Tuesday, September 27, 2016

பகல் நிலவு

முழு இரவு கண் விழித்து
யாருக்காக நீ காத்திருந்தாயோ?
 நான் அறியேன்!கண்மணியே!


சுட்டெரிக்கும் சூரியன்
உலா வரும்
முற் பகல் நேரம்,
இன்னும் நீ
யாருக்காக காத்திருக்கிறாயோ
அதையும் நான் அறியேன்
கண்மணியே!


தகிக்கும் உச்சி வெய்யில் வெளிச்சத்தில்
நீ காத்திருப்பதை யாரேனும் கண்டனரோ?
நான் அறியேன் கண்மணியே!


கடந்து சென்ற வானூர்தி
விட்டுச் சென்ற சுவடை,
நீ லக்‌ஷ்மனக் கோடாக
நினைத்தாயோ?
தாண்டுதற்கு அஞ்சி நீ
பயந்து போய் நின்றாயோ?
தானாக அக்கோடு அழியத்தான்
பார்க்கிறாயோ?
நான் அறியேன் கண்மணியே!


 நெடுங்காலம்
காத்திருக்கும் உன்னை
ராவணன் யாரேனும்
தூக்கித் தான்
சென்று விடுவாரோ?
எச்சிறையில் உன்னை
அடைப்பாரோ?
அஞ்சுகிறேன் நான்
அதை நினைத்து கண்மணியே!


காத்திருப்பு போதும்
பேதை பெண் பகல் நிலவே!
வந்த வழி சென்று விடு,
உன் அறையில்
பகல் முழுதும் கண்ணுரங்கு கண்மணியே!


விளக்கு வைக்கும் நேரத்தில்
அலங்காரம் நீ செய்து
மீண்டும் ஒரு காட்சி கொடு,
நட்ச்சத்திர தோழியரோடு நீ
வலம் வரும் வேலையிலே
உன்னவன் தான்
வந்து நிற்பான்
உன் கரம் பற்றுதற்கே!!


காலம் தான் கனிந்து வரும்,
கலங்காதே கண்மணியே!



No comments: