Sunday, September 8, 2019

எழுந்துவிடு விக்ரமா!

எழுந்துவிடு விக்ரமா!
அந்த ஆதித்யன்
நிழல் படாத இடத்தின்
ரகசியம் அறிய
விக்ரமாதித்தியனாய்
சிவன் அருளாலே
உன்னை அனுப்பி வைத்தோம்!
சுகமாய் நீ புலம் பெயற
கவனமாய் மறுவீடு
அனுப்பி வைத்தோம்!
நீண்ட தூர பயண களைப்பில்
நீ வீடுபேறு அடையும் முன்னர்
சற்றே உறங்கி விட்டாய்!
உன் உறக்கம் கேட்ட உடன்
கோடி கண்கள் ஒளி இழந்ததடா!
உன்னை ஆண்டு பல சுமந்து
கவனமாய் பெற்றெடுத்த
பெற்றோரும்
நீறு பூத்த நெருப்பாய்
கண்ணீர் வடிக்கின்றார்!
ஆண்டுகள் பதினாங்கு
காட்டில் வாழ்ந்த ராமனே
நாடு திரும்பி வந்துவிட்டான்!
பதினாங்கே நாட்கள் தான்
உன்னை நாங்கள்
சந்திர மண்டலத்திற்கு
ஆசையாய் அனுப்பி வைத்தோம்!
கோபிக்காமல் சீக்கிரமே
எழுந்துவிடு விக்ரமா!
தந்திரமாய் சென்ற வேலை முடித்துவிடு!
இருட்டை கண்டு பயம் கொள்ளாதே!
அந்த கருப்பு வெறும் நிறமே!
நீ ஒளிந்து விளையாடியது போதும்
ஒளி கொண்டு எழுந்துவிடு!
நீ பார்க்கும் காட்சிதனை
ஓயாமல் அனுப்பிவிடு!
சுகமாய் நீ அங்கு இருக்கின்றாய்
என்று படம் மூலம் சொல்லி விடு!
உன் ஒருவன் உயிர் நாடியில்
ஒரு தேசமே உயிர்த்தெழுமே!

No comments: