Sunday, May 8, 2016

அம்மா!!

அம்மா!!
என் வாழ்க்கையின் வழிகாட்டி நட்சத்திரம் நீ,
என் கனவுகளின் விடிவெள்ளி நீ!!
நான் உருபெரும் முன்பே,
எனக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தவள் நீ!!
என்னை சுமந்து போது
என் பசிக்காக நீ உண்டாய்!!
நான் பிறந்த பின்போ
என் பசி தீர்க்கும் வரை  பசி மறந்தாய்!!

எனக்காக நீ கழித்த
உறங்கா அந்த இரவுகளுக்கு
ஈடு தான் உண்டோ??
இன்று நான் மலர் படுக்கையில்
உறங்கினாலும், அன்று
உன் கருவறையில்
தூங்கிய அமைதியான
தூக்கம்தான் மீண்டும் வருமோ??

என் கைத்தொலைபேசியில்
ஆயிரமாயிரம் பாட்டுக்கள் உண்டு,
ஆனால் நான் கண் உறங்குவதோ
உன் இனிய தாலாட்டுக்குத்தான்!!

உன்னுள் வாழ்ந்த
கலைஞனையும், எழுத்தாளனையும்
நீ பிரசவிக்க வாய்ப்பே கொடுக்கப்படவில்லை!
உன்னுள் இருக்கும் மனிதம் இன்று வரை உணரப்படவில்லை!
இருந்த போதும் யாரிடமும் உன் அன்பு மாறவே இல்லை!


எத்துனை பேர் வந்தாலும்
சமைக்க நீ அலுத்ததில்லை!
அத்துனை சமையலிலும் உன் அன்பை
 கலக்க நீ மறந்ததில்லை!
உனக்கென்று எதையும் வைத்துக்கொள்ள
 என்றும் நீ அறிந்ததில்லை!
பிறர் அன்பு மட்டும் எதிர் பார்த்த உனக்கு
பல நேரம் அது கிடைக்கவில்லை!


வாழ்க்கையில் நீ பயந்த பலவற்றை
துணிந்து செய்யும் சிங்கக்குட்டிகளாய்
எங்களை வளர்த்தாய்!!
என்னையும் ஒரு புலிதாயாய்
நீ அறியாமலேயே வார்த்தெடுத்தாய்!!
இரண்டு இளவரசிகளை பெற்றப் பின்
ஓர் இளவரசனுக்காக என்றும் நீ ஏங்கியதில்லை!!
ஏச்சுக்கள் பல கேட்டும்
என்றும் நீ தளரவில்லை!!

நான் தாயான போதிலிருந்து
என் நினைவுகளிலும், செயல்களிலும்
நீ தொட முடியா உயரத்தை அடைந்துவிட்டாய்!!
உருவமும், உள்ளமும் குளைந்த போதும்
உன் உறுதி என்றும் தேக்குத்தான்!!

எனக்கு கிடைத்த மிகச்சிறந்த தாயைப்போல்
என் மக்களும் பெற்றாரென
என்றாவது ஓர் நாள் நினைப்பார்களா?

உன்னில் உள்ள நானும்,
என்னில் உள்ள நீயும்,
என்றும் நமக்கு அழியாவரம்!!
இவ்வுலகில் நாம் வாழும் வரை,
இப்பிரபஞ்சம் உள்ளவரை,
பின் என்றும், என்றும்
நீயே என் அன்பு தேவதை அம்மா!!







1 comment:

Anamika said...

Beautiful Geetha. What a dedication to your mother. Bow to you dear.