Friday, December 29, 2017

மூணு முத்துக் கொலுசு!






மூணு முத்துக் கொலுசு!
வெள்ளிக் கொடி
அதில்,
அங்கங்கே மூனு முத்து!
ஜலக் ஜலக் சத்தம்
இதற்கு பெயர் மூணு முத்துக் கொலுசு!
இதை சொன்னவள்
நீதானடி தோழி!
உன் மூணு முத்துக் கொலுசுக்கு
மறுபிறவி வேண்டுமென
என்மேல் நீ வைத்த
நம்பிக்கைக்கு
உயிர் கொடுக்க
வரைந்தேனடி இம்மடலை!


நீ குழந்தையாய்
அடிமேல் அடிவைத்து
நடக்க பயந்த பொழுது
உன் தாய் போட்டுவிட்டா
மூணு முத்துக் கொலுசு!
அடி எடுத்து வைக்கும் போது
சத்தம் கேட்டு பயமில்லாமல்
அழகாய் அடுத்த  அடி
எடுத்து வைத்தாய்!
அதை பார்த்து ரசிச்சா
ராசாத்தி உன் தாயி!


மூன்று நான்கு வயதிருக்கும்!
விளையாடுகிறேன் என்று
எங்கு போய் ஒளிந்து கொண்டு
கண்ணனென குறும்பு செய்வாய்
என ஆறிந்து கொள்ள
உன் காலில் பூட்டிவிட்டாள்
மூணு முத்துக் கொலுசு!
ஒளிந்து மறைந்து நீ செய்த
குறும்பனைத்தும் காட்டிக் கொடுத்ததாம்
உன் மூணு முத்துக் கொலுசு!

பதின்ம வயது நீ அடைந்த போது
அழகாய் பட்டு பாவாடை சட்டைப் போட்டுவிட்டு
உன் பாதம் அணிவித்து
அழகு பார்த்தாள்
மூணு முத்துக் கொலுசு!
சலக் சலக் என நீ
ஒய்யாரமாய் நடந்த நடையை
ஊர் மக்கள் யாவருமே பார்த்து ரசிக்க
உன் தாய் மட்டும்,”மோகிணி என
டங் டங் என நடக்காதே.
பெண்ணென மெதுவாய்
பூமித்தாய்க்கு வலிக்காமல்
சத்தம் வராமல்
மெதுவாய் கால் பதித்து
அழகாய் நடந்திடடி,”
என பல் இடுக்கில் வார்த்தைகளை
விழுங்கினாளடி தோழி!
”சத்தம் வராமல் நடக்க எனக்கெதுக்கு
மூணு முத்துக் கொலுசு?”
என செல்லமாய் கடிந்து
கொண்டாயடி நீயும்!

நைலக்ஸ் தாவணி அணிந்து
அது நழுவாமல் மேல் இருக்க
இருக்கமாய் அணைத்து பிடித்த புத்தகத்தோடு
தெருவில் நீ நடக்கையிலே
உன் மூணு முத்துக் கொலுசின்
பாட்டொலிக் கேட்டு
வாசலில் வழுக்கி
விழுந்தாரடி வாலிப கிறுக்கர்கள்!

மூன்று முடுச்சு கழுத்திலே ஏறியப்பின்
புதுப்பெண் வருகிறாள்
என்பதற்கு ,அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து போட்டுவிட்ட
புது மெட்டியுடன்
மூணு முத்துக் கொலுசும்
சேர்ந்துத்தான் இசைத்ததடி தோழி!

உன்னவன் அருகினிலே
யாருக்கும் தெரியாமல்
ஆசையாய் நீ கொஞ்சும் போது
உன் மஞ்சள் பூசிய பாதத்தில்
பாம்பாய் நெளியும்
மூணு முத்துக் கொலுசு
மெதுவாய் முனகுமடி!
ஆசையாய் அணிவித்த
மூணு முத்துக் கொலுசையும்
அவிழ்த்துவை என்பான்.
மறுப்பேதும் பேசாமல்
மூணு முத்துக் கொலுசை
நீயும் தான் சத்தமில்லாமல்
சினுங்காமல் , சாதுர்யமாய்
அவிழ்த்திடுவாய்!

பிள்ளைகள் வளர்ந்தவுடன்
கொலுசு சத்தம் எனக்கெதுக்கு
என்று மூணு முத்துக் கொலுசை
முனுமுனுத்தே கழற்றி வைத்தாய்!
கழற்றிவைத்த மூணு முத்துக் கொலுசும்
பலகாலம் பெட்டகத்தில்
ஊமையாய் உறங்குதடி!

உன்னவன் ஆசைப்பட
அறுபதாம் கல்யாணத்தில்
உன் பாதம் பார்க்குமாம்
மூணு முத்துக் கொலுசு!
வெட்கத்துடன் நீ தலை குணிய,
தோல் சுருங்கிய பாதம்தான்
ஆனாலும் அழகாய்
பாடுமாம் சுப்ரபாதம்
உன் மூணு முத்துக் கொலுசு!

உன் பேத்தி வரும்வரையில்
மெளன விரதம் இருந்துடுமாம்
மூணு முத்துக் கொலுசு!
அவள் வந்தவுடன்
மீண்டும் ஆர்ப்பரிக்குமாம்
உன் மூணு முத்துக் கொலுசு!



No comments: