Saturday, July 30, 2016

கபாலி = மகிழ்ச்சி

கபாலி  = மகிழ்ச்சி

இன்று ஆடி வெள்ளி ! நானும் என் மகளும் கபாலி ஜோதியில் ஐக்கியமாக புறப்பட்டோம். மதியம் 3.30 மணிக்கு படம். வீட்டிலிருந்து தியேட்டர் ஒரு பதினைந்து நிமிடங்கள் தான். கடந்த ஒரு வாரமாக உலகெங்கும் கபாலி ஜுரம் அடித்துக் கொண்டு இருந்ததால் நாங்கள் சிறிது ஜாக்கிரதையாகவே இருந்து வந்தோம். கபாலி புயல் கரையை கடந்து விட்டதால் நாங்கள் துணிந்து புறப்பட்டோம். தியேட்டரில் பதினைந்து பேருக்கு மேல் இருக்கவில்லை. என்னவோ ஷ்பெஷல் ஷோ பார்க்கச் சென்றதைப் போன்ற ஒரு உணர்வு. என் தோழியிடம் விமர்சனம் கேட்ட பின் தான் நான்  படம் பார்க்க முடிவு செய்தேன். படமும் ஆரம்பித்தது.

ஏற்கனவே கபாலியை அக்கு வேறு ஆணி வேறாக பிய்த்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் என் பங்கிற்கு நானும் அதை பிரித்து மேய விரும்பவில்லை. படம் எப்படி என்று என்னைக் கேட்டால் கபாலி ஸ்டைலில் “மகிழ்ச்சி” என்பேன். பொழுது போக்கான படம். எனக்கு மட்டும் அல்ல , என் மகளுக்கும் பிடித்திருந்தது. இப்படத்தில் வரும் கபாலியை பார்த்தால் நீலாம்பரி நிச்சயம் மீண்டும் மீண்டு வருவாள்.

படத்தை பற்றி கூறும் பொழுது என் தோழி கூறினாள், ”கீதா , நடிப்புனா கமல்கிட்ட எதிர் பார்க்கலாம், ரஜினிகிட்ட ஸ்டைலைத்தான் எதிர்பார்க்க முடியும். இந்த வயதிலும் அது ரஜினியிடம் குறையவில்லை. இசை இல்லாமல் இப்படத்தை நினைத்துப் பாரேன் எப்படி இருக்கும் என்று? முயூசிக் தான் காபாலி வரும் பொழுதெல்லாம் தெறிக்க காரணம் “, என்றாள். நானும் இசையில்லாமல் கபாலி வரும் இடங்களை நினைத்துப் பார்த்தேன். மிஸ்டர் பீன் பார்த்த எஃபெக்ட் கண் முன் தெர்ந்தது!!


சிலரிடம் கேட்ட பொழுது “ஒரு முறை படம் பார்க்கலாம்” என்று கூறினார்கள். என்னைப் பொருத்தவரை படம் பார்ப்பதே பொழுதுபோக்கிற்காக ஒரு முறை தான். நான் என்ன படம் பார்த்துவிட்டு பி.ஹெச்.டி யா பண்ணப்போகிறேன்? ஒரு வேளை,”ஒரு முறை பார்க்கலாம் என்றால், படத்தின் இடையிலேயே எழுந்து வெளியே வந்து விடாமல் பார்ப்பதா? பொதுவாக வீட்டில் படம் பார்த்தால் தான் பிடிக்கவில்லை என்றால் பாதியில் நிறுத்து விடுவோம் .  தியேட்டரில் காசு கொடுத்து பொழுது போக்கிற்காக படம் பார்க்க செல்லும் பொழுது ,பெரும்பாலும் மொக்கை படத்தைக் கூட முழுவதுமாக பார்த்துவிட்டு குறை கூருவோமே ஒழிய பாதியில் வரமாட்டோம். நான் கணக்கில் அடங்கா முறை ஒரு படம் பார்த்தேன் என்றால் அது ரோஜாவாகத்தான் இருக்கும். இன்றும் டிவியில் ரோஜா படம் போட்டால் , அரவிந்சாமியை தீவிரவாதிகள் பிடித்துச்செல்லும் காட்சி வரை வாயை பிளந்து கொண்டு பார்ப்பேன். பின் எழுந்து போய் விடுவேன் அல்லது டிவியை அனைத்து விடுவேன். அப்படம் தவிர வேறு எந்த படத்தையும் மீண்டும் மீண்டும் பார்த்தது கிடையாது. அப்படி இருக்க, ஒரு படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று சொல்வதை விட்டு, நல்லா இருந்தது அல்லது சுமாராக இருந்தது அல்லது படு மோசம் என்று தெளிவாக கூறிவிடலாம்.


இப்படத்தை பார்த்துவிட்டு வெளியில் வரும் பொழுது மலேசிய தமிழ் மக்களின் வாழ்வைப் பற்றி ஒரு சிறு புரிதல் ஏற்படுகிறது. கபாலி வந்தாலும் வந்தது   இப்பொழுது வலைதளம் முழுதும் மலேசிய தமிழர்களின் வரலாறு அலசி ஆராயப்படுகிறது. இதுவரை நம்  ரேடாரில் வராத அவர்களின் வாழ்க்கை பாதையை எல்லோரும் தெரிந்து கொள்ள முயல்கிறோம்.  இலங்கை தமிழர்களைப் பற்றி மட்டுமே பேசி வந்த நாம் கபாலிக்குப் பின் மலேசிய தமிழர்களின்பாலும் நம் பார்வையை திருப்பி உள்ளது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால் நம் அரசியல் தலைவர்கள் இதனை அரசியல் ஆக்காமல் , தாங்கள் மீன் பிடிக்க  குட்டையை குழப்பாமல் இருக்க வேண்டும்.


யாரோ ஒருவர் கேஸ் போட்டு இருக்காராம். சீனியர் சிட்டிசனான ரஜினியை துன்புறுத்தி நடிக்க வைக்கும் தயாளிப்பாளர்கள், இயக்குனர்களிடமிருந்து அவரைக் காப்பாற்றி முதியோர் இல்லத்தில் அவரை பத்திரமாக சேர்த்து விடுங்கள் என்று. இதை என் மகளிடம் நான் கூறியபொழுது அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். ஆனால் படம் பார்த்துவிட்டு,”அம்மா, இந்த வயதிலும் ஹவ் ஆக்டிவ் ஹி இஸ்!! என்றாள். சிறு வயதில் தீவிர ரஜினி ரசிகையான எனக்கு ரஜினியின் இந்த கபாலி பிறவி மகிழ்வைத்தான் தந்தது. இனி தமிழ் நாட்டில் கிமு, கிபி போய் கமு , கபி என்று வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மொத்தத்தில் கபாலி = மகிழ்ச்சி..........