Friday, July 5, 2019

மொழிப் புயல்!

மொழிப் புயல்!
நகைச்சுவை புயல் கரையை கடந்து, மொழி புயல் அடித்து ஓய்ந்து இப்பொழுது வேறு எந்தப் புயல் எங்கு மையம் கொண்டு இருக்கிறதோ ?அடித்து ஓய்ந்த மொழி புயலை பற்றிய எனது பார்வை! இது கழுகு பார்வை அல்ல. ஒரு சிறு குருவி பார்வை !காக்கா பார்வை என்று கூட சிலர் சொல்லக்கூடும். பார்வை எதுவானாலும் நோக்கம் ஒன்றாக இருக்குமாயின் எல்லாம் நன்மைக்கே!
பன்னீர் பட்டர் மசாலாவும் நானும் தான் எங்க வீட்டு குழந்தைகளுக்கு பிடிக்கும். கீரை கடைந்தால் பிடிக்காது அதுவே பாலக் பன்னீராக இருந்தால் சாப்பிடுவார்கள்!
எங்கள் வீட்டு திருமணங்களில் இப்பொழுது எல்லாம் மெஹந்தி ஃபங்ஷன், சங்கீத் ஃபங்ஷன் , திருமண உடைகளில் லெஹங்கா வந்தாகிவிட்டது!
சினிமாவில் அழகான , ஒல்லியான,சிகப்பான , உயரமான அடுத்த மாநில கதாநாயகிகளே எங்களுக்கு பிடிக்கும்.
படங்களுக்கு LKG, NKG என்றெல்லாம் பேர். வைத்து மகிழ்வோம்!
நாக்கின் ருசி மாறிப்போனது, உடையில் மாற்றம், ரசனையில் மாற்றம்,கலாச்சாரத்தில் மாற்றம்! இதையெல்லாம் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஏற்க தெரிந்த நமக்கு ஒரு மொழியை மட்டும் கற்றுக்கொள்ள வெறுப்பு!
பிள்ளைகள் சிறுவயதில் எத்துனை மொழிகள் கற்கிறார்களோ அந்த அளவிற்கு புத்திசாலிகளாக ஆவார்கள் என்பது ஆராய்ச்சி முடிவு. ஒரு மொழியில் ஒருவர் தேர்ச்சி பெற்றவராக ஆகவேண்டும் என்றால் அவர் அந்த மொழியில் பேசி பழக வேண்டும். சில வருடங்கள் மட்டுமே படிப்பதால் அது தானாக வளர்ந்து விடாது. அது ஒரு exposure மட்டுமே! அதனை பிள்ளைகளுக்கு கொடுப்பது நம் கடமை.
சிங்கை தமிழ் வானொலியில் தினமும் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அது “நல்ல தமிழில் பேசுவோம் “என்பது. விறுப்பமுள்ளவர்கள் அழைத்து போட்டியில் கலந்து கொள்ளலாம். ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசவேண்டும். இது தான் ஒரு மொழியை வளரச்செய்வதற்கான முயற்சி.
ஒரு மாதம் முழுதும் சிங்கையில் தமிழ் மொழி மாதம் கொண்டாடப்படுகிறது. யுத்தமின்றி சத்தமின்றி இதுவும் நம் மொழியை வளர்பதற்கான முயற்சி!
“வளமான வரிகள் “என்று ஒரு அங்கம் வானொலியில் இடம் பெறும். அது சினிமா பாடல்களில் தரமான ,வளமான வரிகளை எடுத்துக்காட்டும். தமிழை கொண்டாடுவதற்கான முயற்சி மட்டுமில்லை இது, அடுத்த தலைமுறைக்கும் அதன் வளமையை எடுத்துக் கூறும் நிகழ்ச்சி !
இப்படி தமிழ் மொழியை எப்படி வளர்ப்பது, அதனை எப்படி அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்வது என்று யோசிக்காமல், வேற்று மொழியின் வருகையால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று சர்ச்சையை கிளப்புவது தமிழின் ஆளுமையை சந்தேகிப்பதாகும். புலியையே முறத்தை கொண்டு விரட்டிய பரம்பரையில் வந்துவிட்டு இப்படி வேற்று மொழியின் வருகை நம் மொழியை அழித்துவிடும் என்று பயப்படுவது நம் மொழியை சிறுமை படுத்துவதாகும். அத்துனை மொழி பேசிய பாரதி என்ன தமிழை மறந்தவனானா?
போராட்டத்தில் நேரத்தை வீணாக்காமல் தமிழ் மொழியை மென்மேலும் எப்படி ஆக்கபூர்வமாக வளர செய்வது என்று சிந்தித்தல் நலம் பயக்கும்! நம் மூளை ஒன்றும் அவ்வளவு மோசமானது அல்ல. ஒரு மொழி மட்டும் கற்றுக்கொள்ளும் திறன் படைத்தது அல்ல. அதனால் பல மொழிகள் கற்றுக்கொள்ள முடியும்.
வேற்று மொழி கற்கும் பொழுதுதான் நம் மொழியின் வளம் நமக்கு புலன்படும். நல்ல தரமான மொழி பெயர்ப்பு எழுத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.
எனக்கு தெரிந்த வரை வேற்று மொழி பேசுபவர்கள் முக்கால்வாசி பேர் அவரவர் மொழி பேசுபவரை பார்த்துவிட்டால் அவர்கள் மொழியிலேயே தான் பேசுவார்கள். பக்கத்தில் இருப்பவர்களுக்கு புரிகிறதா இல்லையா என்ற எண்ணமே இருக்காது. ஆனால் தமிழ் பேசுபவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. நாம் பேசுவது அருகில் இருப்பவர்களுக்கு புரியவில்லை என்றால் அது கொலை குற்றம் போல் உடனே எல்லோருக்கும் புரியும் படியான ஆங்கிலத்தில் பேசதொடங்கி விடுவோம். இதனை நல்ல பழக்கம் என்பதா அல்லது மொழி மீது நமக்கில்லாதா ஈடுபாடு என்பதா? நம் மொழி மீது நமக்கு முதலில் மதிப்பு உண்டாக வேண்டும். அது பிறமொழியை சிறுமை படுத்தி வரக்கூடாது. நம் மொழியை வளபடுத்தி , எல்லோரிடமும் கொண்டு செல்வதில் இருக்கிறது! ஒருவருக்கு எத்துனை எத்துனை திறமை இருக்கிறதோ அவ்வளவு முன்னேற்றம் அவர் வாழ்வில் அடைவார். அந்த திறமைக்கு அணைபோட யாருக்கும் உரிமை இல்லை. ஊக்குவிக்கவே முயலவேண்டும் ! அம்மாவின் கண்டிப்பும் வேண்டும் ,அத்தையின் அரவணைப்பும் வேண்டும். அதுவே நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்!

No comments: