Saturday, April 11, 2015

மாற்றம்

சூரியன் உதிக்கும் முன்
எழுந்து, நீராகாரம் குடித்து,
ஏரு தூக்கி
வயல் நோக்கி
கால் நடை போட்டு
உழுது விட்டு
கம்பங் கூழும்
பச்சை வெங்காயமும்  உண்டு
உடலுக்கு உரம் சேர்த்து
களைத்துப் போய்
மாலை வீடு வந்து
திண்ணையில் பழங்கதை பேசி
இருட்டிய உடன் உணவு உண்டு
உடன் தூங்கினான் என் பாட்டன்.

சூரியன் விழித்தவுடன்
தானும் விழித்து
உடலுக்கு வலு சேர்க்க
நடை பயிற்சி செய்து
செய்தித்தாள் வாசித்து
டிகிரி காப்பி அருந்தி
இரண்டு இட்டிலியும் 
கெட்டிச் சட்டினியும் உண்டு
பை தூக்கி
வேலைப் பார்க்க
அலுவலகம் சென்று
மாலை வீடு திரும்பி
பிள்ளைகளுடன் 
பேசி மகிழ்ந்து
எட்டு மணிக்கு
பசி தீர்த்து,
பத்து மணிக்கு
உறங்கச் சென்றான்
என் தந்தை.

சூரியன் நன்றாக
உதித்தப் பின்
கண் கூசுகிறதென்று
திரைச்சீலையை நன்றாக 
இழுத்து விட்டு
போர்வையால் முகத்தை மூடி
தூங்கியது பத்தாது என்று
இன்னும் அரைமணி நேரம் 
உறங்கி
பின், அவசர, அவசரமாக
பாதி வெந்த சீரியலை
முழுங்கி விட்டு
அலுவலகம் சென்று
இரவு உறங்கும் நேரம் 
வந்தப் பின் 
வீடு திரும்பி
தொலைக்காட்சி முன் 
அமர்ந்து
தட்டில் இருப்பது
என்ன என்று
அறியாமல் எடுத்து விழுங்கி
தூங்கும் பிள்ளைகளை
தொட்டு முத்தமிட்டு
பேய்கள் வெளிவரும்
நேரம் பார்த்து
உறங்கச் செல்கிறோம்
நாம். 
உடல் பயிற்சியிலும்
அட்டவனை
மனைவி , மக்களுடன்
பேசி மகிழவும்
அட்டவனை
உண்ணும் உணவிலும்
அட்டவனை .


இதற்கெல்லாம் மகுடம்,
என் பிள்ளையோ,
சூரியன் தலைக்கு மேல்
வந்தவுடன் எழுகிறான்
தொலைபேசி ஒன்றிலேயே
உலக வேலையை
முடிக்கிறான்
நடை பயில மறக்கிறான்
உரையாட மறுக்கிறான்
திரையை பார்த்தே
வாழ்க்கையை வாழ்கிறான்
தவறி மனிதர்களை 
நேரில் பார்த்தால்
வேற்று கிரகவாசியென
தவிர்க்கிறான்........

Tuesday, March 31, 2015

ஆச்சரியம்!!!!

கடமை,
கண்ணியம்,
கட்டுப்பாடு,
அன்பு,
பண்பு,
ஆளுமை,
ஆண்மை,
அரவனைப்பு,
கண்டிப்பு,
நேசம்,
பாசம்,
பசுமை,
தூய்மை,
விடாமுயற்சி,
அறிவு,
ஆற்றல்,
தன்னம்பிக்கை,
நட்பு,
அக்கறை,
தொலைநோக்கு,
மொழிப்பற்று,
அயரா உழைப்பு,
புரட்சி,
நம்பிக்கை,
சத்தியம்,
ஒற்றுமை,
கலாச்சாரம்,
எழுச்சி,
அரசியல்,
கட்டமைப்பு,
தலமைத்துவம்,
இளமை,
சுறுசுறுப்பு,
ராஜ தந்திரம்,

இவ்வளவு அர்த்தங்களா
இருக்கின்றன
லீ கான் யு என்ற உங்கள் பெயருக்குப் பின்னால்???


அன்புள்ள லீ கான் யு அவர்களுக்கு.....

அன்புள்ள லீ கான் யு அவர்களுக்கு,

கடந்த ஒரு வாரமாகவே நான் நானாக இல்லை. மனதில் ஏதோ இறக்கி வைக்க முடியாத பாரம். யாரிடமும் சொல்லி அழ முடியவில்லை. ஏனென்றால் எல்லோருமே இதே வலியையும் , வேதனையையும் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் மரணப்படுக்கையில் இருந்த பொழுது கூட , எப்படியும் பிழைத்து விடுவீர்கள் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. செயற்கை சுவாசத்தில் நீங்கள் சுவாதித்துக்கொண்டு இருந்தபொழுதும் ஏதோ உயிரோடாவது இருக்கிறீர்களே என்ற நிம்மதி. அதுவும் நின்றபொழுது மனம் வலித்தாலும் உங்கள் உடலாவது எங்களுடன் இருக்கிறதே என்ற பெருமூச்சு. ஆனால் இன்று அந்த உடலும் கண்களில் இருந்து மறைந்துவிட்டது.


சொல்லி அழ வார்த்தை இல்லை, கதறி அழ கண்ணீரும் இல்லை, தழுவி அழ உங்கள் உடலும் இல்லை. ஏழு நாட்களாக மரப்பெட்டிக்குள் சூழ்நிலைக் கைதியாக இருந்த உங்களுக்கு இன்று விடுதலை.உங்கள் மேல் இரக்கப் பட்டு , அந்த காலன், உயிருடன் இருக்கும் வரை நீங்கள் ஓய்வெடுக்க போவதில்லை என்று அந்த உயிரை உங்களிடமிருந்து மீட்டுக்கொண்டானா என்று எனக்கு புரியவில்லை.நீங்கள் சாவா வரம் பெற்ற மார்க்கண்டேயனைப் போல் வாழ்வீர்கள் என்றல்லவா நாங்கள் நம்பி இருந்தோம். வானமே எல்லை என்றார்களே, நீங்கள் ஏன் அதையும் தாண்டி மறைந்துவிட்டீர்கள்?


கேளிக்கை நிகழ்ச்சிகளை தவிர வேறெதுவும் நெடுநேரம் தொலைக்காட்சி முன் அமர்ந்து பார்த்திராத என்னை என்ன வசியம் செய்து நாண்கு மணி நேரமும் ஒரே இடத்தில் அமர்ந்து உங்கள் இறுதி சடங்கை பார்க்கச் செய்தீர்கள்? கல்யாணச் சாவாகிய ஒரு தொன்னூறு வயது முதியவரின் இழப்பு எனக்குள் இப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கடந்த ஏழு  வருட சிங்கப்பூர் வாழ்க்கையில் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளாததை இந்த ஏழு நாட்களுக்குள் மிகுதியாக அறிந்து கொண்டேன்.உங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய ஒரு பல்கலைக்கழகம் போதாது. உங்களைப்  பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள தொலைகாட்சியைப் பார்க்கிறேன், பத்திரிக்கையை படிக்கிறேன், வானொலியை கேட்கிறேன், நண்பர்களுடன் கலந்து பேசுகிறேன். எங்கெங்கெல்லாம் உங்கள் பெயர் உச்சரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் என் ஐம்புலனும் திரும்புவதை உணர்கிறேன்.  ஒரு தாயாக இருந்து உணர்கிறேன் உங்களைப் பெற்றத் தாய் எவ்வளவு பாக்கியசாலி என்று.


உங்கள் தாயின் மடி மீது தலைவைத்து உறங்க சென்றுவிட்டீர்களா? அல்லது ஆசை மனைவியின் தோல்சாய்ந்து ஓய்வெடுக்கச் சென்றுவிட்டீர்களா? பாதி தூரம் தானே எங்களுடன் நடந்து வந்தீர்கள், மீதிப்பாதியை நாங்கள் யாருடன் கைகோர்த்து கடந்து செல்வது? எங்கள் கூக்குரல் உங்கள் செவிகளுக்கு எட்டவில்லை என்று அந்த வருண பகவானையும் நாங்கள் துணைக்கு அழைத்து வந்தோமே. ஆனாலும் ஏன் செவி சாய்க்காமல் சென்று விட்டீர்? வேறு பிள்ளைகளை தத்து எடுக்க வேறு இடம் சென்றுவிட்டீர்களா?? சாமி இல்லா கோவிலாக உணர்கிறேன். இந்த வெற்றிடம் நிரம்ப வேண்டுமென்றால் மீண்டும் வந்து விடுங்கள், எங்களுடன் தங்கிவிடுங்கள்.

இப்படிக்கு,
உங்கள் மறு வரவிற்காக காத்துகிடக்கும்,
பல்லாயிர உள்ளங்களில் ஒர் உள்ளம்.