Wednesday, May 25, 2016

மிதியடி

மிதியடி

என்னை அழுக்காக்கிவிட்டு
உள்ளே செல்லும் நீ
சுத்தமானவன்,
உன் அழுக்கை
சுமக்கும் நானோ
வீட்டின் வெளியே
தீண்டத்தகாதவனாக!!!!

எங்கு சென்று வந்தாலும்
உன்னை வீட்டிற்குள் முதலில்
வரவேற்பென்பது நானாக இருப்பினும்,
 ஒரு நாளும் யாரும்
 என்னை வீட்டிற்குள்
அழைப்பதில்லை!!

சுமை தாங்க நான் 
முடியாதவனாக ஆகும் நேரம்
என் சுமை இரக்க யாரும் நினைப்பதில்லை!!
வேறொரு சுமைதாங்கி 
என் இடம் வந்து சேர்கிறான்,
நானோ சவக்குழியில்!!!

Monday, May 23, 2016

வடிவழகி!!

வடிவழகி!!

முதலில் நீல வண்ண ஆடை,
அதை ரசித்து நான் முடிக்கவில்லை அதற்குள்,
நீலமும் மஞ்சளும் கலந்த பட்டாடை!
கண்கள் அக்காட்சியை பார்த்து கிரகிக்கு முன்,
தக தக என ஜொலிக்கும் தங்க நிற ஆடை,
மனம் இதில் மயங்கி கிடக்கும் வேளை
தீடீரென்று வந்தாள்
செம்மஞ்சளும் சாம்பலும் கலந்த புதிய வடிவில்,
இவ்வழகை கண்டு களிக்கும் நொடிக்குள்
மாறிவிட்டாள் மின்மினி பூச்சுக்கள்
பதித்த கருநிற ஆடைக்கு!
எத்துனை வடிவில் உலா வருகிறாள்
இந்த வடிவழகி?
வான மங்கைக்கு
மட்டும் அலுக்கவே அலுக்காதா
இத்தனை ஆடைகளை
ஒரே நாளில் மாற்ற?

Sunday, May 8, 2016

அம்மா!!

அம்மா!!
என் வாழ்க்கையின் வழிகாட்டி நட்சத்திரம் நீ,
என் கனவுகளின் விடிவெள்ளி நீ!!
நான் உருபெரும் முன்பே,
எனக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தவள் நீ!!
என்னை சுமந்து போது
என் பசிக்காக நீ உண்டாய்!!
நான் பிறந்த பின்போ
என் பசி தீர்க்கும் வரை  பசி மறந்தாய்!!

எனக்காக நீ கழித்த
உறங்கா அந்த இரவுகளுக்கு
ஈடு தான் உண்டோ??
இன்று நான் மலர் படுக்கையில்
உறங்கினாலும், அன்று
உன் கருவறையில்
தூங்கிய அமைதியான
தூக்கம்தான் மீண்டும் வருமோ??

என் கைத்தொலைபேசியில்
ஆயிரமாயிரம் பாட்டுக்கள் உண்டு,
ஆனால் நான் கண் உறங்குவதோ
உன் இனிய தாலாட்டுக்குத்தான்!!

உன்னுள் வாழ்ந்த
கலைஞனையும், எழுத்தாளனையும்
நீ பிரசவிக்க வாய்ப்பே கொடுக்கப்படவில்லை!
உன்னுள் இருக்கும் மனிதம் இன்று வரை உணரப்படவில்லை!
இருந்த போதும் யாரிடமும் உன் அன்பு மாறவே இல்லை!


எத்துனை பேர் வந்தாலும்
சமைக்க நீ அலுத்ததில்லை!
அத்துனை சமையலிலும் உன் அன்பை
 கலக்க நீ மறந்ததில்லை!
உனக்கென்று எதையும் வைத்துக்கொள்ள
 என்றும் நீ அறிந்ததில்லை!
பிறர் அன்பு மட்டும் எதிர் பார்த்த உனக்கு
பல நேரம் அது கிடைக்கவில்லை!


வாழ்க்கையில் நீ பயந்த பலவற்றை
துணிந்து செய்யும் சிங்கக்குட்டிகளாய்
எங்களை வளர்த்தாய்!!
என்னையும் ஒரு புலிதாயாய்
நீ அறியாமலேயே வார்த்தெடுத்தாய்!!
இரண்டு இளவரசிகளை பெற்றப் பின்
ஓர் இளவரசனுக்காக என்றும் நீ ஏங்கியதில்லை!!
ஏச்சுக்கள் பல கேட்டும்
என்றும் நீ தளரவில்லை!!

நான் தாயான போதிலிருந்து
என் நினைவுகளிலும், செயல்களிலும்
நீ தொட முடியா உயரத்தை அடைந்துவிட்டாய்!!
உருவமும், உள்ளமும் குளைந்த போதும்
உன் உறுதி என்றும் தேக்குத்தான்!!

எனக்கு கிடைத்த மிகச்சிறந்த தாயைப்போல்
என் மக்களும் பெற்றாரென
என்றாவது ஓர் நாள் நினைப்பார்களா?

உன்னில் உள்ள நானும்,
என்னில் உள்ள நீயும்,
என்றும் நமக்கு அழியாவரம்!!
இவ்வுலகில் நாம் வாழும் வரை,
இப்பிரபஞ்சம் உள்ளவரை,
பின் என்றும், என்றும்
நீயே என் அன்பு தேவதை அம்மா!!