வாழ்க்கையை வாழ முடியும்.   வாழ்க்கையில் அன்பு, பாசம், நேசம், புரிதல், விட்டுக்கொடுத்தல், பகிர்தல் என பல அழகான விஷயங்கள் இருக்கின்றன. நம்முடைய இந்த பண வேட்டையில் நம் குழந்தைகளை நாம் கவனிக்க மறந்து அவர்களை "consumerism' என்ற வலையில் சிக்க வைத்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குகிறோம்.  இப்படியே இந்த காலாச்சாரம் தொடருமானால் எதிர்காலத்தில் வயதான பின் ரோபோக்கள் தான் நமக்கு பிள்ளைகளாக இருக்க முடியும்.  ரத்தமும் , சதையுமான மனித உறவுகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.  நம் சந்ததியினரை மனிதர்களாக வாழ வழி நடத்துவதா இல்லை மனித ரோபோக்களாக வாழ வழி செய்வதா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.  என் தேடுதல் மீண்டும் தொடரும்......

Friday, November 11, 2011

எங்கே போகிறோம்--ஒரு தேடல்

என் இனிய தமிழ் மக்களே!! நீண்ட இடைவெளிக்குப்பின் உங்கள் யாவரையும் சந்திப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இவ்வளவு நாட்கள் எழுதாமல் மீண்டும் எழுத நிணைத்தால், நம்மால் முடியுமா என்ற சந்தேகம் மனதில் அரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் கையில் கல்லை எடுத்துவிட்டேன். விழுந்தால் மாங்காய் இல்லையேல் கல் தானே!! யாரும் அடிபடாமல் பார்த்துக்கொண்டால் போச்சு என்ற துணிச்சலோடு கலத்தில் குதித்து விட்டேன்.  இந்தியா இடம் பெயர்ந்ததிலிருந்து என்னை பல விஷயங்கள் யோசிக்க வைத்துள்ளன.  என்னடா இவளுக்கு இப்பொழுதுதான் மூளை வேலை செய்கிறதா என்ற எண்ணம் பலருக்கு தோண்றலாம்.  இத்தனை வருடங்களாக  வேற்று மண்ணில் பார்த்த பல விஷயங்கள் நம் சொந்த மண்ணில் நடக்கும் பொழுது சில வியப்பளிக்கின்றன பல கவலைப்பட வைக்கின்றன.  இதனை யோசித்துத்தான் நான் “எங்கே போகிறோம்” என்ற தலைப்பில் சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள(ல்ல) பிரியப்படுகிறேன். வாருங்கள் சேர்ந்தே பயணிப்போம்.........


செவ்வாய் கிழமை மாலை பள்ளி முடிந்து என் பிள்ளைகள் இருவரும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார்கள். நானும் “ஆஹா காலை முதல் மாலை வரை நம்மை பார்க்காமல் இப்பொழுது பார்த்தவுடன் இவர்களுக்கு என்ன ஒரு சந்தோஷம் என்று என்னை நானே நினைத்து பெருமை பட்டுக்கொண்டேன். வழக்கமான, “ஸ்கூல் எப்படி இருந்தது? என்ற கேள்வியை கேட்டேன். “அம்மா ஸ்கூல் as usual was good,  எங்கள் நண்பர்கள் எங்களை அவர்களின் பிறந்த நாள் விழாவிற்கு அழைத்து இருக்கிறார்கள் என்றார்கள்.  ஓ இது தான் இவர்களின் சந்தோஷத்திற்கான காரணமா என்று தெரிந்தப்பின் ஒரு பெருமூச்சு விட்டு விட்டு வேளையை தொடர்ந்தேன்.  பெருமூச்சுக்குத்தான் எத்தனை சக்தி.  கவலையாய் இருந்த்தாலும் சரி, பொறாமையானாலும் சரி, நிறைவானாலும் சரி,துக்கமானாலும் சரி, சந்தோஷமானாலும் சரி,ஆத்திரமானாலும் சரி, ஆதங்கமானாலும் சரி,அரவணைப்பானாலும் சரி,  எதுவானாலும் ஒரு பெருமூச்சிலேயே வெளிப்படுத்த முடியும். மூச்சுக்குத்தான் எத்துனை சக்தி.  அதனால் தான் மூச்சுப்பயிற்சி செய்யச்சொல்கிறார்களோ?? ஒரு செய்கையில் எத்துனை விதமான வெளிப்பாடுகள்!!! சரி தடம் மாறிப்போகும் முன் வந்த வேளையை கவனிப்போம்.



என் மகளின் வகுப்பில் படிக்கும் சக மாணவன் தன்  பிறந்த நாளை வெள்ளியன்று மாலை தன் வீட்டில் கொண்டாடுவதற்காக அழைத்து இருந்தான்.  மாலை என்பதால் நான் அனுமதி மறுத்தேன். எனக்கும் என் மகளுக்கும் இரண்டாம் போர் மூளும் அபாயம் தெரிந்தது.  இரவு நேரத்தில் பரீட்ச்சியமில்லா ஒருவரின் வீட்டிற்கு அனுப்ப எனக்கு விருப்பமில்லை. அவர்களே கொண்டுவந்து வீட்டில் விடுவதாக கூறினாள். ஆனாலும் நான் மசியவில்லை.  உடனே என் கணவருக்கு போன் செய்து அனுமதி கேட்டாள்.  அப்பா எப்படியும் சரி என்பார் என்ற அவளின் நம்பிக்கை வீண்போகவில்லை.  என்ன, ஏது என்று கேட்காமல் சரி என்ற பதில் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் திரும்பவும் என்னை தொந்தரவு செய்தாள். சாமியே வரம் கொடுத்தப்பின் பூசாரியின் சொல் எடுபடுமா??  விழாவிற்கு செல்வோர் யாவரும் சிகப்பு, கறுப்பு உடையில் செல்ல வேண்டுமாம். என்ன கொடுமைடா சாமி இது என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன்.


அடுத்து என்ன பரிசு அளிப்பது என்ற கேள்வி? கடைக்கு சென்று பரிசு வாங்க நேரம் இல்லாததால் ஒரு கவரில் பணத்தை வைத்து கொடுத்துவிடு என்றேன்.  அடுத்த கேள்வி, “ எவ்வளவு ?” நீங்களே சொல்லுங்களேன். நாமெல்லாம் பிறந்த நாள் என்றால் ஒரு 50 அல்லது 100 ரூபாய் கொடுப்போம். அதுவெல்லாம் இப்போழுது செல்லுபடி ஆகுமா?? 500 ரூபாய்க்கு குறைந்து எதுவும் ஒரு "decent money" ஆக தெரிவது இல்லை. விலைவாசி ஏறுமுகமாகவே இருக்கும் பொழுது ஐநூறு இப்பொழுது ஐம்பதாக தெரிவதில் வியப்பென்ன இருக்கிறது? குறைந்து வரும் ரூபாயின் மதிப்பை குறை சொல்வதா அல்லது பணத்தின் மதிப்பை அரியாமல் வளரும் நம் குழந்தகளை நினைத்து கவலைப்படுவதா?? ஒரு மாதத்தில் குறைந்தது 1,500 ரூபாய் ஆவது பிறந்தநாள் பரிசுக்காக எடுத்து வைக்க வேண்டும்.  இரு பிள்ளைகள் ஆயிற்றே. அவளுடைய நண்பர்கள், அவனுடைய நண்பர்கள் என்று தனித் தனி பிரிவு. இதில் அவள் friendக்கு மட்டும் இவ்வளவு என் friendக்கு மட்டும் ஏன் குறைவாக கொடுக்கவேண்டும் என்ற பாகுபாடு சண்டைகள். கடைசியில் தலையை பிய்த்துக்கொள்வது என்னவோ நான் தான். அப்பா தான், ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று அலுவலகமே தன்உலகம் என்று சந்தோஷமாக இருக்கிறாரே!!


அன்பளிப்பு என்பது நம் அன்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாயில்.  அது ஐம்பது ரூபாயாக இருந்தாலும் சரி, ஐயாயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி அது அன்பை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். நானும் செய்கிறேன் என்று கடமைக்காக இருத்தல் கூடாது.  விலை உயர்ந்த அன்பளிப்புத்தான் உண்மையான அன்பின் வெளிப்பாடாக இப்பொழுது கருதப்படுகிறது.  பொருளை வாங்கி பாக்கும் முன் விலைப்பட்டியல் பார்க்கப்படுகிறது.  வாங்கியவரின் மதிப்பு அதை வைத்து மதிப்பிடப்படுகிறது.  விலைப்பட்டியல் தான் கொடுப்பவரின் மதிப்பை மதிப்பிட உதவும் தராசு. கொடுத்தவரின் உள் நோக்கம் பார்க்கப்படுவதில்லை.  சில விலை உயர்ந்த பரிசுகள்  தான் உண்மையாகவே அன்புடன் கொடுக்கப்படுகிறது. பல பெருமைக்காகவும், கடமைக்காகவுமே கொடுக்கப்படுகிறது. சமயத்தில் “இது ஒரு giftனு பேக் பண்ணி கொடுக்கிறாங்க பாரு “ என்ற ஏலனப்பேச்சுக்களும் அடிபடும்.    என் நண்பர்கள் எனக்கு அளித்த key chain, greeting cards, ஆகிய பரிசுப்பொருட்கள் இப்பொழுதும் என் பொக்கிஷங்கள். We should always appreciate the time and effort a person puts in to get the gift. புகழா விட்டால் கூட பராவாயில்லை இகழக்கூடாது.


 விஜய் டிவியின் நீயா நானாவில் எப்படியெல்லாம் பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள் இன்றைய தலைமுறையினர் என்ற விவாதத்தில், ஒருவர் “நான் ஹெலிகாப்டரில் கொண்டாடினேன்,”என்றார். ஆஹா இது எல்லாம் காசுக்கு வந்த கேடா என்று நிணைத்துக்கொண்டேன். மறுபக்கம், “முடி உள்ள சீமாட்டி வாரி முடிஞ்சுக்கறா” என்றும் என்னை சமாதானம் செய்துகொண்டேன். இந்த பிறந்தநாள் விழாவின் பொழுது “return gift" என்ற மேலை நாட்டு கலாச்சாரம்  இப்பொழுது நம்மை தொற்றிக்கொண்டுவிட்டது. உலகமயமாதலின் வெளிப்பாடு.  அது ஒன்றும் தவறான செயல் அல்ல. நல்ல விஷயங்கள் எங்கு நடந்தாலும் அதை பின்பற்றுவதில் தவறொன்றும் இல்லை.  விழாவிற்கு வரும் குழந்தைகள் வீட்டுக்கு போகும் பொழுது சந்தோஷமாக செல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவர்களின் கையில் ஏதாவது ஒன்றை கொடுத்து அனுப்புவது பழக்கமாகி விட்டது.   அப்படி கொடுக்கப்படும் பொருள் ஒரு சிறு பொருளாக இருந்து வந்தது.

ஏதோ சிறு பொருளாக இருந்த அந்த "return gift"யை இப்பொழுது எல்லாம் சிலர் 300 , 400 ரூபாய்க்கு வாங்கி கொடுக்கிறார்கள். இவ்வளவுக்கு செய்வதை பெருந்தன்மையாக எடுத்துக்கொள்வதா அல்லது அவர்களின் அந்தஸ்தின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்வதா என்று எனக்கு புரியவில்லை. மேலும் பிறந்தநாளுக்காக நாம் கொடுக்கும் பரிசின் மதிப்பிற்கே நமக்கு திரும்பி செய்வது “கணக்கை முடித்து விட்டேன் (returned your gift)” என்பதை போன்று உள்ளது. சில சமயங்களில் “அச்சோ நாம் பிறந்தநாள் கொண்டாடும் பிள்ளைக்கு ரொம்பவும் குறைத்து செய்து விட்டோமோ, அவர்கள் இவ்வளவு காஸ்ட்லியான return gift கொடுத்து இருக்கிறார்களே ?” என்ற கேள்வி எழுகிறது, மன சங்கடத்துடன் , குற்ற உணர்வுடன், வர வேண்டி இருக்கிறது. குழந்தைகளைப் பொருத்தவரை ஒரு பையில் சில சாக்லேட்கள், சிறு சிறு பொருட்கள் கொடுத்தாலே சந்தோஷம் அடைவார்கள். எத்தனை பேருக்கு புரிகிறது இந்த உண்மை. புரிந்தாலும் அதை நாம் ஒத்துக்கொள்ள மறுக்கிறோம்





பல நேரங்களில் நம் குழந்தைகள் யார் வீட்டிற்காவது சென்று வரும்பொழுது நாம் அவர்களைஉலுக்கி“போய்ட்டு வர்றேன் ஆண்டின்னு  சொல்லு,” என்று தூண்ட வேண்டும். ஆனால் பிறந்தநாள் விழாவிற்கு வரும் குழந்தைகள் மட்டும்  விழா முடிந்து போகும் பொழுது “ஆண்டி நான் போய்ட்டு வருகிறேன்” என்று தேடித்தேடி கூறுவார்கள். அது ஏன் தெரியுமா? அந்த “return gift"க்காகத்தான்.  என்ன தான் நாம் அவர்களுக்கு எத்தனை பொருள் வாங்கித்தந்தாலும் அந்த “return gift" தரும் சந்தோஷம் அலாதி தான். என் மகன் பொதுவாக யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டான். வீட்டிற்கு வருபவர்களிடம் நான் சொல்லி சொல்லி ஒரு ஹாய் சொல்லுவான். ஆனால் பிறந்த நாள் விழாவென்றால் தேடிப்போய் “Hi aunty, bye aunty” என்று சகல மரியாதையும் தெரிந்த பிள்ளையாக உலா வருவான்.  அப்படி ஒரு ஈர்ப்பு அந்த “return gift"க்கு.  குழந்தைகள் அந்த பையை வாங்கிய உடன் பிரித்து தலையை கவிழ்த்து உள்ளே என்ன இருக்கிறது என்று துலாவுவதே ஒரு அழகான காட்சி தான். இதில் , “உனக்கு என்ன, எனக்கு இது கிடைத்திருக்கிறது” என்ற ஆராய்ச்சிகளும், பண்ட மாற்றமும் வேறு அரங்கேறும்.  பெற்றோராகிய நாம் தான் “பேசாமல் இரு, வீட்டிற்கு சென்று பிரித்துக்கொள்ளலாம்” என்று அவர்களை அடக்கப் பார்ப்போம்.  அவர்களின் innocenceக்கு முற்றுப்புள்ளி வைப்பது நாம் தான்.





பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்றாலே சில பெற்றோருக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பிக்கிறது.  எங்கே கொண்டாடுவது, எப்படி கொண்டாடுவது? எங்கே சென்று “return gift" வாங்குவது என்ற பல கேள்விகள்.  ஆசையாக வாங்கினால் பராவாயில்லை , சிலர் return gift என்ன  வாங்குவது என்பதிலேயே மிகவும் stress ஆகி விடுகிறார்கள்.  இப்படி அலுத்துக்கொண்டு செய்வதில் என்ன பயன் என்பது எனக்கு புரியவில்லை. இதில் நம் குழந்தைகள் வேறு “ என்  பிறந்த நாள்  எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் தெரியுமா ?? என் நண்பர்களைப்போன்று, laser tagல் கொண்டாட வேண்டும்,party zoneல், game zoneல், skateing ringல் என்று ஒரு பட்டியலே வைத்துக்கொண்டு அந்த வருட பிறந்நாள் முடிந்த மறுநாளில் இருந்து அடுத்த வருட பிறந்த நாளுக்காக plan செய்ய ஆரம்பிப்பார்கள்.  வருடா வருடம் வரும் பிறந்த நாளுக்கா இத்தனை கலேபரம் என்று எண்ணத்தோன்றுகிறது.  கடுகளவானாலும் அதை சந்தோஷத்துடன் செய்தால் செய்பவருக்கும் மன நிறைவு, அது சென்று அடைபவருக்கும் மன நிறைவு. காசே தான் கடவுளடா என்ற போக்கில் போகும் இந்த உலகில் நாம் எங்கே போகிறோம் என்ற கேள்வியுடன் இன்று விடை பெறுகிறேன். மீண்டும் தொடருவேன் ”எங்கே போகிறோம்” என்ற என் தேடலை............

Thursday, August 18, 2011

ஊழல் என்பது.....

கடந்த இரண்டு நாட்களாக எங்கும் அன்னா ஹஸாரே எதிலும் அன்னா ஹஸாரேவின் பெயர் தான் கேட்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை யாவரும் உட்ச்சரிக்கும் பெயர் “அன்னா ஹஸாரே”.  இதில் எத்துனை பேருக்கு எதற்காக அவர் போராடுகிறார் என்று உண்மையாக தெரியும்? லோக்பால் என்றால் என்ன என்று எத்துனை பேருக்கு தெரியும்.  ஒரு சராசரி இந்தியனுக்கு தெரிந்தது,  எல்லோரும் பேசுவது ஊழலை எதிர்த்து போராடுவோம் என்று.  அன்னாவிற்கு கிடைத்திருக்கும் ஆதரவை பார்க்கையில் புல்லரிக்கின்றது.  ஒரு வயதான முதியவருக்கு இவ்வளவு ஆதரவா என்று வியப்பளிக்கிறது.  அதுவும் அவருக்கு ஆதரவு தருவது பெரும்பாலும் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், படித்து பட்டம் பெற்றவர்கள், வேலையில் இருப்பவர்கள், இளம் வயதினர் தான்.  இந்தியாவில் மட்டுமல்லாது கடல் கடந்தும் வருகிறது, வலுக்கிறது அவருக்கான ஆதரவு.  இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் இந்தியர்கள் ஊழல் பேயிடம் எப்படி சிக்குண்டு தவிக்கிறார்கள் என்று.  அன்னாவிற்கு சேரும் கூட்டம் நம் அரசியல்வாதிகளுக்கு சேரும் பிரியாணி கும்பலோ, ஃகுவார்டர் கும்பலோ அல்ல. ஒரு சமூக மாற்றத்தை தேடும் சராசரி இந்தியர்கள். வெறும் பணக்காரர்கள் மட்டுமே முன்னேராமல், ஒவ்வொரு இந்தியனும் முன்னேரவேண்டும், அதற்கான ஒரு விடிவு பிறக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன், நம்பிக்கையுடன்  போராட்டத்தில் குதித்துள்ளனர். 


சுதந்திரம் அடைந்த பின் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தவர்களுக்கு எங்கிருந்து வந்தது இந்த போராடும் தைரியம்? உலகில் இளம் வயதினரை அதிகமாக கொண்டுள்ள நம் நாடு எப்படி,எதற்காக ஒரு எழுபத்தி நான்கு முதியவருக்காக , அவரின் போராட்டத்திற்காக அவருடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டும்?? இப்படி பல கேள்விகள் என்னை துளைத்து எடுக்கிறது.  பதில் தேடுகையில் எனக்கு தோன்றியது என்ன தெரியுமா?  போராடும் குணம் இன்னும் அழியவில்லை. இவ்வளவு நாள் அது கிடப்பில் போடப்பட்டிருந்தது, ஒரு உண்மையான, நேர்மையான, சுயநலமில்லா அரசியல்வாதி இல்லா  தலைவனை காணாது இருந்ததினால் தான்.  இப்பொழுது அன்னாவின் உருவில் காந்தியை நாம் பார்க்கிறோம் . அதனால் தான் அவருக்கு நம் ஆதரவினை கேட்காமல் கொடுக்கிறோம்.  அவர் போராடுவது அவருக்காக அல்ல நம் ஒவ்வொருவருக்காக என்ற உண்மையை நாம் உணர்கிறோம். இன்றைய இளம் தலைமுறையினருக்கு தேவை ஒரு இளம் வழிகாட்டி அல்ல,generation gap எல்லாம் தாண்டி,  ஞானம் , பக்குவம், அனுபவம்  உடைய தொலை நோக்கு பார்வை உடைய ஒருவரின் வழிகாட்டல் தான்.  ஹாலிவுட் படங்களும் , ஆங்கில பாப் இசையும், pub,discothe  மட்டுமே நம் இளைஞர்களுக்கு தெரியும் என்ற கூற்று பொய்த்து விட்டது. அவர்களுக்குள்ளும் வேறூன்றி கிடக்கிறது தேசபக்தி. காந்தியை நாம் இன்னும் மறக்கவில்லை. காந்தியமும் சாகவில்லை.


சரி இப்படி எல்லோரும் ஊழலை எதிர்ப்போம், போராடுவோம் என்று பேசுகிறோமே நாம் உண்மையில் அதற்காக என்ன செய்கிறோம்?  அரசியல்வாதிகள் செய்தால் தான் ஊழல் என்பது இல்லை.  நாம் நம்முடைய அன்றாட வாழ்கையில் பல வழிகளில் ஊழலுக்கு சுயநலம் கருதி துணைபோகிறோம். அரசியல் வாதிகள் கோடிக்கணக்கில் ஊழல் செய்வதால் அது நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிகிறது.  நோகாமல் நுங்கு எடுக்கலாம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.  நமக்கும் அவர்களைப் போல் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் என்ன செய்வோம் , எப்படி நடந்து கொள்வோம் என்பதை பொறுத்தது தான் நம்முடைய உண்மையான நிலை.    நம் வாழ்வில் நாம் சின்ன சின்ன வழிகளிலெல்லாம் ஊழலை ஒழிக்க முயற்சி செய்யலாம்.  சாமிக்கே லஞ்சம் கொடுக்க நாம் தயங்குவதில்லை.  சாமியை அருகில் சென்று தரிசிக்க காசு கொடுக்கிறோம். அருகில் சென்று தரிசித்தால் தான் சாமி அருள் தருமா என்ன?  ஒரு டாக்டர் ஆபீஸுக்கு போனால் க்யூவில் நிற்க பொருமை இன்றி அங்கிருக்கும் பையனின் கைகளில் சில நோட்டுகளை திணித்துவிட்டு முன்னே செல்ல முயல்கிறோம். நமக்கு வந்தால் தான் நோயா?  காசை வீசி வேலையை முடித்து கொள்ளும் மனோபாவம் எப்பொழுது நம்மிடையே ஒழிகிறதோ அப்பொழுது தான் ஊழல் ஒழியும். பிறக்கும் பொழுது நர்ஸுக்கு காசு, இறக்கும் பொழுது வெட்டியானுக்கு காசு. இல்லையென்றால் நம் பிணம் பாதிதான் எரியும்.  அதனால் தான் சொன்னார்கள் “பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும் என்று”. அது மட்டுமா பணம் பாதாளம் வரை பாயும் என்றும் சொல்லி வைத்துள்ளனர் .  பணத்திற்கு கொடுக்கும் மதிப்பு  எப்பொழுது மனித மனங்களுக்கு கொடுக்கப்படுகிறதோ அன்று அழியும் இந்த ஊழல் பேய்.


தவற்றை நம்மிடையே வைத்துக்கொண்டு அடுத்தவரை குறைகூறுவது எந்த விதத்தில் நியாயம்?   எதற்காகவும் எந்த சூழ்நிலையிலும் ஊழலுக்கு  துணைபோக மாட்டோம் என்று உறுதி பூண வேண்டும்.  உண்ணாவிரதம் இருந்தால் மட்டும்  போதாது.  அதற்கான முயற்சியை செய்யவேண்டும்.  அப்படித்தான் உண்மையாக அன்னா ஹஸாரேவிற்கு நம் ஆதரவை தர வேண்டும்.  செயலில் காட்டவேண்டும். அது தான் அவரின் போராட்டத்திற்கான வெற்றி. நாம் மட்டும் வளர்ந்தால் பத்தாது நம்முடன் நம் சமூகமும் வளர வேண்டும். அது தான் நமக்கு பெருமை.  நமக்கு இருக்கும் மக்கள் சக்தியை வைத்துக்கொண்டு இந்த உலகையே ஆளலாம். இப்படி இருக்கையில் ஒரு வயதான முதியவருக்கு இருக்கும் போராடும் குணம் நாம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.  கொடுப்பவன் இருந்தால் தான் வாங்குவதற்கு கை நீளும். ஒட்டு மொத்தமாக லஞ்சம்  கொடுப்பதை நாம் நிறுத்துவோம் பின் எங்கிருந்து வாங்க கை நீளும்?  சமூக மாற்றத்தை கொண்டுவருவது அரசாங்கத்திடம் இல்லை நம் ஒருவரிடமும் தான் இருக்கிறது. கோவில்களில், ஆஸ்பத்திரியில், பள்ளியில்,கல்லூரியில்,காவல் நிலையங்களில்,கலெக்டர் அலுவலகத்தில்,என்று எந்த இடத்திலும் காசு கொடுத்து வேலையை முடித்துக்கொள்ளமாட்டேன் என்று நம்மால் சபதம் எடுக்க முடியுமா?  அப்படி செய்தால் “பிழைக்க தெரியாதவன்” என்ற பட்டம் கிட்டும்.  ஒருவருக்கு கிட்டினால் தான் அது விதிவிலக்காக இருக்கும். ஒரு சமூகமே ஒட்டு மொத்தமாக  ஒற் றுமையாக இதற்காக போராடினால் நிட்ச்சயம் ஒளி    வழி  பிறக்கும்.  லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமானம் என்று புரிய வைப்போம்.  அப்துல் கலாமின் 2020 கனவை , ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்குவோம். நம்முடைய எதிர் கால சந்ததியருக்கு ஊழல் இல்லா இந்தியாவை பரிசாக கொடுப்போம்.  உலகில் தலை நிமிர்ந்து நிர்ப்போம்.     இதற்கான விதையை விதைத்தாகி விட்டது. அறுவடையை அனுபவிக்க நாம் இருக்க மாட்டோம் . ஆனால் நம் சந்ததியர் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஜெய் ஹிந்த்!!! வாழ்க காந்தியம்!!வாழ்க அன்னா!!!

Thursday, July 21, 2011

சாமியைத் தேடி

இந்தியா வந்ததிலிருந்து ஏதோ ஒன்றை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். என் தேடுதல் வேட்டை ஒரு தொடர் கதையாக போய்க்கொண்டு இருக்கிறது.  சிங்கப்பூரில் இருந்தவரையில் வெள்ளிக்கிழமையானால் கோவிலுக்கு தவறாமல் செல்வது என் வழக்கமாக இருந்தது.  அதுவும் எங்கள் வீட்டருகில் இருந்த சாங்கி ராமர் கோவில் எனக்கு மிகவும் பழகிய ஒரு இடம். வாரம் தவறாமல் சென்று வந்ததால் அக்கோவில் அர்ச்சகர் முதல், மேளம் வாசிப்பவர் வரை எனக்கு தெரிந்தவர்களாகிவிட்டார்கள்.  கோவிலில் அவ்வளவாக கூட்டமும் இருக்காது. அமைதியாக சாமி தரிசனம் செய்து விட்டு வருவேன். கூட்டம் அதிகமாக இல்லாததால் சாமி நம் வேண்டுதலை கவனமாக கேட்கும் என்று ஒரு அறிவீனமான நம்பிக்கை வேறு.  அது மட்டுமல்ல அங்கு கிடைக்கும் புளி சாதம், கேசரி, எலும்பிச்சை சாதம், பொங்கல் போன்ற பிரசாதத்திற்கு என் நாக்கு அடிமை.  என்ன தான் நாம் விதவிதமாக வீட்டில் சமைத்து உண்டாலும்  கோவில் பிரசாதத்திற்கென்று ஒரு தனி ருசி உண்டு. சில விசேஷ நாட்களில் இலை போட்டு பலமான அன்னதானம் வேறு உண்டு.  தவறாமல் கோவிலுக்கு நான் செல்வது பிரசாததிற்குத்தான்  என்று என் கணவரும், குழந்தைகளும் என்னை கேலி செய்வார்கள். இதில் ஒரு 20% உண்மை இருப்பதால் என்னால் மறுப்பு எதுவும் சொல்ல வேறு முடியாது. எது எப்படியோ கோவிலுக்கு செல்வது  எனக்கு மன நிம்மதியை மட்டும் தராமல் ஒரு பழக்கமாக இருந்து வந்தது.

தஞ்சையில் இருந்த வரையில் வீட்டருகில் இருந்த காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வந்தேன்.  பெங்களூர் வந்த நாள் முதலாக என் சாமி தேடும் படலம் தொடங்கியது. புது இடம் பழக  இரண்டு மாதங்கள் பிடித்தது. சாமான் அடுக்கி வைப்பதற்குள் போதும் போது என்றாகி விட்டது. இதில் நான் எங்கு கோவிலுக்கு போவது?  ஆனால் வெள்ளிக்கிழமையானால் பயித்தியம் பிடித்தது போல் தோன்றும்.  தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பது போல் கால்கள் என்னை அறியாமலேயே கோவிலை தேடி போகத் தூண்டும்.  மனதில் சொல்லத் தெரியாத ஒரு தவிப்பை உணர்ந்தேன்.  வீட்டருகே ஏதேனும் கோவில் உள்ளதா என்று நண்பர்களை கேட்டேன்.  அவர்கள் காட்டிய வழியை கண்டு பிடித்து ஒரு வெள்ளிக்கிழமை ஒரு கோவிலுக்குச் சென்றேன்.  என்ன சாமி என்று பார்த்தால் எனக்கு பரிட்சயமில்லா பெயராக இருந்தது.  ச்சௌடேசுவரி அம்மன் என்று பெயர் இருந்தது.  என்னடா இது நமக்கு தெரியாத சாமியாக இருக்கிறதே ! இது அமைதியான சாமியா அல்லது ஆக்ரோஷமான சாமியா? இந்த சாமி என்  வேண்டுதளை ஏற்குமா? இதை கும்மிடுவது எப்படி? எந்த முறையில் சாமி கும்மிடுவது என்று ஒரே குழப்பமாக இருந்தது.  சரி கோவில் என்று வந்தாகிவிட்டது எந்த சாமியாக இருந்தால் என்ன நாம் மனதில் தோன்றியபடி வேண்டிவிட்டு செல்லலாம் என்று முடிவு செய்து உள்ளே சென்றேன்.  உள்ளே நுழையும் முன்பு கால் கழுவும் இடத்தில் கால்களை நனைத்து விட்டு உள்ளே செல்லலாம் என்று  அங்கு சென்றால் ஒரே அழுக்காக இருந்தது அந்த இடம்.  பிரசாதத்தை சாப்பிட்டு விட்டு கைகளை அங்கு பலர் கழுவியதால் சாதமாக இருந்தது.  அந்த அழுக்கு இடத்தில் கால்களை கழுவ மனமில்லாமல் சாமிக்கு ஒரு சாரி சொல்லி விட்டு படியை தொட்டுக் கும்பிட்டு விட்டு உள்ளே சென்றேன்.


10.30 -12  வெள்ளிக்கிழமை ராகு காலம் ஆதலால் கோவிலுக்குள் அடி எடுத்து வைக்க முடியாத படி பயங்கரக்கூட்டம்.  எப்படியோ முண்டி அடித்து கோவிலுக்குள் சென்று சாமிக்கருகில் நின்று விட்டேன்.  சாமி நம்ப ஊர் அம்மன் சாமியை போன்று தான் இருந்தது.  என்னை சுற்றி ஒரே கன்னடக்குரல்கள். ஆஹா மொழி தெரியாத இடத்தில் மாட்டிகொண்டுவிட்டோம் என்று ஒரு தவிப்பு. அர்ச்சகர்கள் வந்து அர்ச்சனை சீட்டுகளை வாங்கி சென்றார்கள். சரி அர்ச்சனை முடிந்து தீபாராதனை பார்த்துவிட்டு செல்லலாம் என்று அந்த கூட்ட நெரிசலில் சமாளித்து நின்று கொண்டிருந்தேன்.  என்னை சுற்றி நின்றவர்களை பார்த்தப்பின் நான் சாமி கும்பிடுவதையே மறந்து , பயந்து நின்றேன் . ஏன் என்று வியப்பாக இருக்கிறதா?? என்னை சுற்றி நின்றவர்கள் அத்துனை பேரின் கைகளிலும் ஒரு தட்டு. அந்த தட்டில் ஒரு பத்து எலுப்பிச்சை பழ விளக்குகள் எறிந்து கொண்டு இருந்தது.  அவரவர் தங்கள் தட்டை தூக்கி சாமிக்கு ஆரத்தி எடுத்தார்கள்.  நான் வேறு உயரத்தில் கத்திரிக்காய்க்கு கால் முளைத்ததைப் போன்ற தோற்றமா, பின்  என் நிலமையை யோசித்துப்பாருங்கள்? போதாதக்குறைக்கு வெள்ளிக்கிழமை என்று தலை குளித்து கூந்தலை லூசாக க்ளிப் செய்து இருந்தேன்.எப்போ யார் என் தலை முடியில் நெருப்பை பற்ற வைத்து விடுவார்களோ என்ற பயம். என் முடியை தோளுக்கும் கழுத்துக்கும் இடையில் வைத்து பிடித்துக்கொண்டு, ஒரு கையில் என் சல்வார் துப்பட்டாவை பிடித்துக்கொண்டு சாமியை பார்த்து நின்றேன்.  கண்களை மூடி சாமி கும்பிட பயமாக இருந்தது.     ஒருவரின் தட்டு தவறி விழுந்து யார் மீதாவது சிறிது தீப்பிடித்தாலும் அவ்வளவு தான். அங்கு கூடி இருந்த யாராலும் தப்பித்து வெளியே வர இயலாது.  அவ்வளவு கூட்ட நெரிசல், இட நெருக்கடி வேறு.  அந்த கூட்டத்திலும், குடும்ப கதைகளை அலச சிலர் அசரவில்லை.  இடமே இல்லாத அந்த இடத்திலும் சிலர் சுற்றி அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டே பொறுமையாக எலும்பிச்சை பழங்களை அறுத்து, சாறு பிழிந்து அதனை விளக்கு போன்று தயார் செய்து கொண்டு இருந்தனர்.    அவசர அவசரமாக சாமிக்கு ஒரு ஹாய், பாய் சொல்லிவிட்டு பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி வந்தேன். சுற்றும் வழியெல்லாம் மக்கள் அமர்ந்து கொண்டு சாமி பாட்டுகளை பாடிக்கொண்டிருந்தனர்.  சுற்றி வந்து  கீழே  விழுந்து, கும்பிடு ஒன்று போட்டுவிட்டு வெளியே வ்ந்தேன்.  வாசல் அருகில் ஒரு இலையில் சிறிதளவு பிரசாதம் கொடுத்தார்கள். வந்ததற்கு பிரசாதமாவது கிடைத்ததே என்று வாங்கிக்கொண்டு விட்டாப் போதும் என்று வேகமாக நடந்து பஸ் பிடித்து வீட்டை அடைந்தேன்.    வீட்டை அடைந்த பின் ஏதோ சாதித்தது போன்ற உணர்வு.  ஒரு பக்கம் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு சென்று வந்த மகிழ்ச்சி இன்னொரு பக்கம் இனி இப்படி கூட்டமான கோவிலுக்கு போகக்கூடாது என்று ஒரு முடிவு. ஏனென்றால் சாமியிடம் என் கோரிக்கைகளை வைக்கக் கூட என்னால் முடியவில்லை.  கூட்ட நெரிசலில் என்னை நான் காப்பாற்றிக்கொண்டு வந்தால் போது என்று ஆகிவிட்டது.    வேறு ஏதாவது கோவில் வீட்டருகே இருக்கிறதா என்று கண்டு பிடிக்க வேண்டும் என்று  முடிவு செய்தேன்.  கூட்டம் மிகுதியாக இருக்கும் கோவிலில் மனம் ஒன்றி சாமி கும்பிட முடியவில்லை.  சாமியை ஒரு நிமிடம் கூட அமைதியாக பார்க்க முடியாத நிலை.  அப்படி அவசரமாக கோவிலுக்கு பேருக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன??

அடுத்தடுத்து நான் வெளியே செல்ல ஆரம்பித்தவுடன் அருகில் ஏதாவது கோவில் தென்படுகிறதா என்று தேடத்தொடங்கினேன்.  அருகில் ஒரு கோவில் இருக்கிறது அதற்கு போய் வா என்று என் கணவர் சொன்னார். என்ன சாமி என்று நான் கேட்ட பொழுது முனீசுவரன் என்றார். அதற்கு நான்,” முனீசுவரன் எல்லாம் எனக்கு தெரிந்த சாமி இல்லை. நான் எனக்கு தெரிந்த சாமி கோவிலுக்குத்தான் செல்வேன்,” என்று கூறினேன்.  எனக்கு தெரிந்த சாமி எல்லாம், வினாயகர், முருகர், பெருமாள், மாரியம்மன், துர்கை, ஆஞ்சனேயர் என்று அமைதியான சாமிதான். என்ன தான் அய்யனார், வீரனார் எங்கள் குலதெய்வமானாலும், சிறு வயது முதல் முருகன், சிவன் என்று கும்பிட்டு பழக்கமாகிவிட்டது.  மேலும், அய்யனார், வீரனார் கோவில்களுக்குள் பெண் பிள்ளைகளை அனுமதிக்காத காரணத்தால் அக்கோவில்களுக்கு போய் பழக்கம் இல்லை. எனவே நான் சிவன், பெருமாள் கோவில்களை தேடி அலைந்தேன்.  கண்ணில் பட்டதெல்லாம் காவேரி அம்மா, முனீசுவரன், சௌடேசுவரி என்ற சாமி கோவில்கள்தான்.  என்ன தான் அவையும் கோவில்கள் என்றாலும் என்னால் மனமுவந்து அக்கோவில்களுக்கு போக முடியவில்லை. என் சாமியைத் தேடி நான் அலைந்தேன்.  ஒரு வழியாக என் மகனை டியூஷன் விட்டு வரும் வழியில் ஒரு முருகர் கோவிலை பார்த்தேன்.  பார்த்தவுடன் அப்பாடா என்று இருந்தது.  அப்பா வீட்டுக்கு போகும் மகிழ்ச்சி.  அன்று நேரம் ஒத்து வராததால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. சீக்கிரமே என் சாமியைத் தேடி அக்கோவிலுக்கு செல்வேன்.  காவேரி அம்மா, முனீசுவரன், சௌடேசுவரி அம்மா யாவரும் என்னை மன்னிக்க வேண்டும்.


எனக்கு எம்மதமும் சம்மதம் தான். சாமி தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பதையும் நான் நம்புகிறேன் ஆனாலும் கோவிலுக்குள் செல்லும் பொழுது நான் அடையும் நிம்மதி , மகிழ்ச்சி எல்லாம் அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.  பழகிய ஒன்றை நோக்கித்தான் நம் மனம் எப்பொழுதும் நடை போடும்.  வேறு வழியில்லை என்றால் புதிதாக வருவதை நாம் ஏற்றுக்கொள்வோம்.  இதனால் தான் என்னவோ நமக்கு நாம் பிறந்து , வளர்ந்த, இடம், பழகிய நண்பர்கள், என்று நினைக்கும் பொழுதே ஒரு சுகம் மனதிற்குள் ஏற்படுகிறது.   நாம் நம் ஊரில் இருக்கும் பொழுது நம் உறவினர்களை தேடுகிறோம். ஊரை விட்டு வெளியே வந்தவுடன் நம் ஊர், நம் மொழி பேசுபவர்களை தேடுகிறோம்.  நம் நாட்டை விட்டு வெளியே வந்தவுடன் நம் நாட்டினரை தேடுகிறோம்.  பின் மனிதர்களே இல்லாத இடத்திற்கு போனால் மனிதர்களை தேடுவோம். இப்படியாக ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் நமக்கு பரீட்சயமான ஒன்றையே முடிந்த வரை தேடுகிறோம். கிடைக்காத நேரத்தில் வந்ததை ஏற்றுக்கொள்கிறோம்.. இங்கு வேறு கோவிலே இல்லை என்றால் நானும் முனீசுவரனிடம் தான் தஞ்சம் அடைந்து இருப்பேன்.  ”ஒன்னுமே இல்லாதாதற்கு ஒரு ஆம்புளப்புள்ள” என்று கூறுவதைப்போன்று.








Monday, June 27, 2011

வேட்டை

அடடா கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா!! என்று நான் ஏதோ புலி வேட்டைக்கோ, யானை வேட்டைக்கோ, அல்லது சுடலை மடச்சாமி போல் “சாமியும் நான் தான் பூசாரி நான் தான் “ என்று சாமி வேட்டைக்கோ போக புறப்பட்டு விட்டதாக தவறாக எண்ணவேண்டாம்.  ஒரு வழியாக வெளிநாட்டில் வாழ்ந்தது போதும் என்று முடிவு செய்து தாய் நாடாம் இந்தியாவிற்கு திரும்புவதற்கு முடிவுசெய்தோம்.  சரி முதல் படி குழந்தைகளுக்கு பள்ளி தேர்வு செய்வது என்று ஆரம்பித்தோம்.  அப்பொழுதுதான் ஏற்கனவே இக்கடலில் நீந்தி மீன் பிடித்த நல்ல நண்பர்கள் சிலர் கூறினர்,” பள்ளியை நீங்கள் தேர்வு செய்வது இல்லை முறை , பள்ளிதான் உங்களை தேர்வு செய்யவேண்டும்.”என்றார்கள்.  முதலில் இதனை விளையாட்டாகத்தான் எடுத்துக்கொண்டோம்.  ஆனால், கடலில் குதுத்த பிறகு தான் தெரிய வந்தது இது ஒரு வேட்கைக்களம் என்று.  முதலில் நாங்கள் எங்கள் அறிவுக்கு எட்டிய வரைக்கும் நல்ல பள்ளிகள் யாவை என்று ஒரு லிஸ்ட் எடுத்தோம்.  விடுமுறைக்கு இந்தியா சென்ற பொழுது குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அப்பள்ளிகளை சுற்றி பார்த்து வருவோம். பார்த்தபின் எது நன்றாக இருக்கிறதோ அதில் நம் பிள்ளைகளை சேர்த்து விடலாம் என்று ஒரு கற்பனையில் மாநகராம் சென்னைக்குச் சென்றோம்.  ஆஹா எத்துனை மாதிரி பள்ளிகள்?? இப்பொழுது பல பள்ளிகளில் “international" என்று ஒரு அடை மொழி சேர்க்கப்பட்டிருக்கிறது . அப்பொழுதுதான் ”என்.ஆர்.ஐ”  மக்களை கவரமுடியுமாம்.  தரத்தில் internationalஆ என்று பார்த்தால் சந்தேகமே.  முதல் வித்தியாசம், வெளிநாடுகளில் ஒரு பள்ளிக்குச் சென்று அனுகினால், அவர்கள் முதலில் நம்மை பள்ளியை சுற்றி காண்பிப்பார்கள். Classroom, canteen, toilet, playground, sickbay(nurse room) என்று அனைத்தையும் காண்பிப்பார்கள்.  சிரித்த முகத்துடன் ஒரு உபசாரம் இருக்கும்.  உங்கள் குழந்தைக்கு இது ஏற்ற பள்ளியா என்று நீங்கள் முடிவு செய்யுங்கள் என்று முடிவை நம்மிடம் விட்டு விடுவார்கள்.  ஆனால் சென்னையில் நாங்கள் சென்ற பள்ளிகளில் எல்லாம் எங்களை ஏதோ சந்தேகப்பிறவிகள் போல் வாசலிலேயே நிற்க வைத்துவிட்டார்கள்.  Indian Parliamentக்கு கூட இவ்வளவு பாதுகாப்பு இருக்குமா என்பது சந்தேகமே.  என்ன கைகளில் துப்பாக்கி ஏந்திய காவளாளிகள் பள்ளி வாசலில் இல்லை.  அப்படியே உள்ளே விட்டாலும், பிரின்சிபல் அறை அல்லது அலுவலக அறை வரையிலும் தான் அனுமதி.  பள்ளியைப்பற்றி information வேண்டுமானால் 500, 1000 என்று செலுத்தி application form வாங்கினால் அதனுடன் பள்ளியைப்பற்றிய prospectus கிடைக்கும்.  இப்பொழுது இந்திய சந்தையில் வேலை கூட கிடைத்துவிடும் ஆனால்  நாம் விரும்பும் பள்ளியில் அட்மிஷன் கிடைப்பது குதிரைக் கொம்பு. 2011-2012க்கான அட்மிஷனுக்கு 2010ல் முயற்சி செய்ய வேண்டுமாம்.  பல பள்ளிகளில் குழந்தை பிறப்பதற்கு முன்பே முயற்சி செய்ய வேண்டுமாம்.  கலி முற்றி விட்டது என்றால் இது தானே.  இவ்வளவு பந்தா செய்யும் பள்ளிகளில் எவ்வளவு தூரம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கி தருகிறார்கள் என்று நாம் எப்படி தெரிந்து கொள்வது.  கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தை நினைத்தால் இன்றும் மனம் பத பதக்கிறது.  பள்ளிகளில் விபத்துக்கான பாதுகாப்புகள் இருக்கிறதா என்று சுற்றி பார்த்தால் தானே தெரியும்.  ஏன் இதனை பள்ளி நிர்வாகம் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? பள்ளி என்பது ஒரு வியாபாரக்கூடம் இல்லை. இரு பக்கமும் புரிதல் மிக மிக அவசியம். அட்மிஷனுக்கு அனுகும் பொழுது ஏதோ நமக்கு favour செய்வது போன்று அலுத்துக்கொள்கிறார்கள்.  ஏதோ பணமே வாங்கிக்கொள்ளாமல் சேவை செய்வதைப்போன்ற ஒரு நிலமை.  என்று மாறுமோ இந்த நிலமை???

Friday, February 4, 2011

காங்ஸி க்ஃபாசாய்

காங்ஸி ஃபாசாய்!!!! என்னடா இரண்டு மாதங்களாய் தலைமறைவாய் இருந்து விட்டு இப்படி ஏதோ மறை கழண்றது போன்று உளறுகிறாள் என்று என் இனிய நண்பர்கள் பலர் கேள்விக் குறியோடு பார்ப்பது எனக்கு தெரிகிறது.   இன்று சீனப்புத்தாண்டு.  நான் சீன மொழியில் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறினேன்.  நாண்கு வருடங்களாக சிங்கப்பூரில் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்ட சீன மொழி வார்த்தைகள்.

ஊரே திருவிழா கோலம் தான்.  புலி வருடத்திற்கு விடை கொடுத்து முயல் வருடத்தை வரவேற்கும் நிகழ்ச்சிகள் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.  முயல் வருடம் நல்ல பல பலன்களை கொண்டு வருகிறதாம். சீனாவில் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு மிருகத்தின் பெயர் சூட்டப்படுகிறது.  மொத்தம் பன்னிரெண்டு மிருகங்களின் பெயர்கள் சுழற்சி முறையில் வருகிறது.  அவை முறையே, எலி, எருது, புலி, முயல், ட்ராகன், பாம்பு,குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி ஆகும். நான் நாய் வருடத்தில் பிறந்தவள்.  அதற்கு என் கணவர் “அதனால் தான் நீ நாய் மாதிரி குரைக்கிறாய்” என்று கூறுவார்.  எப்படியோ குரைக்கிற நாய் கடிக்காது!!


சிகப்புத்தான் சீனர்களுக்கு மிகவுப் பிடித்த நிறம்.  அது வளத்தை, பலத்தை குறிக்கும் நிறமாம்.  அலங்கார தோரணங்கள் யாவும் சிகப்பு நிறத்திலேயே விற்கப்படுகின்றன.  வண்ண வண்ண விளக்குகள், தோரணங்கள், என எங்கு பார்த்தாலும் சிகப்பு நிறம் தான். என் குழந்தைகளின் பள்ளியில் சீன புத்தாண்டை கொண்டாடுவதற்காக மாணவர்களை சிகப்பு , வெள்ளை நிறத்தில் ஆடை உடுத்தி வர கூறி இருந்தார்கள்.  என் மகனும் சிகப்பு சட்டையும், வெள்ளை நிற காற்சட்டையும் அணிந்து சென்றான்.  ஆனால் என்ன மாலை வீடு திரும்பிய பொழுது வெள்ளை காற்சட்டை காவி நிறத்தில் இருந்தது.  நான் தான் வீட்டில் ஒரு ஆள் இருக்கிறேனே --சம்பளம் இல்லா சலவைத்தொழிலாளி!!


  இந்த வருடம் புத்தாண்டு வார இறுதியில் வருவதால் தொடர்ந்து நாண்கு நாட்கள் விடுமுறை வேறு.  எல்லோரும் வீட்டில் சந்தோஷமாக இருக்கிறார்கள். எனக்குத்தான் எப்படி நாண்கு நாட்கள் பிள்ளைகளை வீட்டில் சமாளிப்பது என்று கண்ணை கட்டுகிறது.  அடுப்படியே திருப்பதி எனக்கு...... சீனர்கள் புத்தாண்டின் போது ரீ--யூனியன் டின்னர் என்று குடும்பத்துடன் கொண்டாடுகிறார்கள்.  பல வகையான உணவுகளை சமைத்து உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து உண்கிறார்கள். சிலர் உணவகங்களுக்கு சென்று குடும்பத்துடன் உணவு உண்கிறார்கள்.  உணவகங்கள் எல்லாம் "fully booked". சீனாவில் எட்டு என்றால் ராசியான எண். நமக்குத்தான் எட்டு என்றால் குட்டிச்சுவர் என்று அர்த்தம்.  ஒரு ரெஸ்ராண்டில் ஒரு ரீ-யூனியன் டின்னரின் விலை 8888 சிங்கப்பூர் டாலர்.  இந்திய ரூபாயின் மதிப்புப்படி இது எவ்வளவு என்றெல்லாம் என்னால் ரூபாயில் பெருக்கி சொல்ல முடியாது.  ஏன் என்றால் நான் கணக்குல எலி. உண்மையை ஒத்துக்கொள்ளவும் மனதில் உரம் வேண்டும் இல்லையா?? சரி நீங்களாவது கூட்டி பெருக்கி கண்டு பிடித்து விட்டீர்களா??  தலை சுற்றுகிறதா?? நாம் தீபாவளிக்கு செய்வது போன்று பல வகையான பலகாரங்கள் கடைகளில் விற்கப்படுகிறது.  நம் ஊரிலும் இப்பொழுது யார் வீட்டில் பலகாரங்கள் செய்கிறார்கள்?  எல்லோரும்  கடைகளில் தான் தீபாவளிக்கு வாங்குகிறார்கள் என்று கேள்வி.  நான் மட்டும் இன்று வரையில் எனக்கு தெரிந்த ஒரு நாலு பலகாரத்தை வீட்டிலேயே செய்து என் குடும்பத்தினரையும் , நண்பர்களையும் கொடுமை படுத்திக்கொண்டுதான் இருக்கிறேன், விடாது கறுப்பு மாதிரி.


சீன புத்தாண்டின் போது வயதான உறவினர்களை அவர்கள் வீடுகளுக்கு சென்று நலம் விசாரிக்கின்றனர் இளைஞர்களும் , யுவதிகளும்.  அப்படி செல்லும் பொழுது தங்களின் வருங்கால துணையையும் அவர்களுக்கு அறிமுகம் செய்யும் பழக்கம் இருக்கிறதாம்.  அப்படி இல்லாதவர்கள்  நம் தமிழ் படங்களில் வருவதைப்போன்று “வாடகை காதலிகளை” அறிமுகப்படுத்துகிறார்கள்.   இதற்கு ஏஜெண்டுகளும் இப்பொழுது உண்டு.  இதுதான் கலிகாலமோ?? 


வயதானவர்கள் கூட புத்தாண்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.  வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை இது காட்டுகிறது.  இந்த இரண்டு நாட்களுக்கு கடைகள் யாவற்றிற்கும் விடுமுறை. புத்தாண்டு சிறப்புத்தள்ளுபடியில் நணைந்த மக்களுக்கு ஒரு பிரேக். 


 நாம் பொங்களுக்கு வீடுகளை ஒட்டடை அடித்து சுத்தம் செய்து, பழயன களைந்து, பெயிண்ட் அடித்து புது பொளிவு கொடுப்பது போன்று அவர்களும் “’ஸ்ப்ரிங் க்ளீனிங்” என்று வீடு முதல் கார் வரை சுத்தம் செய்கிறார்கள்.  வசதியை பொறுத்து  சோபா, திரைச்சீலைகளை மாற்றுகிறார்கள்.  அழகான அலங்காரங்கள் வரும் விருந்தினரை வரவேற்கிறது.  வீடு முழுதும் புத்தொளி பெறுகிறது.  உறவினர் வீடுகளுக்கு வாழ்த்துக்கள் சொல்ல போகும் பொழுது  ஹாங் பா , அதாவது ஒரு சிறு சிகப்பு கவரில்  பண அன்பளிப்பும் , இரண்டு ஆரஞ்சு பழங்களும் எடுத்துச் செல்வது வழக்கம்.  வசதிக்கேற்ப வேறு பல  அன்பளிப்புக்களும் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.  உறவினர்களுக்கும், வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும், தேடித்தேடி பிடித்தமான அன்பளிப்புகளை ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே வாங்க தொடங்கி விடுகிறார்கள். இது கிருஸ்மஸ் பண்டிகையின் பொழுது நடக்கும் அன்பளிப்பை போன்று இருக்கும்.  அன்பளிப்பு கொடுப்பதும் சுகம், வாங்கிக்கொள்வதும் சுகம்தானே??--அதன் மதிப்பை எவ்வளவுக்கு பணம் என்று மதிப்பிட்டுப் பார்க்காதவரை.   புத்தாண்டு கொண்டாட்டங்களில் தங்களை மறந்து வித விதமான உணவுகளை உண்டு உடல் நலத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நாளிதழ்களில் முன்கூட்டியே கவணத்திற்கு கொண்டு வருகிறார்கள்.  நம்முடைய தீபாவளி லேகியம் பற்றி  அவர்களுக்கு தெரியாது போலும்!!  சரி இதுவரை சீனப்புத்தாண்டு பற்றி எனக்குத் தெரிந்த சில பல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.  இனி முயல் வருடத்தின் பலன்களை மேலோட்டமாக பார்க்கலாமா?? அவர்களுடைய ஜோசியத்திற்கு பெயர் “ஃபெங் சுயி”.  அதன் படி முயல் வருடம்,

நம்பிக்கையான வருடம்.
குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும்
எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு நல்ல முடிவு உண்டு என்ற நிலை ஏற்படும்.
கலை தொழில் மேன்படும்.
பேச்சு வார்த்தையின் மூலம் பல நன்மைகள் உண்டாகும்.
மொத்தத்தில் கரடு முரடான 2010 போன்று இன்றி இந்த வருடம் அமைதியாக நகரக்கூடும்.

எது எப்படியோ, என்னை பொறுத்த வரை “நன்மையும் , தீமையும் பிறர் தர வாரா”.  நாம் செய்யும்  செயல்களே நமக்கு நடக்கும் நன்மைக்கும், தீமைக்கும் விதைவிதைக்கும்.  எனவே மனிதருள் மாணிக்கமாக நாம் இருக்க வேண்டாம், மனிதராக இருக்க முயல்வோம் என்று கூறி மீண்டும் ஒரு முறை “காங்ஸி ஃபாசாய்” என்று கூறி விடை பெறுகிறேன் வணக்கம்.