Monday, March 28, 2016

விசாரிக்காமல் போகலாம் விசாரனைக்கு....

சீனப் புத்தாண்டுக்கு நான்கு நாட்கள் விடுமுறை . நான்கு நாட்கள் எப்படி பொழுதை போக்குவது என்று நினைத்து ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு ப்ளான் போட்டோம். வடிவேல் மாதிரி பிளான் போடுவதில் நாங்கள் கில்லாடி. நடைமுறைக்கு வரும் போது தான் கொஞ்சம் இடிக்கும்.பிளானில் பெருவாரியாக நிறந்திருந்த செயல் , சாப்பிட்டுவிட்டு நன்றாக தூங்கி எழுவது தான். எட்டு மணி நேரம் தொடர்ச்சியாக தூங்கி பல மாதங்கள் ஆகிவிட்டது போல் இருந்தது. தூக்கத்திற்கான நேரத்தையும், சாப்பாட்டிற்கான நேரத்தையும் ஒதுக்கிவிட்டு பார்த்தால் எஞ்சி இருந்தது மாலை நேரம் தான்.


ஒரு நாள் நண்பரின் வீட்டிற்கு டின்னருக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். இரவு உணவிற்குப் பின் பேச்சு மற்றும் சீட்டுக் கச்சேரியை முடித்துவிட்டு வீடு திரும்புகையில் அதிகாலை மூன்று மணி ஆகிவிட்டது. மறுநாள் கேரி கொண்டதைப்போல் இருந்தது. எழுந்ததே மதிய வேலையில்தான். ஏதோ ஒன்றை கிண்டி சாப்பிட்டுவிட்டு மீண்டும் வண்டி கொடை சாய்ந்தது. மாலை எழுந்து அன்றைக்கு கோவிலுக்கு சென்று வந்தோம். செய்த புண்ணியம் ஏதோ ஒன்றின் பலனாக இரவு சாப்பாடு கோவிலில் கிடைத்தது. இப்படியாக இரண்டு நாட்கள் ஓட்டி ஆகிவிட்டது.


மூன்றாம் நாள், மகன், அவனுடைய நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்று விட்டான். எங்கள் இருவருக்கும் பொழுது போகவில்லை. சரி, சினிமா பார்க்க போகலாம் என்று முடிவு எடுத்தோம். இறுதிச்சுற்று படம் மிகவும் நன்றாக இருப்பதாக விமர்சனங்கள் படித்தோம். நான் பொதுவாக விமர்சனங்களை நம்புவதில்லை. என் தோழிகள் யாராவது படம் பார்த்துவிட்டு அபிப்ராயம் சொன்னால் தான் நம்புவேன். என் தோழி சுஜா படம் பார்த்துவிட்டு,”கீதா, படம் சூப்பர், மாதவன் அதைவிட சூப்பர்”,என்றாள். நானும் ஒரு மாதவப்பிரியை--இதை நான் டைப் செய்யும் போது அருகில் ரவி இல்லை.......என் சம வயது தோழிகள் பலர் மாதவனை “eligible candidate list"ல் எப்பொழுதும் வைத்திருப்போம். சரி நாங்கள் தான் என்றால் எங்கள் பிள்ளைகளும் மாதவனுக்காக ஜொல்லுவிடும்போது கொஞ்சம் உறுத்தலாகக் இருக்கும். சரி அரசியலில் இதெல்லாம் சகஜம் தான். உண்மையான கலையையும் கலைஞனையும் ரசிக்க வயது வரம்பு தேவையில்லை. இறுதிச்சுற்று படத்திற்கு போகலாம் என்று பார்த்தால் டிக்கெட் கிடைக்கவில்லை.


 “கீதா, விசாரணை படம் போலாமா? என்று ரவி கேட்டார். அப்படம் பற்றி நல்ல விமர்சனங்களை கேட்டிருந்தேன். வெற்றிமாறனின், “ஆடுகளம்” எனக்கு மிகவும் பிடித்த படம். ரவி கேட்டவுடனேயே, “சரி போகலாம்” என்று கூறிவிட்டேன். “பாரு, இந்த படம் கொஞ்சம் சீரியஸான படம். அங்க வந்து தியேட்டர்ல உட்காந்துகிட்டு என்ன படம் இது?, எனக்கு பிடிக்கலை, சீரியஸா இருக்கு, போலீஸா இருக்கு, பாட்டு இல்லை, டான்ஸ் இல்லைனு என்னை அனத்தக்கூடாது, ”என்றுமுன்னெச்சரிக்கை செய்தார். “இல்ல இல்ல நான் வர்றேன். தாரை தப்பட்டை மாதிரி படம் எல்லாம் தான் என்னால் பார்க்க முடியாது. இந்த மாதிரி படம் எல்லாம் நான் பார்ப்பேன்:, என்று கூறினேன். இரண்டு பேரும் படத்திற்கு கிளம்பினோம்.


அன்று திங்கட்கிழமை. நல்ல வேலையாக நான் , நான்வெஜ் சாப்பிடும் நாளாக இருந்தது. மதிய உணவிற்கு அஞ்சப்பரிடம் சரனடைந்தோம். நன்றாக பிரியானியை ஒரு பிடி பிடித்துவிட்டு, பீடாவையும் வாங்கி குதப்பிவிட்டு உண்ட மயக்கத்திலேயே படத்திற்கு போனோம். படம் ஆரம்பிக்க முப்பது நிமிடங்கள் இருந்தது. சரி என்ன செய்யலாம் என்று நான் கேட்பதற்குள் “கீதா இன்னும் அரை மணி நேரம் இருக்கு படம் ஆரம்பிக்க. பேசாமல் காரிலேயே ஒரு பதினைந்து நிமிஷம் தூங்கிவிட்டு ஃப்ரெஷ்ஷா படம் பார்க்க போலாம் ”,என்று ரவி முடிவெடுத்தார். எனக்கும் பிரியாணியின் மப்பு தாங்கவில்லை. எங்கே படம் பார்க்கையில் தூங்கி விடுவேனோ என்ற கவலை. தினமும் மதிய வேலையில் ஒரு அரை மணிநேரம் தூங்கி வேறு பழக்கமாகிவிட்டது. அப்படி தூங்கவில்லை என்றால் ஒத்தை தலைவலி, இரட்டை தலைவலி என்று வீட்டில் இருப்பவர்களுக்கு தலைவலி கொடுப்பேன்.ஏசியை ஆன் செய்துவிட்டு இருவரும் காரிலேயே ஒரு கோழி தூக்கம் போட்டுவிட்டு பின் படம் பார்க்க சென்றோம்.


படம் ஆரம்பித்தது தான், என் கவனம் சிறிது கூட சிதறாமல் திரையையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.அந்த அளவிற்கு காட்சிகள் ஆரம்பம் முதல் கட்டி இழுத்தது. மிகவும் விருவிருப்பாக சென்றது.இடைவெளி வந்த பொழுது கூட எப்படா மீண்டும் படம் ஆரம்பிக்கும் என்ற அவசரம், தவிப்பு. தத்ரூபமான காட்சிகள். கச்சிதமான பாத்திரபடைப்புகள். ஒவ்வொரு கதாபாத்திரமும் சலித்து பொறுக்கியது போல் இருந்தது. நடிகர்கள் நடிப்பதை போன்ற உணர்வே வரவில்லை. அனைவரும் நிஜத்தில் பார்த்து பழகியவர்களாகவே தோன்றினார்கள். போலீசாக வருபவர்களின் உடல்மொழி, முகபாவனை, உடல் அமைப்பு, அனைத்தும் அற்புதம். இப்படத்திற்காகவே செதுக்கபபட்ட கதாபாத்திரங்கள். பாடல்களோ, நடனமோ ஏதும் இல்லை. இயல்பாக அன்றாடம் நாம் வாழ்வில் சந்திக்கும் நிதர்சனமான உண்மைகளே காட்சிகளாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பிண்ணனி இசை இயல்பு. வசனங்களில் தெளிவும், தெறிப்பும் இருந்தது.


 படம் முடிந்த பொழுதும் , ஆரம்பம் முதல் சுமக்கப்பட்ட சுமை மனதிலிருந்து விலகவில்லை. ஏதோ ஒரு இனம் தெரியாத வலி. படம் முடிந்த பொழுது அவரவர் எழுந்து போகாமல் ஒன்றாக ஏதோ சொல்லி வைத்ததைப்போல் கைதட்டினார்கள். படத்திற்கா, நடிப்பிற்கா, இயக்குனருக்கா, கையாளப்பட்ட கருவிற்கா, கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்திற்கா, நிஜத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தனக்கும், தன் நண்பர்களுக்கும் நேர்ந்த கொடுமையை “லாக்கப்”என்ற புத்தகத்தின் மூலம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய எழுத்தாளரின் தைரியத்திற்கா, அல்லது படத்திற்கான விருது பெரும் விழாவில் அவரை கவுரவித்ததற்கா என்று நினைத்துபார்த்தால் கைத்தட்டலுக்கான காரணம் இதில் ஏதோ ஒன்று தான் என்று தனித்து கூறமுடியவில்லை. It is a complete package.
வரிக்கு வரி எழுதப்படும் விமர்கனங்களை நான் படம் பார்க்கும் முன் படிப்பதில்லை. அப்படி படித்தால் விமர்சகரின் தாக்கம் என்னுள் படம் பார்க்கும் பொழுது ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணம். அதனால் தான் படம் பற்றிய ஒரு பொதுவான கருத்தையே நான் பகிர்கிறேன்.


அயல் நாடுகளில் வாழும் என்னைப் போன்றோர், வாழும் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து, எங்கே ஏதாவது சட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டால் வாழ்க்கையே முடிந்து போய்விடுமோ என்ற அச்சத்தில் பிரச்சனைகளிலிருந்து தள்ளியே வாழ பழகிவிடுகிறோம். நம் நாடாக இருந்தால் அது வேறுமாதிரியாக இருக்கும் , எப்படியும் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டுவிடலாம் என்ற எண்ணத்திற்கு இப்படம் ஒரு சம்மட்டி அடி. ஜுடிஷியல் சிஸ்டம்  என்ற ஒன்றுக்கு எந்த நாடாக இருந்தாலும் அப்பாவிகள் பலி கொடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் அதிகார வர்கத்தின் கையே ஓங்கி நிற்கிறது. மனிதனின் சுயநலமே தலைதூக்குகிறது. படம் பார்த்த எல்லோர் முகத்திலும் ஒர் சோகம். இப்படம் ஒரு சமுதாய விழிப்புணர்ச்சி என்று சொல்லலாம் என்றால், இப்படி அறிந்து கொல்வதனால் நம்மால் இப்படிபட்ட கொடூரங்களை வேரறுக்க என்ன செய்ய முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. விழித்துக்கொண்டால் மட்டுமே போதாது. இப்படிப்பட்ட சமூக அவலங்களை களைந்தெடுக்க ஒவ்வொரு தனிமனிதனும் மனசாட்சியுள்ள மனிதனாக வாழ்ந்தாலே முடியும். புரட்சி தேவையில்லை, மனதில் எழுச்சி வேண்டும். விசாரணை விசாரிக்காமல் சென்று பார்க்க வேண்டிய அழகான படைப்பு.

Wednesday, March 23, 2016

முத்துக் குளியல்!!

எழுத
எடுத்த பின் தான்
அறிந்தேன்
என் பேனாவிற்கும்
விக்கல் எடுக்கும் என்று!!
வார்த்தை ஒன்றும்
சட ,சட என பொழிய
மழையும் அல்ல,
சல , சல என ஓட
நதியும் அல்ல,
மட , மட என கொட்ட
மலை அருவியும் அல்ல,
வாளி கொண்டு இறைக்க
கிணற்று நீறும் அல்ல,
அது,
புத்தகக் கடலில்
முத்துக் குளித்தால்
கைக்குக் கிட்டும்,
நினைவில் நிற்கும்,
எழுத்தில் வாழும்!!!

Monday, March 21, 2016

எதிர்பார்ப்பு

உறவுகள் மேல்
பற்று வைத்தேன்
கருவேப்பிலையாய்
குப்பையில் விழும் வரை...

ஆசை வார்த்தைகளை
நம்பி பாசம் கொண்டேன்
அவை உள்ளத்திலிருந்து
அல்ல உதட்டிலிருந்து
உதிர்ந்தவை என்று
அறியும் வரை......


காணல் நீர் மீது
காதல் கொண்டேன்
விலகி நின்று பார்த்தவரை.

எதிர்பார்ப்புகள்
பொய்யாகி போனபோது
உறவுகள் பொய்யானது,
உறவுகள் பொய்யான போது
உணர்வுகளும் பொய்யானது,
உணர்வுகள் பொய்யான போது
காணல் நீரும்
கண்ணீர் ஆனது.....

Saturday, March 12, 2016

முதுமை!!

என் ரத்தம்
சுண்டும் வரை
என் வீட்டுத்
திண்ணையில்
ஆயிரம்
அட்டைப்பூச்சிகள்!!!

Friday, March 4, 2016

தனித் தீவு

சனிக்கிழமை காலை. வழக்கம் போல் செல்வி எழுந்து விட்டாள். அவளை எழுப்ப சேவல் கூவத்தேவையில்லை. பழக்க தோஷம்,விடுமுறை நாள் என்றும் பாராமல் அவளை கண் விழிக்கச் செய்தது. வீட்டிற்கு ஒரு கடிகாரம் ,இருந்தது ஒரு காலம். இப்பொழுது தான் ஒரே அறையில் உறங்கினாலும் அவரவர் எழுவதற்கு அவரவருடைய கைத்தொலைபேசியில் அலாரம் வைத்து கொள்கிறார்களே. அவள் வீட்டிலும் அப்படித்தான். தினமும் எல்லா அறைகளிலும் ஒலிக்கும் அலாரத்தை பேசா மடந்தை ஆக்குவது அவள் வேலை. ஏனைன்றால் அதன் சத்தத்தை கேட்டு யாரும் எழுவது இல்லை. அவளின் சத்தத்தை கேட்டுத்தான் எழுவார்கள். சனிக்கிழமை என்றால் அதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கு....

காலை வழக்கம் போல் எழுந்த செல்வி தன் வேலைகளை ஆரம்பித்தாள். மணி பத்தாகியும் வீட்டில் ஒரு சலனமும் இல்லாததால்,” குட் மார்னிங். மணி பத்தாகிறது. எல்லாரும் எழுந்திரிக்கிறீங்களா? “ என்று ஒவ்வொரு அறையாக சென்று கோர்ட் கவாளியைப்போல் எழுப்பினாள்.அவள் சிறுமியாக இருந்தபொழுது அவளின் தந்தையார் அவளையும் அவள் தங்கையையும் எழுப்ப கையாண்ட உத்தி அவளுக்கு நிணைவிற்கு வந்தது. முதலில் அவர் மின் விசிறியை அனைப்பார். சிறிது நேரம் பொறுமையாக இருப்பார். அப்படியும் எந்த அசைவும் இல்லையென்றால் சிறிது தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தெளித்துவிடுவார். பின் என்ன, ஏதும் சொல்ல முடியாமல் கண்களை கசக்கிக்கொண்டே கோவத்துடன் எழுந்து பல் துலக்க செல்லவேண்டும். அதையெல்லாம் அவள் தன் பிள்ளைகளிடம் கூறுவாளே தவிர ஒரு நாளும் செய்முறை விளக்கம் காண்பித்தது இல்லை.அவர்களை அவள் எழுப்புவது கோவிலில் ஒலிக்கும் சுப்ரபாதத்தை போன்றே அவர்களுக்கு ஒலிக்கும்.

ஒரு பத்து நிமிடம் பொறுத்திருந்து விட்டு மீண்டும், “ காலை டிபன் வேலை முடிந்தால் தானே நான் மதிய வேலையை ஆரம்பிக்க முடியும். இப்படி காலை டிபனே பதினோரு மணி வரை முடியாமல் இருந்தால் நான் நாள் முழுதும் அடுப்படியிலேயே படுத்துக்கொள்ள வேண்டியது தான்”, என்று புலம்பிக் கொண்டே கணவன் ராஜ் படுத்திருந்த அறைக்குள் பிரவேசித்தாள். இனியும் இவள் பாடும் சுப்ரபாதத்தை கேட்க முடியாது என்பது போலவும், “நீ பேசுவது எல்லாம் என் காதில் விழுந்தது, “ என்பது போலவும் அதுவரையில் அசையாமல் படுத்திருந்தவர் படுக்கையிலேயே அங்கப்பிரதட்சனம் சிறிது செய்யலானார்.

”ஏங்க கொஞ்சம் எழுந்திறீங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு ,” என்றாள் செல்வி.”சரி சரி ,ஒரு பத்து நிமிஷம் பொறு. நான் எழுந்துவிடுகிறேன்,” என்ற அவர் கண்விழித்து பக்கத்தில் இருந்த கைதொலைபேசியை எடுத்து துலாவ ஆரம்பித்தார். ஏதோ தூங்கும் போது ஒர் உடல் உறுப்பை கழற்றி வைத்துவிட்டு உறங்கியது போலவும் எழுந்தவுடன் அதை மீண்டும் எடுத்து மாட்டிகொண்டது போலவும் அது இருந்தது. அடுத்த அறையில் அப்பனுக்கு பிள்ளை தப்பாதவன் என்பதை நிரூபிப்பதை போல் மகன் ராகுலும்  தன் பங்கிற்கு படுக்கையில் உருண்ட படி “அம்மா, ஃபைவ் மோர் மினிட்ஸ் ,”என்றான். “எப்படியோ போங்க,” என்று கோபிப்பதை போல் சொல்லிவிட்டு வெளியேறினாள். போகும் போது,”எழுந்தவுடன் படுக்கையை ஒழுங்காக தட்டிப்போட்டுட்டு வா,” என்று சேர்த்துக்கொண்டாள்.

ஒருவழியாக இருவரும் எழுந்து வந்து வரவேற்பறையில் அமர்ந்தார்கள். உடனே ராஜ் டிவியை ஆன் செய்தார். ராகுல் லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டான். பின் அவர்களுக்கு பால், காபி , காலை டிபன் என்று தன் கடமையை  எந்த குறையும் இல்லாமல் செய்தாள். .“காலையில் எழுந்ததும் இதெல்லாம் பாக்காம வேறு ஏதாவது செய்யுங்களேன்,” என்றாள். அவள் கூறியதை யாரும் காதில் போட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. டிவி பார்க்கையில் செல்பேசியில் பல விஷயம் நமக்கு தெரியாமல் நடந்தேரறிவிடுமோ என்ற ஐயத்தில் ராஜ் செல்பேசியையும் தொலாவிக்கொண்டே இருந்தார்.


செல்வி மதிய வேலை சமையலை முடித்துவிட்டு,”நீங்க ரெண்டு பேரும் போய் குளிச்சிட்டு வாங்க . அதுக்குள்ள நான் பாத்திரம் கழுவி, வீடு கூட்டி முடிச்சிடறேன். அப்புறம் நான் போய் குளிச்சிட்டு வந்தா ஒரு வேலையாவது ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடலாம் ,”என்றாள். அவர்கள் இருவரும் குளித்துவிட்டு வந்து மீண்டும் டிவி, லாப்டாப்பில் லயித்து போனார்கள். செல்வி தான் போய் குளித்து, சாமி கும்பிட்டு பின் மதிய உணவை மேசை மேல் எடுத்து வைத்தாள். வைக்கும் போதே,”தம்பி நீ டம்ளரில் தண்ணி ஊற்றி வை. சாப்பிட தட்டு எடுத்து வை,” என்றாள். “ம் ஓகே மா, ம் ஓகே மா”, என்று கூறினானே தவிர அந்த தங்க கம்பி உட்கார்ந்த இடத்தை விட்டு இம்மி அளவும் நகரவில்லை. ஏதோ கோந்து போட்டு ஒட்ட வைத்தது போல் ஒரே இடத்தில் அம்ர்ந்திருந்தனர் தந்தை மகன் இருவரும். பொறுமை இழந்த செல்வி தண்ணீர், தட்டு, எல்லாம் தானே எடுத்து வைத்து விட்டு,” சாப்பிடவாவது இரண்டு பேரும் வரீங்களா இல்லை அதுவும் அங்கு கொண்டு வந்து தரணுமா,” என்றாள். குரலை சிறிது உயர்த்திவிட்டாள் போல. உடனே  ராஜ்,”எடுத்து வை. வருகிறோம். ஏன் கத்திக்கிட்டே இருக்க?” என்றார் கோபமாக.  சாப்பாட்டு மேஜையில் அமர்ந்த படி, “என்ன சாப்பாடு?”என்று ராஜ் கேட்டார். மகன் அவன் பங்கிற்கு,”வாட்ஸ் ஃபார் லன்ச்” என்றான். செல்வியும் தன் பங்கிற்கு, சாம்பார், வெண்டைக்காய் பொரியல், முட்டைகோஸ் கூட்டு, அப்பளம் ,”என்று கட கடவென்று  ஹோட்டல் சர்வர் போல் கூறி முடித்தாள். ராகுல், “ அம்மா, ஒய் காண்ட் யு குக் சம்திங் யம்மி?”என்ற படியே வந்தமர்ந்தான். ”உனக்கு என்ன வேண்டுமோ நீயே சமைத்து சாப்பிடலாம். நான் என்ன வேண்டாம் என்றா கூறப்போகிறேன் ,”என்று சொல்லிவிட்டு தானும் சாப்பிடத்தொடங்கினாள் செல்வி. சாப்பிட்டு முடித்தது தான் , உடனே விட்டதை பிடிக்க ஓடியவரைப் போன்று மகனும் தந்தையும் மீண்டும் ஹாலுக்கு சென்றுவிட்டனர். “டேபிளை யாராவது துடைங்களேன்,”என்று சொல்லிக்கொண்டே செல்வி தானே செய்ய ஆரம்பித்தாள். “ராகுல், போய் அம்மாவிற்கு ஹெல்ப் பண்ணு,”என்று சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தார் ராஜ். ராகுலும் கடனே என்று மேஜை மீது இருந்த இரண்டு தண்ணீர் குடித்த டம்ளரை பாத்திரம் கழுவும் இடத்திற்கு இடம் பெயர்த்தான்.  எல்லா வேலையையும் முடித்துவிட்டு களைத்து போய் செல்வி ஹாலில் வந்தமர்ந்தாள்.


அமர்ந்த சிறிது நேரத்தில் ஏதோ நெஞ்சுக் குழியில் சுருக் சுருக் என்று குத்துவதைப் போன்று இருந்தது. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தாள். குறைவதாக தெரியவில்லை. “ராகுல் கொஞ்சம் தண்ணீ எடுத்துட்டு வா. அம்மாக்கு கேஸ் ட்ரபுள் மாதிரி வலிக்குது,”என்றாள். பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவனை தட்டி கேட்டும் பலன் இல்லை . கோபத்தில் தானே எழுந்து அடுக்களைக்குள் செய்றாள். சிறிது வெந்தயத்தை எடுத்து முழுங்கினாள். வலி அதிகமாகவே வாயு மாத்திரை சாப்பிடுவதே மேல் என்று நினைத்து இரண்டு மாத்திரைகளை எடுத்து வாயில் போட்டாள். அது ஒன்றும் சிறிய மாத்திரை அல்ல. ஐந்து செண்ட் காசைவிட சிறிது பெரியதுதான். கடித்து அல்லது சப்பித்தான் சாப்பிட வேண்டும். வலியின் கொடுமையில் வாயில் போட்ட இரண்டு மாத்திரையையும் கடிக்காமல் தண்ணீர் குடித்து முழுங்க முற்பட்டாள். தண்ணீரை வாயில் ஊற்றியது தான் தாமதம். உள்ளே போன மாத்திரைகள் அப்படியே உணவுக்குழாயில் குறுக்கே சிக்கி விட்டது. தொண்டையை யாரோ பிடித்து இருக்குவது போன்ற உணர்வு. கத்தி யாரையும் கூப்பிட கூட திராணியில்லை. கண்களிலிருந்து கண்ணீர் கொட்டி விழி பிதுங்குவது போல் இருந்தது. நெஞ்சின் மீது யாரோ ஏறி நின்று அமுக்குவது போன்ற உணர்வு. வாந்தி எடுத்தால் பரவாயில்லை என்று தோன்றியது. கையை விட்டு வாந்தியை வரவழைத்தாள்.அதிலும் தோல்வி. உள்ளேயும் போகவில்லை, வெளியேயும் வரவில்லை. திரிசங்கு உலகத்தில் இருப்பது போன்று நடுவிலேயே சிக்கிக் கொண்டு துன்புறுத்தியது. மீண்டும் தண்ணீர் எடுத்து கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக குடித்தாள். ஏதோ பூர்வ ஜென்மத்தில் கொஞ்சம் புண்ணியம் செய்து இருந்தாள் போலும். மாத்திரைகள் கரைந்து தொண்டையிலிருந்து நழுவி உள்ளே சென்றுவிட்டது.

அப்பாடா என்று மூச்சு விட்டு விட்டு சில நிமிடங்கள் நெஞ்சை பிடித்துகொண்டு நின்று விட்டு பின் வேர்க்க விறுவிறுக்க ஹாலுக்கு வந்தமர்ந்தாள். அங்கே, எந்த ராஜா எந்த பட்டிணம் போனால் என்ன என்று கணவர் ராஜ் டிவி பார்த்துகொண்டே படுத்திருந்தார். ராகுல் லாப்டாப்பில் மூழ்கி இருந்தான். யாரும் அவளை கவனித்ததாக தெரியவில்லை. இது வரையில் பொறுமையாக இருந்த செல்விக்கு அவளின் ஆற்றாமை கோபமாக வெளிவரத்தொடங்கியது.”ஏங்க அந்த டிவிய கொஞ்சம் நிறுத்தறீங்களா? ராகுல் அந்த செவிட்டு மெஷினை (இயர் போனை அவள் அப்படித்தான் கூறுவாள்) காதுல இருந்து கழட்டு. ஒருத்தி இங்க செத்து போற மாதிரி மூச்சி முட்டி உட்கார்ந்து இருக்கேன், நீங்க ரெண்டு பேரும் அப்படியே டிவி, லாப்டாப்ன்னு உங்கள மறந்து உட்கார்ந்து இருக்கீங்க,’என்று மூச்சு வாங்க கத்தினாள். உடனே ராஜ்,” ஏன் என்ன ஆச்சு ? நல்லா தானே இருக்க?”என்றார். “இப்ப நல்லா இருக்கேன் ஆனா கொஞ்ச சேரத்துக்கு முன்னாடி சாவின் விளிம்பிற்கே போய்ட்டு வந்தது போல் இருந்துச்சு. உள்ளே ஒருத்தி போனாளே ரொம்ம நேரமாகியும் வரவேயில்லையே, என்ன ஆச்சோனு யாராவது வந்து பாத்தீங்களா? என்று  ஆவேசத்துடன் கேட்டாள். கேஸ் மாத்திரை முழுங்கிய போது அது தொண்டையில் சிக்கி விட்டது, என்றாள்.“உனக்கு ஏதாவது பிரச்சனைனா கூப்பிட வேண்டியதுதானே. ஏன் அப்படி சிக்கிக் கொண்டது. மாத்திரை கூடவா ஒழுங்கா சாப்பிட தெரியாது ?”என்று தன் பங்கிற்கு தன் செயலை நியாயப்படுத்தினார்.


“ஆமாம் நான் வேண்டும் என்றே தான் சிக்கிக்க வைச்சுக்கிட்டேன். நான் இருந்தாலும், இறந்தாலும் உங்களுக்கெல்லாம் ஒன்னு தான். இந்த செல் போனை , கம்ப்யூட்டரை கண்டு பிடித்தவனை சொல்லனும். இதெல்லாம் வந்ததில் இருந்து தான் எல்லாம் தான் தான் என்று ஆகிட்டீங்க. ஒரே வீட்ல இருந்தாலும் தனி தனி தீவு மாதிரி வாழ்றோம்,”. என்று தன் கோபத்தை கண்ணுக்கு தெரியாத அந்த கண்டு பிடிப்பாளர்களின் மேல் பாய்ச்சினாள். ” நீயும் தானே இதெல்லாம் யூஸ் பண்ற பின்ன என்ன திட்ற,”என்றார் ராஜ். “ ஆனா நான் அது தான் என் உலகம்னு இருபத்தினான்ங்கு மணி நேரமும் அதில் மூழ்கி கிடக்கவில்லையே. ஒரு அளவு பயன் படுத்தினால் சரி. எழுந்திரிச்சது முதல் படுக்க போகும் வரை அதுவே கதி என்றால் என்ன பண்ணுவது. உங்களை சொல்லி குற்றமில்லை. எல்லாத்தையும் இழுத்து போட்டு நான் செய்யறேன் பாருங்க என்ன சொல்லனும். நானும் உங்களைப்போல அக்கடானு இருந்தா பின்ன தெரியும். உங்க வாரிசு இருக்கே, எனக்கு விக்கல் எடுத்தால் தண்ணிர் தர வரமாட்டான். விக்கி செத்தப்பின் பால் ஊத்தத்தான் வருவான். என்னவோ போங்க. உங்களையெல்லாம் மாத்தவே முடியாது. நான் கத்துறது எல்லாம் வேஸ்ட். நான் போய் கொஞ்சம் படுக்கிறேன்,”என்று நீட்டி முழக்கி நடந்த எல்லாவற்றிற்கும்  யாரையெல்லாம் குற்றவாளி ஆக்க முடியுமோ ஆக்கிவிட்டு கடைசியில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று முடிவுக்கு வந்தவளாய் படுக்கச் சென்றாள். அப்பொழுது தான் அவள் தோழியிடமிருந்து அவளுக்கு வைபரில் அழைப்பு வந்தது. பின் நடந்தது என்ன என்று உங்களுக்கே தெரியும்.....