Saturday, February 1, 2020

KD (எ) கருப்புதுரை

KD (எ) கருப்புதுரை
வாழ்க்கையில் சில விஷயங்கள் பிடித்துப்போக காரணம் அது நம் மனதுக்கு இனிதாக அமைவதாலும், மனதிற்கு ஒரு வித அமைதியான மகிழ்வை தருவதாலும் ஏற்படுகிறது. KD (எ) கருப்புதுரை படம் எனக்கு பிடித்துப் போக காரணமும் அதுவே. இளமையான கதாநாயகனோ, அல்லது அழகான கதாநாயகியோ அல்லது கண் கவரும் நடனக் காட்சிகளோ, சில பல முடிச்சுக்களுடன், திருப்பங்களுடன் கூடிய கதையோ ஏதும் இல்லை. ஆனாலும் படம் பிடித்துப் போனது. நண்பர்கள் சிலரின் பரிந்துரைத்த படியால் படம் பார்க்க ஆரம்பித்தேன். எனக்கு படம் பிடித்துப்போன காரணங்களை பட்டியல் இட்டு எனக்கு நானே பார்த்தேன்.
1. பச்சை பசேல் என்ற வயல் பகுதி.
2. கிராம சூழ்நிலை.
3. வயதான கருப்புத்துரை அவரின் நடிப்பு. இறந்து போன என் தாத்தாவை எங்கேயோ நியாபகப்படுத்தினார்.
4. சிறுவன் குட்டியாக நடித்து இருக்கும் சுட்டிப் பயல் நாகவிஷால்.
5. தாத்தாவிற்கும் சிறுவனுக்கும் இருக்கும் அழகான எதிர் பார்ப்பில்லா உறவு.
6. வயதான பின் பார்த்துக்கொள்ளும் காதலர்களிடையே இருக்கும் பாசம், நேசம். காதலின் பரினாம வளர்ச்சி.
7.அழகிய அந்த ஓடைகளும், ஆறுகளும்.
8. இந்த உலகில் பாசம் வைக்க வயது ஒரு தடை இல்லை என்ற கோட்பாடு.
9. எல்லா சொந்தங்களும் பந்தங்களும் வெறுத்தாலும் யாரும் இந்த உலகில் தனியாக விடப்படுவதில்லை என்ற நிலை.
10. அடுத்தவர் மீது அக்கறை உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை.
11. சாக்குத் துணி கொண்டு கட்டப்பட்டு இருக்கும் அந்த கூடார வீடு. சிறு வயதில் மழைகாலத்தில் குடைகள் கொண்டும், போர்வை கொண்டும் இது போல் கூடாரம் அமைத்து விளையாடிய நினைவுகள் வந்து போனது.மகிழ்ச்சியாக வாழ மாட மாளிகை வேண்டாம். சிறு கூடாரத்திலும் மகிழ்ச்சி உலாவரும். பாசம் வைக்க, நேசம் வைக்க துணை ஒன்று இருந்தால்.
12. ரம்மியமான இசை.
13. தாத்தாவின் bucket list ...என்னுடைய bucket list என்ன என்று நினைத்து பார்க்க வைத்தது. ஓடிக் கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கையில் நம் ஆசைகளை நினைத்துப் பார்க்க கூட நேரம் கிடைப்பதில்லை நமக்கு.
14. தாத்தா , சிறுவன் இடையே நடக்கும் உரையாடல், விளையாட்டுகள், நக்கல், கேலி. இப்பொழுதெல்லாம் பிள்ளைகள் தாத்தா பாட்டியிடம் பேசுவதே அரிதாகி போய் விட்டது. அவரவர் பிள்ளை வளர்ப்பையே சுமையாக கருதும் இக்காலகட்டத்தில் பேரக்குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவோ, விளையாடவோ இனிவரும் சந்ததியருக்கு தோன்றுமா என்பதே கேள்விக்குறி. எல்லோரும் My time, My space என்பதை நோக்கி போய்கொண்டிருக்கிறோம்.
15.எல்லாவற்றையும் விட பிரியாணியின் வாசம் திரையை தாண்டி மூக்கை துளைத்தது. இந்தியாவின் தேசிய உணவு பிரியாணி தான். இதில் சந்தேகமே வேண்டாம்.
வாழ்தல் என்பது முக்கியம். ஆனால் அனுபவித்து வாழ்தல் என்பது அதைவிட முக்கியம். சிறு சிறு சந்தோஷங்களே வாழ்க்கையின் சுவாரசியமும் ஆணிவேரும் ஆகும். அனுபவித்து பார்க்க வேண்டிய படம்.

No comments: