Sunday, August 28, 2016

தர்மதுரை --பட விமர்சனம்

சாதரணமாகவே எனக்கு விஜய் சேதுபதி படம் என்றால் மிகவும் பிடிக்கும். இதில் என்  மகளும் என்னுடன் சேர்ந்து கொண்டாள். தர்மதுரை படம் ரிலீஸ் ஆன நாள் முதல் பார்க்க வேண்டும் என்ற ஆசை. கணவருக்கும் விஜய் சேதுபதி, தன்னைப்போல் கருப்பழகனாக இருப்பதால் ஒரு பிரியம். படம் பற்றிய விமர்சனங்களைப் படித்து விட்டு , படம் பார்க்க போகலாம் என்றார். என் தோழி சுஜா படம் பார்த்து விட்டு விமர்சனம் சொன்னால் தான் நான் பொதுவாக திரையரங்கு சென்று படம் பார்ப்பது வழக்கம். ஆனால் இந்த படத்தை அவள் இன்னும் பார்க்கவில்லை. இனையத்தில் சிலர் நன்றாக இருக்கிறது என்றனர், சிலர் ஓகே என்று எழுதியிருந்தனர். மகள் வேறு ஊருக்கு போயாக வேண்டும். அதற்கு முன் படம் பார்க்க வேண்டும். எனவே ஒரு முடிவு செய்து படம் பார்க்க சென்றோம். மகளின் தோழியும் எங்களுடன் வந்தாள்.

படம் மதியம் பன்னிரண்டு மணி ஷோ! போவதற்கு முன்பே brunch  என்ற பேரில் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். திரையரங்கு சென்று டிக்கெட் வாங்க போன போது தான் தெரிந்தது படத்துக்கு கூட்டமே இல்லை என்று. வேலை நாள் வேறு , எனவே தான் கூட்டம் இல்லை என்று எங்களுக்கு நாங்களே சமாதானம் செய்து கொண்டோம். டிக்கெட் வாங்கும் பொழுதே கூடவே கொசுறாக நாச்சோஸ் சிப்ஸ்சும் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றோம். என்ன brunch சாப்பிட்டால் என்ன, தியேட்டரில் படம் பார்க்கையில் ஏதாவது கொறிக்காமல் இருக்க முடியுமா என்ன? எழுநூத்தி ஐம்பது பேர் தாராளமாக உட்காரக் கூடிய திரையரங்கு. உள்ளே நுழைந்ததும் எங்களுக்கு ஒரே அதிர்ச்சி! எங்கள் நால்வரைத் தவிர யாருமே இல்லை. நாங்கள் உட்கார்ந்தும் படம்  பார்க்கலாம், நடந்தும் பார்க்கலாம், படுத்தும் பார்க்கலாம், ஓடியும் பார்க்கலாம்! ஒரு பத்து நிமிடங்களுக்கு பிறகு இரண்டு பேர் வந்தார்கள். ”யாரும் தான் இல்லையே , நாம் அந்த கோல்ட் கிளாஸ் சீட்டில் உட்கார்ந்தால் ஏதாவது சொல்வார்களா?” என்று என் கணவரிடம் ஒன்றும் தெரியாதவள் போல் கேட்டுப் பார்த்தேன். உடனே அவர்,” ஆமாம் தியேட்டர் காரன் லூசு பாரு, நீ சாதா டிக்கெட் வாங்கிட்டு கோல்ட் கிளாசில் படம் பார்க்க அனுமதிக்க”, என்று நக்கலாக வார்த்தையால் கொட்டு கொட்டினார். கல்லை எரிந்து பார்ப்போமே , காய் விழுந்தால் காய், கல் விழுந்தால் தலையை காப்பாத்திக் கொள்வோம் என்று முதலிலேயே நான் தாயாராக இருந்தேன். வாயை கொடுத்து வாங்கிக் கொண்டது போதும் என்று பதில் ஏதும் பேசாமல் சமர்த்தாக இருந்து கொண்டேன்.

மகளும் , தோழியும் பேசி சிரித்துக்கொண்டே இருந்தார்கள். அப்பொழுது பார்த்து தோழி சுஜாவிடமிருந்து அழைப்பு வந்தது. “ போனை ச்விட்ச் ஆம் செஞ்சுட்டு உட்காரு “ என்று அன்பு கட்டளை கணவரிடமிருந்து வர, உடனே, நைசாக அவளுக்கு,” படம் பார்க்கிறேன்” என்று ஒரு மெசேஞ் அனுப்பி விட்டு போனை ஆஃப் செய்து வைத்துக் கொண்டேன். படம் ஆரம்பிக்கும் முன்பே நாசோஸ் முக்கால் வாசி காலி செய்து விட்டார்கள் மகளும், தோழியும்! . எங்கள் ஆறு பேறுக்காக ஒரு காட்சியா என்று சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தது. ஆம் இந்த வெத்து பந்தாவிற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை தான். ஏதோ வீட்டில் ஹோம் தியேட்டரில் படம் பார்ப்பது போன்ற உணர்வு!

படமும் ஆரம்பித்தது. கண்களை விரித்து விஜய் சேதுபதியின் வருகைக்காக  திரையை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆரம்பம் முதல் எனக்கு படம் பிடிக்க தொடங்கியது. அதுவும் படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் வரும் அந்த சாவு வீட்டு பாடலில் விஜய் சேதுபதியின் நடிப்பு டாப் கிளாஸ். எதார்த்தமான உணர்வுகளின் வெளிப்பாடுகள். அவர் ஆடும் நடனமும், மற்றவர்களின் நடிப்பும் மிகவும் இயல்பாக இருந்தது. என்னதான் வெளியூர் சென்று படித்து விட்டு தன்னை ஒரு நாகரிகமான ஆளாக காட்டிக் கொள்ள முயன்றாலும், சந்தர்ப்ப சூழ்நிலையில் அந்த அடிப்படை கிராமத்து ஆளுமை எட்டி பார்ப்பதை தவிர்க்க முடியாது என்பதை அழகாக சித்தரித்திரிக்கிறார். என் தந்தையும் சரி, என் கணவரும் சரி அடிப்படையில் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். அவர்கள் இருவரின் நடத்தையிலும் அவ்வப்பொழுது அந்த கிராமத்தான் எட்டிப் பார்க்கும் பொழுது நான்,” கிராமத்து காட்டான்”  என்று விளையாட்டாக சொல்வது உண்டு.

கதை அழகாகவே நகர்ந்தது. எல்லா கதாபாத்திரங்களும் அவர் அவர் பகுதியை நிறைவாகவே செய்து இருந்தார்கள். கல்லூரி நாட்களை காட்டும் பொழுது தான் கொஞ்சம் மெதுவாக நகர்வது போல் இருந்தது. கல்லூரியில் ஆசிரியராக வரும் ராஜேஷ் கதாபாத்திரம் பல இடங்களில் என் தந்தையை நினைவூட்டியது. எனக்கு மட்டும் தான் அப்படித்தோன்றியது என்று நான் நினைத்தேன், ஆனால் என் கணவரும்,” ராஜேஷை பார்க்கும் பொழுது மாமாவை பார்ப்பது போல் உள்ளது இல்ல”என்றார். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை தோழிகள் இருவரும் கல கல என்று ஏதோ சொல்லி சிரித்துக்கொண்டே தான் இருந்தார்கள். அந்த வயது அப்படி. எதைப் பார்த்தாலும், கேட்டாலும் சிரிக்கத்தூண்டும். நாமும் கடந்து வந்த பாதை தானே??

பாடல்கள் காதுக்கு இனிமை சேர்ப்பவையாக இருந்தது. கதையைப் பொருத்தவரை எந்த வித செயற்கைத்தனமும் இல்லை. நமக்கு தெரிந்த ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பார்ப்பது போன்று தான் இருந்தது. நம் சமுதாயத்தில் மாப்பிள்ளைகள் இன்று வரை எப்படி விலை பேசப்படுகிறார்கள் என்பதை தோல் உரித்து இயக்குநர் காட்டி இருக்கிறார். என்று அழியுமோ இந்த வரதட்சணை கொடுமைகள்! ஆயிரம் பெரியார் வந்தாலும் பத்தாது!! அதுவும் காசு கொடுத்து டாக்டர் பட்டம் வாங்கி விட்டால் கேட்கவே வேண்டாம். அவரின் விலைப் பட்டியல் பல கோடி. டாக்டர் என்பவர் உயிர் காக்கும் மனித கடவுள் என்ற நிலை மாறி காசு அச்சடிக்கும் தொழிலாக போனது நம் துரதிஷ்டமே!

எனக்கும் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது. ஆனால் நான் வாங்கிய மதிப்பெண்கள் போதவில்லை. அப்பொழுது ஒரு சீட்டின் விலை ஒன்றரை லட்சம். நான் மிகவும் ஆசைப்பட்டதால் என் தந்தை, என் தாத்தாவிடம் “என்ன அப்பா கீதாவை காசு கொடுத்து டாக்டருக்கு படிக்க வைக்கலாமா?” என்று கேட்டார். அதற்கு என் தாத்தாவோ,”இவ்வளவு காசு கொடுத்து அவளை டாக்டருக்கு படிக்க வைக்கறதுக்கு பதில் நீ அவளை அந்த காசு செலவழிச்சு கல்யாணம் செஞ்சு கொடுத்திடலாம்”, என்ற போதனையை வழங்கினார். ஆனாலும் என் தந்தை என்னிடம், ”காசு கொடுத்து சேர்த்து விடட்டுமா ?“என்று கேட்டார். அப்பொழுது எல்லாம் ஒரு லட்சம் என்றால் மிகவும் நிறைய பணம் என்று நிணைத்துக்கொண்டு,என் தோழி ஒருத்தியிடம்,”ஒரு லட்சம்னா இந்த ரூம் சீலிங் வரை இருக்குமா?” என்று கேட்டேன். பின் என் தந்தையிடம் காசு கொடுத்து நான் படிக்கவில்லை என்று கூறிவிட்டேன். நான் அப்படி ஒரு முடிவு எடுத்ததற்காக பல நாட்கள் வருந்தியதுண்டு. இன்றுவரை கூட என் தந்தை அதற்காக வருந்தியிருக்கிறார். ஒரு வேளை  ஆண் பிள்ளையாக  இருந்திருந்தால் யார் பேச்சையும் கேட்காமல் பணம் கொடுத்து சேர்த்திருப்பாரோ என்னவோ? ஆண் மகன் டாக்டர் என்றால் தான் அதற்கு தனி விலை, பெண் பிள்ளை தானாகவே படித்து டாக்டர் பட்டம் வாங்கினால் கூட நம் கல்யாண சந்தையில் யாரும் காசு கொடுக்க முன்வருவதில்லை. ஆண் டாக்டருக்கும் , பெண் டாக்டருக்கும் அப்படி என்ன வித்தியாசமோ தெரியவில்லை.


இப்படத்தில் டாக்டர்கள் எப்படி சேவை மனப்பான்மையுடனும் ,மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும் என்று இயக்குநர் கோடிட்டு காட்டி இருக்கிறார். அப்படிப்பட்ட மருத்துவர்களை மக்கள் எப்படி தெய்வத்திற்கு ஈடாக மதிக்கிறார்கள் என்பதும் புரியவருகிறது. என்ன தான் நாம் நாகரிக வாழ்க்கை வாழ்ந்தாலும் திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்தல் நம் கலாச்சாரத்திற்கு முரணானது என்பதை முதிர்ந்த ராஜேஷ் கதாபாத்திரத்தின் மூலம் அழகாக புரியவைக்கிறார். விவாகரத்திற்குப் பின் ஒரு பெண்ணிற்கு மறுமணம், திருநங்கைகளின் மறுவாழ்வு, என்று சில சமூக மாற்றங்களும் படத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.


படத்தில் முக்கியமான கதாபாத்திரமான விஜய் சேதுபதி , தன் சகோதரியின் மகளிடம் பாசத்தை பொழியும் அன்பு மாமாவாகவும்  , தன் தாயிடம் ஒரு பாசமிகு மகனாகவும்,  தன்னுடன் படிக்கும் பெண்  நண்பர்களிடம் கண்ணியமான நண்பனாகவும்,  காதலியிடம்  அன்பும்,  அரவணைப்பும் கூடிய காதலனாகவும், சமூதாயதின் மீது அக்கறையுள்ள மருத்துவராகவும், ஆசிரியரிடம் மரியாதை உள்ள மாணவனாகவும் , நடிப்பில் பல  நிறங்களில் மின்னுகிறார். I have to admit that he is a great romantic hero as well , though not the usual stereo typed romantic hero!!


எங்கள் நால்வருக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. படம் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து தோழிகள் இருவரும் ஒரே சேதுபதியின் புராணம் தான் பாடிக்கொண்டு வந்தார்கள். விக்கிபீடியாவில் விஜய் சேதுபதியின் முழு ஜாதகத்தையும் அலசி ஆராய்ந்தார்கள். அவரின் வயது , படிப்பு, திருமணம் ஆனவரா, எத்துனை குழந்தைகள் என்று எல்லாம் ஆராயப்பட்டது. அவர்களின் சம்பாஷனைகளை சிறிது நேரம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நான் ,”சரி சரி உங்கள் இருவருக்கும் விஜய் சேதுபதி மாதிரி ஒரு மாப்பிள்ளையை நான் தேடி கண்டு பிடிக்கிறேன் ,” என்றேன். அதற்கு அவர்கள் இருவரும் ரகசியமாக ஏதோ கூறிக்கொண்டு சிரித்துக் கொண்டு வந்தார்கள். எதற்கு சிரிக்கிறீர்கள் என்று நான் கேட்டதற்கு,”NOTHING" என்று ஒரே குரலில் கூறினார்கள். அந்த நத்திங் என்னவாக இருக்கும் என்று என் மண்டைக்குள் குடைந்து கொண்டே வீடு வரை பயணம் தொடர்ந்தது...........


1 comment:

gnanavel said...

அருமை. படமும் சூப்பர்