Thursday, March 1, 2018

மனிதம் மடிகிறது!

மனிதம் மடிகிறது!
குழந்தைகளாய் போன
முதியோரை கொன்று
எலும்புக் குவியலாய்
பாதாள பிணவறையில்
மறைத்து வைத்த
மனிதருள் மனிதம்
மடிந்துவிட்டது!
உடல் பிரிந்த உயிர் பார்க்க,
ஊர்வலமாய் உலாவந்த
உயிரற்ற உடலுடன்
செல்ஃபி எடுத்து
ஊருடன் பகிர்ந்த
மனிதருள் மனிதம்
மடிந்துவிட்டது!
பால்குடி மறவா குழந்தைகள்
ஓடிவிளையாடும் சிறார்கள்
கொஞ்சி பேசும் மழலைகள்
யாவரிலும்
பேதம் ஏதும் பாராமல்
குண்டு வீசி
தோலும் சதையும் பிய்யப் பிய்ய
ரத்தம் பார்த்து குதூகலிக்கும்
மனிதருள் மனிதம்
மடிந்து விட்டது!
பசிக்கு அரிசி திருடிய
மனநலமில்லா ஒருவனை
அடித்து கொன்று
ஆனந்தமாய் படம் பிடித்த
மனிதருள் மனிதம்
மடிந்து விட்டது!
தந்தை கை கத்தி
தான் வளர்த்த கோழியின்
கழுத்தை பதம் பார்க்குமோ
என அஞ்சி நடுங்கிய
சிறு குழந்தை,
அழுது ஆர்ப்பரித்து
கோழியை விடுவித்து
ஓடவிட்டு பெருமூச்சு விட்டு
பார்த்து ரசித்த போது
மழலையின் உருவில்
மனிதம் இன்றும் வாழ்கிறது!
குழந்தையாய் உள்ளவரை
ஒவ்வொருவுள்ளும் மனிதம்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது!
மனிதனாய் வளர்ந்த பின் தான்
மனிதம் இங்கு மடிகிறது!!!

No comments: