Friday, October 25, 2019

மருதாணி எனும் மைலாஞ்சி......

தீபாவளிக்கு இன்னும் ஓர் நாள் தான் இருக்கிறது. ஊரில் இருந்திருந்தால் சொந்த பந்தங்களோடு கொண்டாடி இருக்கலாம். சரி பண்டிகை feel வரவேண்டுமே என்று தீபாவளி சந்தையை பார்க்க போய் இருந்தேன். ஒரே கூட்டம். தீபாவளிக்கு ஜவுளி வாங்குபவர்களும், தோரணங்கள், தீபங்கள், விளக்குகள், ப்ளாஸ்டிக் கோலங்கள் , என்று வித விதமாக தீபாவளிக்கு வேண்டிய பொருட்கள் வாங்க மக்கள் குவிந்து இருந்தார்கள். எங்கே திரும்பினாலும் மருதாணி cone விற்றுக்கொண்டு இருந்தார்கள். மருதாணி போட்டு விடுபவர்களும் இருந்தார்கள். அவர்களிடம் பெண்கள் தங்கள் கைகளில் மருதாணி போட்டுக்கொண்டிருந்தார்கள். பத்தே பத்து நிமிடங்களில் அழகாக இரண்டு கைகளிலும் மருதாணி கொண்டு ஓவியம் தீட்டி விடுகிறார்கள்.
தீபாவளி என்றாலே மருதாணி இட்டுக்கொள்வது ஒரு அத்தியாவசியத் தேவை போன்றது எனக்கு. எனக்கு மட்டுமல்ல பல பெண்களுக்கும் தான். அந்த மருதாணி குப்பிகளைப் பார்த்த பொழுது மனம் வாழ்க்கையின் பல பக்கங்களை திருப்பி பார்க்க ஆரம்பித்தது. தீபாவளிக்கு முதல் நாள் அம்மா மும்முரமாக பலகாரம் செய்து கொண்டு இருப்பார். நானும் என் தங்கையும் மருதாணி போட்டுக்கொள்ள தயாராகி விடுவோம். எங்கள் வீட்டு தோட்டத்திலேயே மருதாணி செடிகள் இருந்தது. அதில் இருந்து இலைகளைப் பறித்து கொண்டு வந்து விடுவோம். அடுத்தது அதை யார் அரைப்பது என்பது தான் பிரச்சனையே. நாங்கள் அரைத்தால் கை முழுதும் மருதாணி சாயம் பூசிக்கொள்ளும். அது நன்றாக இருக்காது. அம்மியில் வைத்துத்தான் அரைக்க வேண்டும். வீட்டில் வேலை செய்யும் விஜயாவை தாஜா செய்து அரைத்து தரச்சொல்வோம். அவள் பாவம், வேறு வழியின்றி ஒத்துக்கொள்வாள். கொஞ்சம் புளி சேர்த்து மையாக அந்த இலைகளை அரைத்து வாங்கி வைத்துக்கொள்வோம். அதில் கொஞ்சம் எலும்பிச்சை சாறும் கலந்து வைத்துக்கொள்வோம். பகல் நேரத்தில் போட மாட்டோம். ஓடி ஆடி விளையாட முடியாது. Bathroom போவது கஷ்டமாக இருக்கும். எனவே இரவு படுக்க போவதற்கு முன் போட்டுக்கொள்வோம்.
அப்பொழுதெல்லாம் , இப்பொழுது இட்டுக்கொள்வது போல அழகழகான designகள் போட்டுக்கொள்ளத் தெரியாது. உள்ளங்கையில் ஒரு பெரிய வட்டம். அதைச் சுற்றி சிறு சிறு வட்டங்கள் அவ்வளவு தான். பின் விரல் நுனிகளில் குப்பிகைகள் போல வைத்துக்கொள்வோம். மிகவும் சிறுமியாக இருந்தபொழுது கை நிறைய சிவக்க வேண்டும் என்ற பேராசையில் கை முழுதும் பூசிக்கொண்டதும் உண்டு. ஓர் வயது வந்த பின் அப்படி பூசிக்கொள்வது அழகல்ல என்று புரிந்து, வட்டங்கள் இட்டுக்கொள்ள ஆரம்பித்தோம். புள்ளிகள் வைத்துக்கொள்வதே அழகென்று நினைத்தோம். சிலர் புரங்கையில் வைத்திருப்பதைப் பார்த்து ஆசைப்பட்டு புரங்கையில் ஒரு சிறு வட்டம் வைத்ததும் உண்டு. நான் மாநிறம் என்பதால் அது எடுப்பாக தெரியாது. அதில் சிறு வருத்தம் இருக்கத்தான் செய்தது.
மருதாணி வைத்துக்கொண்ட பின் அத்தோடு அந்த கூத்து நிற்காது. அப்பொழுது தான் உடம்பில் அங்கங்கே அரிக்கும். இங்கே சொரி, அங்கே சொரி என்று விஜயாவை பாடாய் படுத்துவோம். நேரம் பார்த்து மூக்கு நுனியில் அரிக்கும் பாருங்கள் ! அப்பப்பா!ஆனாலும் ஆசை யாரை விட்டது. இரண்டு கைகளையும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டி மூக்கை தோள் பட்டையில் உரசிக்கொள்வோம். சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு விரல் கொண்டு எங்காவது சொரிந்து விட்டால் மீண்டும் அந்த விரலில் மருதாணி போட வேண்டும். தங்கைக்கு சளி பிடிக்கும் என்பதால் அம்மா அவளை கொஞ்ச நேரம் வைத்து இருந்து விட்டு மருதாணியை கழுவி எடுக்க சொல்வாள். மருதாணி குளிர்ச்சியாம். ஆனால் அவள் கேட்க மாட்டாள். மருதாணி போட்டுக்கொள்ள வேண்டும் என்றால் இருப்பதிலேயே பழைய துணியை உடுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் , மருதாணி கரை பட்டால் துணியிலிருந்து நீக்குவது கடினம். தண்ணீர் குடிக்க வேண்டுமானலும் யாரவது ஊட்டி விடவேண்டும்.

படுக்கை கூட பாயில் தான். மெத்தையில் படுக்க முடியாது. தீபாவளி வேறு மழைகாலத்தில் வரும். இரவு நேரங்களில் குளிரும். ஆனாலும் போர்த்திக்கொள்ள பழைய போர்வை தான் தருவார் அம்மா. தூங்கும் பொழுது ஏசு நாதர் சிலுவையில் அரைந்ததைப் போல் இரண்டு கைகளையும் நீட்டி வைத்துக்கொண்டு படுப்போம். அதில் வேறு சண்டை வரும்--நீ என் மருதாணியை கலைத்து விட்டாய் என்று. படுத்தப் பின் போர்வையை போர்த்த ஓர் ஆள் வேண்டும். தூங்கும் பொழுது மருதாணி காய்ந்து, அங்கிங்கெங்கும் திரும்பும் பொழுது விழாமல் இருக்க சக்கரை கலந்த தண்ணீரை தெளித்து விடுவார் அம்மா. சக்கரைத் தண்ணீர் மருதாணியை காய்ந்தாலும் கீழே விழாதபடிக்கு பிடித்து வைத்திருக்கும். அப்பொழுது தான் கைகள் நன்றாக சிவக்கும். பாயில் படுப்பதால் சக்கரைத் தண்ணீருக்கு எங்கே எறும்புகள் மொய்த்து விடுமோ என்ற பயமும் இருக்கும். ஆனாலும் சக்கரைத் தண்ணீர் தெளிக்காமல் படுத்ததில்லை.காலையில் எழுந்தவுடன் முதலில் கைகளை விரித்து சிவந்து இருக்கிறதா என்று பார்ப்போம். இரண்டு கைகளையும் ஒன்று மேல் ஒன்று வைத்து உரசி காய்ந்து இருக்கும் சொச்ச மிச்ச மருதாணியை பாயிலேயே உதிரச் செய்து விட்டு கைகளை கழுவச் செல்வோம். கைககளை கழுவிய பின் யார் கை நன்றாக சிவந்து இருக்கிறது என்று வேறு ஒப்பீடு நடக்கும். பின் கொஞ்சம் தேங்காய் எண்ணெயை எடுத்து கைகளில் பூசிக்கொள்வோம். அப்பொழுது தான் மருதாணி சாயம் பளீர் என்று இருக்கும். எளிதில் மங்காது. எல்லாம் கேள்வி ஞானம் தான்.
ஆண்பிள்ளைகளும் மருதாணி வைத்துக்கொள்வார்கள். அவர்கள் உள்ளங்கைகளில் ஒரே ஒரு வட்டம் அவ்வளவு தான். இப்பொழுதெல்லாம் வட இந்தியர்களின் influenceஆல் அழகாக மருதாணி இட்டு விடுகிறார்கள். முழங்கை அளவிற்கு சித்திரங்கள் வரைந்து தள்ளுகிறார்கள். பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் , சிறுவர்களும் கூட இந்த கலையில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். coneகள் அறியப்படுவதற்கு முன் சில காலம் ஆவின் பால் வரும் பைகளை கழுவி அதனை ஒரு கோன் போல செய்து அடியில் ஒரு சிறு துளையிட்டு மருதாணியை கொண்டு நிரப்பி கோன்களாக பயன் படுத்தியதுண்டு.என் வலது கை கொண்டு இடது கையில் ஓரளவிற்கு ஏதோ ஒரு பூவை போட்டு விடுவேன். ஆனால் இடது கை கொண்டு வலது கையில் போட வராது. ஏதாவது ஒரு டிசைனை கிறுக்கிக் கொள்வேன். சில நேரங்களில் தோழிகளிடம் போட்டுக்கொள்வேன்.
இலைப் பறித்து அரைத்து இட்டுக்கொள்ளும் மருதாணி ஒரு வித ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். சில நாட்களுக்கு பிறகு வெளுக்கும் பொழுது ஒரே சீராக வெளுக்கும். ஆனால் கோன் கொண்டு போட்டுக்கொள்ளும் மருதாணி அடர்ந்த வண்ணத்தில் சிவக்கும். அதே நேரம் ஓரிரு நாட்களிலேயே வெளுக்க துவங்கும். அப்படி வெளுக்கும் பொழுது அங்கங்கே சாயம் போனது போல் காட்சி அளிக்கும். பார்க்க அசிங்கமாக இருக்கும். இலை கொண்டு போடப்படும் மருதாணிக்கு மருத்துவ பயன்கள் உண்டு. இந்த கோன்களில் ரசாயனம் இருப்பதால் எந்த வித மருத்துவ பயனும் கிடையாது. ஆனால் இப்பொழுதெல்லாம் மருதாணி செடிகளை பார்ப்பதே அரிதாகி விட்டது. எனவே வேரு வழியில்லாமல் கோன்களைத்தான் உபயோகப்படுத்தும்படி ஆகி விடுகிறது. எப்படியோ தீபாவளிக்கு பலகாரம் செய்து கைகள் சிவக்கிறதோ இல்லையோ, மருதாணி இட்டுக்கொள்வதால் சிவந்து போகும். இதோ நானும் இன்று இரவு மருதாணி இட்டுக்கொண்டு தீபாவளியை வரவேற்க ஆயத்தமாக போகிறேன்.

No comments: