Monday, November 14, 2016

மழை!!



”தஞ்சையில் மழை”
என்று
தொலைபேசியில்
நண்பன் சொல்ல
கேட்கிறேன்!

மனம்
டிக்கெட் வாங்காமல்
வானூர்தி ஏறாமல்
பயணித்துவிட்டது!

மண் வாசம்,
கருத்த வானம்,
அதனிலிருந்து கொட்டும் அருவி,
நனைந்த என் வீட்டு மர ஊஞ்சல்,
சாரல் அடிக்கும் திண்ணை,
நீர் ஒழுகும் என் வீட்டு தென்னங்கீற்று,
வாசல் வழி
சிறு வாய்க்காலாய் ஓடும் மழை நீர்,
நணைந்து விழும் பழுத்த மா இலை,
தண்ணீர் சுமை தாங்காமல்
தலை கவிழும் என் வீட்டு ரோஜாப்பூக்கள்,
கார் கொட்டகையில் விழும்
மழையின் சட சட சத்தம்,
மரத்தடி ஒதுங்கும் பசுமாடு,
நணைந்த படி ஓடும் நாய்,
தெரு வழி குடை பிடித்து போகும் என் மக்கள்,
அப்பா எப்படி வீடு வருவார்களோ
என்ற அம்மாவின் தவிப்பு,
வழுக்கும் தரையில்
பொத்தி பொத்தி,
கால் பொதிந்து உள்ளே வரும் தந்தை,
கதவை திறக்க
அவசர அவசரமாக
சமையல் கட்டிலிருந்து
நடந்து வரும் அம்மா,
அம்மாவின் சூடான ஆவிபறக்கும்
சமையலின் சுவை,
யாவும் வந்து போகின்றன
மனதில்!

கடல் தாண்டி பெய்தாலும்
தாய் மண்ணில் விழும்
மழைத்துளியின் வாசம்
மூக்கை துளைக்கிறது!
அங்கே பெய்கிறது மழை,
இங்கே பெய்கிறது என் கண்களில்
கண்ணீர் மழை..






3 comments:

Latha said...

Nice G...

K said...

Superb..took me to thanjavur as well..and could very well relate to how you're feeling!

K said...

Superb..took me to thanjavur as well..and could very well relate to how you're feeling!