Thursday, September 29, 2016

என் பெரியன்னைக்கு .......





அம்மாயி பெயரும், உருவமும்
ஞாபகம் உண்டு,
வேறெதுவும்
 எனக்கு நினைவில்லை!
நீயே எனக்கு அம்மாயி ஆனாய்,
பெரியன்னையும் ஆனாய்!
நீ கொஞ்சி மகிழ
உன் செல்வங்கள் ஐந்து இருக்க,
பத்தாது என்று என்னையும் கொஞ்சி மகிழ்ந்தாய்!~

என் தாய்க்கு தாயானாய்!
எனக்கு பெரிய அன்னை ஆனாய்!
என் பிரசவ காலத்தில்
என் தாதியும் நீ ஆனாய்!

உன் தாலாட்டுக்கு
என் தாயும் உறங்கினாள்,
நானும் உறங்கினேன்,
என் மகளும் உறங்கினாள்!

வாழ்க்கையோடு நீ போராடினாயா
இல்லை வாழ்க்கை உன்னோடு
போராடினதா தெரியாது!
 முடிவில் தோல்வி
வாழ்க்கைக்கு, ஜெயம் உனக்கு!


உனக்கு கோபம் வந்து நான் கண்டதில்லை!
கடுஞ்சொல் உன் நாவு பேசியதில்லை!
உதவி என்று நீ யாரிடமும் கேட்டதில்லை!
வந்தாரை உபசரிக்க
உனைப்போல் யாருமில்லை!

குடும்பத்தின் ஆலமரம் நீ சாய்ந்து விட்டாய்!
இந்த விழுதுகள் நீ இன்றி  தழைக்குமா?
உறவுப் பாலமும் நீளுமா?

சொல்லி அழ ஆளில்லை!
சாய்ந்து அழ தோளில்லை!
கூடி அழ உறவும் இல்லை!

தனிமையில் அழுகின்றேன்!
உன் முகம் காண துடிக்கின்றேன்!

கடல் தாண்டி இருக்கையில்
வானம் பார்த்து காத்திருக்கிறேன்,
நட்சத்திரமாக நீ வந்து
எனை  காண்பாய் என!

இம்மண்ணை விட்டு
நீ பிரிந்தாலும்
அந்த விண்ணிலிருந்து
எமை காத்திடுவாய்,
என்றெண்றும் எங்கள் காவல் தெய்வமாய்!!!







No comments: