Wednesday, May 2, 2018

என் கடன் பணி செய்து கிடப்பதே !






நேற்று உழைப்பாளர் தினத்திற்காக நான் உழைபாளர் சிலையின் படத்தை வரைந்து என் தோழிக்கு அனுப்பி வைத்தேன். அதைப் பார்த்துவிட்டு அவள்,”நான் உனக்கு ஒரு டாக்குமெண்டரி வீடியோ அனுப்பி வைக்கிறேன். அதைப் பார்த்தப் பின் உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதி அனுப்பு,” என்றாள். கூடவே,”முதல் பத்து நிமிடங்களுக்கு மேல் உனக்கு அது எதைப்பற்றியது என்பதை தெரிந்து கொள்ள ஆகாது. அதற்கு மேல் உன்னால் அந்த வீடியோவை பார்க்க முடியாது,”என்றாள்.

சரி அப்படி என்னதான் வீடியோ அது என்று பார்க்க ஆவலாக இருந்தேன். அவளும் அந்த வீடியோவை அனுப்பி வைத்தாள். அந்த டாக்குமெண்டரியின் பெயர்,”கக்கூஸ்”. இந்த வார்த்தையை என் வாயால் உச்சரிக்கக்கூட நான் கூச்சப்படுவேன். டாய்லெட், ரெஸ்ட் ரூம் என்று சொல்லியே பழக்கமாகி விட்டது.  இதை பார்ப்பதா இல்லை வேண்டாமா என்ற ஒரு குழப்பம் . சரி, இவ்வளவு சொல்லி இருக்கிறாளே பார்த்துவிடுவோம் என்று அந்த லிங்கை திறந்து பார்க்க ஆரம்பித்தேன். முதல் காட்சியே என் வயிற்றை குமட்டச்செய்தது. அந்த டாக்குமெண்டரி துப்புறவு பணி செய்பவர்களைப் பற்றியும், அவர்களின் அவல நிலை பற்றியும், கழிப்பிடங்கள் பற்றியும், குப்பைக்கூளங்கள் பற்றியும், துப்புறவு பணி செய்பவர்களின் வாழ்க்கை, அவர்களின் சுகாதார பிரச்சனைகள், வேலையிலும், வேலை இடத்திலும் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சணைகள்  மற்றும் அபாயகரங்கள் பற்றியும்  எடுக்கப்பட்டிருந்தது.

முதல் பத்து நிமிடங்கள் பார்த்தப் பின் என்னால் அதில் வரும் காட்சிகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. முழுவதுமாக பார்க்க நம்மால் முடியுமா ? என்ற சந்தேகம். பார்க்க முடியாவிட்டால், கேட்டாவது  மட்டும் பார்ப்போம் , அதில் அப்படி என்னதான் சொல்கிறார்கள் என்று முடிவு செய்து எதையோ வரைந்த படி கேட்க ஆரம்பித்தேன். அப்பப்பா, என்ன கொடுமை, என்ன கொடுமை!இந்த வாழ்க்கையில் நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள் என்பதை  அந்த நொடி உணர்ந்தேன். பல எண்ண ஓட்டங்கள் எனக்குள் ஓட ஆரம்பித்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல்  ஒடிய அந்த முழு டாக்குமெண்டரியை அவ்வப்போது பார்த்தும்,  கேட்டும் முடித்தேன். அதற்குள் நடு ராத்திரி பன்னிரண்டரை  ஆகிவிட்டது. தூங்க சென்ற என்னால் கண்களை மூடிக்கொள்ள முடிந்ததே தவிர தூங்க முடியவில்லை. அந்த காட்சிகள் சம்மட்டியை வைத்து என் தலையில் அடிப்பது போன்று மீண்டும் மீண்டும் என் கண்களுக்குள்ளும், மூளைக்குள்ளும்  விவரிக்க முடியாத ஒரு வித அவஸ்தயை உண்டு பண்ணியது. கனத்த மனத்தோடு சில மணி நேரத்திற்குப் பின் தூங்கி விட்டேன்.

காலை எழுந்தவுடன் மீண்டும் அதைப்பற்றிய நினைவுகளே. மனித கழிவுகளையும், குப்பைகளையும் சுத்தம் செய்வோர் எவ்வளவு பாவப்பட்டோர் என்று எனக்கு உறுத்தியது. நானும் அவர்களின் இந்த இழிநிலைக்கு என்னை அறியாமல் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருக்கிறேன் என்பதை நினைக்கும் பொழுது என் மனம் அழுத்தத்தை உணர்கிறது. சிறு வயதாக இருந்த பொழுது எங்கள் வீட்டு செப்டிக் டாங்க் சுத்தம் செய்ய வருபவர்களை பார்த்து இருக்கிறேன். மனம் கஷ்டப்படும். அவர்கள் வேலையை முடித்து விட்டு போகும் வரை மூக்கை மூடிக்கொண்டு, சன்னல், கதவுகளை சாத்திக்கொண்டு வீட்டிற்குள்ளேயே அமர்ந்து இருப்போம். ஒரு வாரம் வரை கொல்லப்பக்கத்திற்கு போவதை தவிர்த்து விடுவோம். சுத்தம் செய்துவிட்டு போனவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும் ? அவர்களின் நிலை பற்றி யோசித்தது கிடையாது. இப்பொழுது நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.

செப்டிக் டாங்க் சுத்தம் செய்ய இப்பொழுதெல்லாம் மெஷின் வந்துவிட்டது என்று நினைத்து இருந்தேன். அவர்களுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டு இருந்தேன். செப்டிக் டாங்க் சுத்தம் செய்ய வேண்டுமானால் மெஷின் இருக்கலாம் ஆனால் நாம் அன்றாடம் போடும் குப்பைகளையும், அடைத்துக் கொள்ளும் பாதாள சாக்கடைகளையும், ஆஸ்பத்திரி கழிவுகளையும், பொது கழிப்பிடங்களையும், ரயில் வண்டி பாதைகளையும், இன்னும் எத்தனை எத்தனையோ  குப்பைகளையும் இன்று வரை மனிதர்களே கைகளைக் கொண்டு சுத்தம் செய்கிறார்கள் என்று பார்த்த பொழுது என் அறிவீனம் என்னை சாட்டையால் அடித்தது.  இதற்கெல்லாம் விடிவு காலமே வராதா என்று ஆதங்கமும், அழுகையும் சேர்ந்தே வருகிறது. இந்த மனித மெஷின்களின் இந்த நிலைக்கு என்ன காரணம், யார் காரணம் என்று யோசிக்கிறேன்.

சுத்தத்திற்கு பெயர் போன சிங்கப்பூரிலும் குப்பைகளை வகைப்படுத்துவது மனிதர்களே. ஆனால் அவர்களுக்கென்று கையுறைகள், காலணிகள், முககவசங்கள் எல்லாம் தரப்படுகிறது. குப்பைகளை கையாளும் முறை கற்பிக்கப்படுகிறது. அதற்கான கருவிகளும் , தேவையான உபகரணங்களும் தரப்படுகிறது. அவர்களுக்கும் கஷ்டம் தான் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் இந்தியாவைப் போல வேறெந்த நாட்டிலும் பொது இடங்களில் , வெட்ட வெளிகளில் குப்பைகளையோ, கழிவுகளையோ போடுவதோ,இல்லை வெட்ட வெளிகளை கழிப்பிடமாகவோ உபயோகப்படுத்துவதும் இல்லை. இந்த நிலை எதனால் ஏற்பட்டது?

சுத்தத்திற்கு பெயர் போனவர்கள் நாம் . ஒரு காலத்தில் வெளியில் சென்று விட்டு வீடு வருபவர்கள் கால் ,கையை சுத்தம் செய்து விட்டு வரவேண்டும் என்று வீட்டு வாசலிலேயே தண்ணீர் குவளை இருக்கும் . செருப்பு என்பது வீட்டுக்கு வெளியில் மட்டுமே பயன் படுத்துவோம். முன்னங்கால்களை மட்டும் கழுவினால் பத்தாது சனி விடாது , குதிகால்களிலும் தண்ணீர் ஊற்றி கழுவி விட்டுத்தான் வீட்டிற்குள் வரவேண்டும் என்ற ஐதீகம் எல்லாம் நமக்கு உண்டு. இந்த சுத்தம் பற்றி நாம் பேசுவது எல்லாம் நம் வீட்டிற்குள் மட்டுமே. வெளி இடங்களையும், பொது இடங்களையும், நம் வீட்டின் வேலியை தாண்டி சந்து , பொந்து என்று மற்ற எல்லா இடங்களையும் சுத்தமாக நாம் வைத்துக் கொள்ள நமக்கு சொல்லிக் கொடுக்கப்படுவதே இல்லை. என் வீடு சுத்தமாக இருந்தால் போதும் என்ற சுயநலம். என் வீடு நாறாதிருக்க என் வீட்டு குப்பையை வெளியில் தூக்கிப் போடும் நான் அதை சுத்தம் செய்பவர்களைப்பற்றி கொஞ்சம் கூட நினைத்துப் பார்ப்பதே இல்லை.

துப்புறவு தொழிலாளர்களும் மனிதர்களே, அவர்கள் ஒன்றும்  அருவருப்பு உணர்வும், அசிங்க உணர்வும் இல்லாத ஜடங்கள் இல்லை. துப்புறவு பணியாளர்கள் இல்லாமல் செய்ய முடியாது. ஆனால்  அவர்களின் வேலை பளுவை, அவர்களின் கஷ்டத்தை குறைக்க நம்மால் என்ன செய்ய முடியும் என்று நான் சிந்தித்து பார்த்தேன். பல விஷயங்கள் எனக்கு தோன்றியது.  துப்புறவு தொழிலாளர்களை தீண்டத்தகாதவர்கள் போல் சமுதாயம் நடத்துகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதில் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் , அவர்களை கண்டு ஒதுங்கி போவது அவர்களை மதிக்காமலோ அல்ல அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற எண்ணம் கொண்டோ அல்ல. அவர்கள் துப்புறவு வேலை செய்வதால், வேலை செய்யும் பொழுது அவர்கள் சுத்தமாக இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் குப்பைகளை கையாள்வதால் அவர்கள் அழுக்காக இருப்பார்கள். அவர்களுக்கு சுத்தம் பற்றிய விழிப்புணர்வு இருக்காது. எனவே அவர்களிடம் இருந்து கொஞ்சம் விலகி இருப்போம் என்ற எண்ணத்தினால் இருக்கலாம். குப்பையை சுத்தம் செய்பவர்களை அந்த குப்பை வண்டியிலேயே அமரவைத்து கூட்டிச் செல்வார்களாம். பாதாள சாக்கடை சுத்தம் செய்ய ஆள் எடுப்பதற்கு சில தகுதிகள் உண்டாம். அது என்னவென்றால், அவர் நன்றாக குடித்துவிட்டு பாதாள சாக்கடையில் உள்ளே சில நிமிடங்கள் தம் பிடித்து இருக்க முடிந்தால் அவருக்கு வேலை உண்டாம். இந்த கொடுமைகள் இன்றும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றன.

இன்னும் பல நெஞ்சை உலுக்கும் உண்மைகள் அந்த வீடியோவில் காண்பிக்கப்படுகிறது. வீடியோவை பார்க்கும் நமக்கே இப்படி வயிற்றை பிரட்டுகிறதே  இந்த வேலையை  தினம் தினம் பார்ப்பவர்களுக்கும், சுத்தம் செய்பவர்களுக்கும் மனநிலை எப்படி இருக்கும். சிலர் சொல்கிறார்கள், “எங்கள் குழந்தைகள் எங்கள் கையால் சாப்பாடு வாங்கி சாப்பிட மாட்டார்கள்,” என்று. ஆனாலும் குடும்பத்திற்காகவும், வயிற்றுப் பசிக்காகவும் எல்லா அசிங்கங்களையும் சகித்துக் கொண்டு அவர்கள் தங்களை இத்தொழிலுக்கு அர்பணித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நம் நாட்டில் முதலில் சுத்தத்திற்கான பாட திட்டம் வகுக்கப்பட வேண்டு. சிறு வயது முதலே சுத்தமாக இருக்க அறிவுறுத்தப்படவேண்டும். தான் மட்டும் சுத்தமாக இருத்தல் பத்தாது , நம்முடைய சுற்றுப் புறத்தையும் எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலே, சுத்தம் செய்பவர் வேறு யாரோ தானே , நமக்கென்ன , நம்முடைய வேலை குப்பையை தூக்கிப்போடுவது. என் வீட்டு வேலை ஆள்தானே என் கழிவறையை சுத்தம் செய்கிறார், நான் ஏன் அதை சுத்தமாக வைத்து விட்டுத்தான் வரவேண்டும், “ என்பது போன்ற எண்ணங்களை மாற்ற வேண்டும். துப்புறவு வேலை செய்பவர் அருவெறுப்பு படாவண்ணம் நம் வீட்டு குப்பையை நாம் ஒழுங்காக போட வேண்டிய இடத்தில், மூட்டையாகவோ, ப்ளாஸ்டிக் கவரிலோ, போட்டு கட்டி போடவேண்டும். கறிமீன் கழுவுகள், sanitary napkin, diaper , முதலியவைகளை தூக்கி போடும் பொழுது ஒழுங்காக ஒரு கவரில் போட்டு குப்பைத்தொட்டியில் போட வேண்டும். குப்பைகளை அகற்ற  அரசாங்கமும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பொது மக்கள் மற்றும் அரசாங்கத்தின் கூட்டு முயற்சியினால் மட்டுமே இப்பிரச்சனைகள் களையப்பட முடியுமே தவிர வேறு எப்படியும் இதனை சரி செய்ய இயலாது.

என் பிள்ளைகளிடம்,”வேறு ஒருவர் அசிங்கமாக விட்டு விட்டு வரும் பாத்ரூமை உங்களால் நிம்மதியாக உபயோக படுத்தவோ, சுத்தம் செய்யவோ முடியுமா? அடுத்தவர்கள் டாய்லெட்டை அசிங்கமாக விட்டுச்சென்றால் உங்களுக்கு கோபம் வருமா வராதா? அப்படி இருக்க நீங்கள் அப்படி ஒரு நாளும் விட்டு விட்டு வரக்கூடாது. வீட்டு வேலையாள் அசிங்கப்பட்டு இந்த வேலையை செய்தால் அந்த பாவம் நம்மைத்தான் வந்து சேரும். அவர்களும் மனிதர்களே. நாம் உபயோகபடுத்திவிட்டு அசிங்கமாக டாய்லெட்டை விட்டு விட்டு வந்தால் அது நமக்கு அசிங்கம்,எனவே ஒவ்வொரு முறையும் எந்த இடமாக இருந்தாலும் சரி , வீடானாலும், ஹோட்டலானாலும் சரி, பள்ளியானாலும்,பொது  கழிப்பிடமானாலும்  நீங்கள் டாய்லெட் உபயோகபடுத்திவிட்டு வரும் பொழுது சுத்தமாக இருக்கிறதா என்பதை பார்த்து விட்டு வாருங்கள்,”என்று கூறுவேன்.

இந்த வீடியோவை பற்றி என் மகனுக்கு சொன்னேன். அவனையும் பார்க்க சொல்லி இருக்கிறேன். அவனும் தெரிந்து கொள்ளட்டும் . இப்பணி செய்பவர்களின் கஷ்டம் ,நஷ்டம், தியாகம் என்ன என்பதை. மேலும், நமக்கெல்லாம் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையின் அருமையும் தெரிந்து கொள்ள முடியும். ஒரு நேரம் ஏண்டா இதைப்பார்த்தோம் என்று தோன்றுகிறது. Ignorance is a bliss  என்றும் நினைக்கத் தோன்றுகிறது. நமக்கு இருக்கும் பிரச்சனைகளில் எதற்கு இதெல்லாம் தலைக்கு ஏற்றிக் கொண்டு அவதிபட வேண்டும் என்றும் தோன்றியது. ஆனால் , நாம் ஒவ்வொருவருக்கும் சமுதாய பொறுப்புணர்ச்சி என்று சிறிதேனும் இருத்தல் அவசியம். அதற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று நினைத்து பார்க்க வேண்டுமே தவிர , கண்களை மூடிக்கொண்டு கற்பனை உலகில் வாழ்வதால் பயனில்லை. நிதர்சனம் கசக்கத்தான் செய்யும் எட்டிக்காயைப் போல்!இனியாவது துப்புறவு தொழிலாளர்களின் கஷ்டம் அறிந்து பொது இடங்களை அசிங்கமாகவோ, குப்பைகளை கண்டபடி தூக்கி போடாமலோ  இருக்க முயற்சிப்போம். ஏனெனில் அவர்களும் ஆறறிவு பெற்ற மனிதர்களே ! அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உண்டு. அவர்களும் சுகாதாரமாக நோயற்று வாழ வேண்டும். அவர்கள் இல்லையெனில் நாம் அனைவரும் குப்பைமேடுகளில் தான் கால் வைக்க நேரிடும்! மனிதர்களை மனிதர்களாக மதிப்போம்.

No comments: