Saturday, February 1, 2020

எண்ணங்களை தூய்மை செய்

மனமும் எண்ணமும் இப்படி வெண்மையாகவும், பளீரென்றும் எப்பொழுது தான் மாறுமோ??துணியை வெள்ளாவியில் வைத்து வெளுக்க முடிகிறது! மனதை , எண்ணங்களை எதை கொண்டு வெளுப்பது? கறை படிந்த நினைவுகளை வெளுக்கத்தான் முடியுமா? கார் மேகத்தை வெளுக்க முடியுமா?எண்ணம் பல வண்ணமாய் இருப்பதும் ஓர் அழகு தான். சிகரம் மேல் வெண் பூவாய் பூக்கும் பனியை போல் அப்பழுக்கு இன்றி தூய்மையாய் இருப்பது பேரழகு! புகை சூழ் மனமாய் இருத்தல் மூச்சுத்தினறலே!முயற்சிப்போம் எண்ணங்களை தூய்மை செய்ய!!
“யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
உன்ன வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தேங்களா
இல்ல வெயிலுக்கு காட்டாம
வளத்தாங்கெளா?
தலகாலு புரியாம
தரமேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே !!
—ஆடுகளம்

நம்பிக்கை

நம்பிக்கை
கோவில் பூசாரி
விரல் கொண்டு
சின்ன நெற்றியில்
அழுத்தி பூசும்
விபூதியின் துகள்கள்,
கண் உள்ளே விழுமோ
என்ற பயத்தில்
இறுக கண் மூடி
மூக்கினை சுழித்து
உதடுகள் திறக்கா வண்ணம்
பற்களை கடித்து,
அசையாமல்
பூசிக்கொள்ளும்
குட்டிச் சிறுவனின்
கடவுள் நம்பிக்கை
அழகானது மட்டுமல்ல
ஆழமானதும்
எந்த எதிர் பார்ப்பும்
இல்லாததும் ஆகும்.....

துளசி செடி

பாட்டி தோட்டத்தில்
துளசி செடி வளர்த்தாள்!
தோட்டத்தை சுற்றி சுற்றி
வந்தாள்
நற்காற்றினை
சுவாசிக்க !
அம்மா தொட்டியில்
வைத்து துளசியை வளர்த்தாள்!
மாடம் ஒன்று கட்டி
அதில் துளசியை
கொலுவேற்றி
தான் வணங்கும்
அம்மனென
சுற்றி வந்தாள்!
என் வீட்டிலோ
துளசி மாடத்தின்
மாதிரி மட்டுமே!
பாட்டி சாணம் தெளித்த
மண் வாசல் முழுதும்
நம் மனம் சிக்கிக்
கொள்ளும் அளவு
சிக்கு கோலம்
போட்டாள்!
அம்மா தன் சின்ன வாசலுக்கு
சிமெண்ட் பூசி
அதில் வண்ண கோலம்
போட்டாள்!
நானோ சின்னஞ்சிறு
டைலில் அடக்கமாய்
ஒரு கோலம் போட்டேன்
அதுவும்
தோன்றும் போது மட்டுமே!!!
மக்கும் மண் அகல் விளக்கும்
இங்கு மக்கா
அலுமினிய மெழுகுதிரியாய்
உறுமாறியதே!
கால ஓட்டத்தில்
எப்படி எல்லாம்
சிக்கி தவிக்கிறோம்!

கூடல்

கூடல்
தன் இருப்பில் பொத்தி
வைத்திருந்த
அத்துனை காதலையும்
மழை காதலன்
பொழிய துவங்கி விட்டான்!
முதலில் ஆசையுடன்
பூமி காதலியை
மெது மெதுவாய்
முத்தமிட்டான்!
அவன் அழுத்தி பதித்த
முத்த சுவடுகள்
மங்கை அந்த மண்ணில்
கண்ணக்குழியாய்
பதிந்து கிடக்க,
அவள் முகம் சிவந்து
காதல் மணம் வீச
அவனுக்கோ மோகம்
தலைக்கேற
கட்டுக்கடங்கா தன்
காதலை மொத்தமாய்
சட சட என பொழிய
அத்துணை காதலையும்
அடைத்து வைக்க
முடியாதவளாய்
வெள்ளமாய்
ஓடவிட்டாள்!
காற்றாட்டு வெள்ளமென
ஓடிய காதல்
பாய்ந்த இடமெல்லாம்
பரவசமாய் ஆக்கி சென்றது....
மழைக் காதலனும்
மண் காதலியும்
கூடும் நேரம்
ஊர் எங்கும்
காதல் மணம் வீசும்....

Rishi and Mom

Rishi and Mom
Almost into his adulthood ,Rishi wanted to change his wardrobe. Wanted to buy a few clothes. Mom offered to go with him for shopping. She has been doing it for her daugther for almost three years now. She started to shop on her own only for the past three years . Though waiting outside the trial room seemed to be a trial mom loves to do it thinking that , her presence makes her daughter happy. She thought the same would be with Rishi .
Rishi: Mama, I need to buy a few clothes since I have outgrown some of them.
Mom: Rishi, I can come with you to shop.
Rishi: I don't mind you coming with me mama. But I have a few things to tell.
1.You can watch me select but cannot influence me.
2.You can suggest but cannot decide for me.
3. Lastly, just pull out your credit card and swipe.
pretty much it. Do you agree?
Mom: So it is just for the swiping you are asking me to join you.
With these terms and conditions verbally signed by mama , Rishi accepted to go with her for shopping.......
Every experience is a new experience......

காத்திருத்தல்

காத்திருத்தல்
ஒரு காலத்தில் காத்துகிடத்தல் அழகாக இருந்தது. விருந்தினரின் வருகை, பள்ளி திறப்பதற்கான காத்திருத்தல்,புது உடை வாங்க காத்திருத்தல், அதை உடுத்திக்கொள்ள காத்திருத்தல், நண்பர்களின் அழைப்பு, வாரம் ஒரு முறை வரும் தொடர் கதைகளுக்கான காத்திருப்பு,தொலைகாட்சியில் வாரம் ஒரு முறை வரும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி, இப்படி காத்திருப்பது என்பது ஒரு வித ஆச்சரியம் , சஸ்பென்ஸ் , ஆசை, எதிர்பார்ப்பு , ஆவல் என்று பலவிதமான உணர்வுகளின் கலவையாக இருந்தது.
இன்றோ எல்லாமே விரல் சொடுக்கும் நேரத்தில் விரல் நுனி கொண்டு நிவர்த்தி செய்யப்படுகிறது. காத்திருத்தலினால் இருக்கும் மதிப்பு போய் இப்பொழுது காத்திருப்பு என்பது ஒரு எரிச்சல் தரக்கூடிய நிகழ்வாகி போனது. Instant food, Instagram, என்று எல்லாமே உடனுக்குடன் நிகழ வேண்டும் என்ற எதிர் பார்ப்பே எல்லோரிடமும்.
பொறுமை ஆக இருந்தால் எருமை மேய்க்க கூட லாயக்கற்றவர்களாக ஆக்கப்பட்டு விடுவோம் போல் இருக்கிறது. குழந்தைகள் ஆசை பட்டதை எப்படியும் செய்ய வேண்டும் என்ற பெயரில் இதை நம் அடுத்த தலைமுறையினருக்கும் கடத்தி விட்டோம். பொறுமை, நிதானம், காத்திருத்தல் எல்லாம் என்ன விலை என்றாகிவிட்டது.....

அந்த ஒரு நிமிடம்

அந்த ஒரு நிமிடம்
காலையில் வீடே நிசப்தம். நான் மட்டும் வழக்கம் போல் கருமமே கண்ணாயினார் என்று எழுந்து விட்டேன். அடுக்களைக்குள் நுழைந்து வழக்கம் போல் வேலையை துவங்கினேன். அப்பொழுது தான் அந்த நிகழ்வு நடந்தது. அந்த ஒரு நிமிடம் என்னுடைய அந்த காலை பொழுதை தலை கீழாக புரட்டிப்போட்டது. என்ன செய்வது என்று ஒரு நிமிடம் தெரியாமல் பதறி போனேன். கை , கால் நடுக்க மெடுக்க ஆரம்பித்து விட்டது. அழுகை அழுகையாக வந்தது. ஆனாலும் அழக்கூடாது . எப்பேர்பட்ட சூழ்நிலையானாலும் தைரியமாக எதிர் கொள்ள வேண்டும் என்ற மனதிடத்துடன் செயல் பட துவங்கினேன்.
தூங்கி கொண்டு இருப்பவர்களை எழுப்பி சொல்வதா அல்லது எழுந்து வந்ததும் சொல்லலாமா என்று ஒரு வித தயக்கம். உடனே எழுப்பி சொன்னாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஆபீஸ், பள்ளிக்கூடம் என்று அவர்கள் நேரத்திற்கு செல்ல வேண்டும். எது எப்படி ஆனாலும் நானே தான் சமாளித்தாக வேண்டும். ச்ச்ச, இப்படி ஆகிவிட்டதே! அந்த ஒரு நொடி நடவாமல் இருந்திருந்தால் இன்றைய பொழுது எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். கொஞ்சம் கூட எதிர்பார்க்க வில்லை. யாரை நொந்து கொள்வது என்று தெரியாமல் என்னை நானே நொந்து கொண்டேன்.
நடந்தது நடந்தாகி விட்டது அடுத்தது என்ன என்று முடிவு செய்து, அடுக்களையின் பின் பக்கம் சென்று அங்கு காய்ந்து கொண்டிருந்த கைப்பிடித் துணியை எடுத்து வந்து நனைத்து பிழிந்து, ரத்தக்களரியாய் காட்சி அளித்த மிக்ஸியை துடைக்க ஆரம்பித்தேன். ஆமாம், காலையில், தக்காளி சட்டினி அரைக்கும் அவசரத்தில் கொள் அளவிற்கு மேல் மிக்ஸி jarல் தக்காளியையும் வெங்காயத்தையும், போதாத குறைக்கு நல்ல காரமான காய்ந்த மிளகாயையும் போட்டு ஒரு சுத்து சுத்தினேன் பாருங்க.....
. என் கட்டுப்பாட்டில் இருந்து மிக்ஸி மூடி திறந்து உள்ளிருந்த கலவை என் அடுக்களை முழுதும் ஆரத்தி கரைத்து ஊற்றியது போல் தெளித்து தள்ளியது. அப்புறம் என்ன என் மிக்ஸி , சுவர், cupboard , அடுக்களை மேடை, தரை, அருகில் இருந்த microwave oven, fridge, என்று சகலமும் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு ரணகளமாக ஆகிப்போனது. பட்ட காலிலே படும், சுட்ட இடத்திலேயே சுடும் என்பது போல, இதனை சமாளிக்கும் முன் அடுப்பில் இருந்த பால் பொங்கி அடுப்பு முழுதும் பாலாபிஷேகம் ஆனது. அட ராமா! நல்லா தானே எழுந்து வந்தேன். என்ன ஆச்சு எனக்கு? பரீட்சை மகன் ரிஷிக்கு தானே, நான் ஏன் இப்படி பதற்றமானேன்? அவன் இழுத்து மூடி தூங்கி கொண்டிருக்கிறானே! பரீட்சைக்கு போகுமுன் நேரத்திற்கு சாப்பாடு செய்து முடிக்க வேண்டும் என்ற அவசரமா? அந்த ஒரு நிமிடம் மட்டும் நிகழாமல் இருந்திருந்தால்? அளவு கம்மியாக மிக்ஸியில் போட்டு இருந்தால், மூடியை அழுத்தி பிடித்திருந்தால், பால் பொங்குவதை பார்த்து இருந்தால், இப்படி பல ”இருந்தால்” மனதில் தோன்றி மறைந்தது.
இப்படித்தான் வாழ்க்கையில் பல நிமிடங்கள் ஏன் நிகழ்ந்தன என்ற எண்ணம் தோன்றுகிறது. அது மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், இப்படி மட்டும் நான் செய்யாமல் இருந்திருந்தால், அப்படி அவர் சொல்லாமல் இருந்திருந்தால், ..... இப்படி எத்தனையோ நிகழ்வுகளை நாம் மாற்றி அமைக்க கனவு கண்டு கொண்டிருக்கிறோம். மனதிற்கு பிடிக்காத, மனதிற்கு வலியை கொடுக்கக் கூடிய எத்தனை எத்தனையோ நிகழ்வுகளை நம் வாழ்க்கை ஏட்டிலிருந்து கிழித்தெரிய பார்க்கிறோம். அப்படி வாழ்க்கையை திருப்பிப் போடும் சக்தி மட்டும் நமக்கிருந்தால், எந்த ஒரு நிமிடமும் “அந்த ஒரு நிமிடமாய்” தழும்பை விட்டுச்செல்லாது........
இப்படி கலை பொழுது ஒரு யுத்த களமாய் காட்சி அளிக்க , எழுந்து வந்த கணவரிடமும், மகனிடமும் என் “அந்த ஒரு நிமிட” நிகழ்வை வாய் வலிக்க வர்ணித்து முடித்தேன். போகிற போக்கில் கதையை கேட்டு முடித்து விட்டு கணவர்,”Oh, you need to be careful," என்று மட்டும் சொல்லிவிட்டு, எங்கே அங்கேயே நின்று கொண்டிருந்தால் அவர் கையில் பிடிதுணியை கொடுத்து துடைக்க சொல்லிவிடுவேனோ என்று நழுவி விட்டார்.. மகனோ கொஞ்சம் கூட சலனமில்லாமல், ஒரு "Oh ok" என்று சொல்லி விட்டு அவன் வேலையை பார்க்க கிளம்பிவிட்டான். நானோ பிடிதுணியை கசக்கியபடி, அடுத்து என்ன சட்டினி அவசரமாக அரைப்பது என்று யோசித்து கொண்டே தண்ணீரில் கையை கழுவினேன்

பெண்மையை புதைக்காதீர்....

காலை மணி ஒன்பது. சாலையில் ஒரே பரபரப்பு. ஒரு பேருந்து தன் முழு உடம்பையும் வேகமாக திருப்பாமல் மெல்ல மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக தன் உடலை அங்கம் அங்கமாக திருப்பி என்னை கடந்து சென்றது. பேருந்து போக வழி விட்டு விட்டு காத்து இருக்கையில் பேருந்தினுள் அழகாய் ஒரு கவிதை.
ஒரு தந்தை ,பேருந்தின் கடைசி இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் முன்னே உள்ள இருக்கையின் கம்பியை தன் விரல் கொண்டு கவ்வி கொண்டு அமர்ந்திருந்தார். இரண்டு முழம் நீண்டு இருந்த அவர் கையில் தலை வைத்து சாய்ந்தபடி அவரின் மூன்று வயதிருக்கக்கூடிய பெண் குழந்தை அவர் மடியில் அமர்ந்து கொண்டு ஆனந்தமாய் உறங்கி கொண்டு இருந்தது. பேருந்து எப்படி போனால் என்ன, எப்படி வளைந்தால் என்ன ? என் தந்தையின் கை இருக்கிறது பக்க பலமாய் என்னை பாதுகாக்க என்ற நிம்மதியில் அந்த குழந்தை .
குழந்தை எழும் வரை அவர் கையை எடுக்க போவதில்லை அல்லது பேருந்து அவர் இறங்க வேண்டிய இடம் அடையும் வரை அவர் அசையப்போவதில்லை. தந்தையே தாயுமானார். கவிதையாய் தோன்றிய அந்த காட்சி என் மனதில் ஓவியமாய் பதிந்தது.இப்படித் தான் எல்லா குழந்தைகளும் தங்களின் தந்தையின் அரவணைப்பில் இருக்கும் வரை ஆனந்தமாய் உறங்குகிறார்கள்.....
உறக்கத்தை கலைத்து பயத்தை விதைக்காதீர்....உயிருடன் எரிக்காதீர்.....பெண்மையை புதைக்காதீர்....பெண் சுதந்திரத்தை பரிக்காதீர்....

The Scar

The Scar
As we all know about the talk of the town now, there is no need for me to dig into the details . While we all are waiting for the savages to be brutally punished we all are exchanging messages about how women should protect herself when attacked by a mob or when attacked or targetted by a single person. All these tips will definetely help to some extent. But the core problem will never be eradicated .As long as savages exist in this society there will be nonstop butchering of women's body and soul.
Assault on women, sexual harassment on women has been known since this world was created. Back then it was claimed as something done to the weaker sex. But we no longer have the title of weaker sex. Women are being empowered in various walks of life. Be it education, employment, research, sports or any field, they are trying their best to be on par with the men. I accept that women empowerment is happening world wide. Does that mean women are safe? Does being independent financially give her the safety?
Financial independence doesn't guarantee any safety for women. She can be better than any men around her in any field. But , She is always a target wherever she is. In educational institutions, work place, public place, home front, army, anywhere for that matter. She is struggling her best to break the norms and prove herself to be brave and strong. But does the society leave her to live peacefully? Talking about Women liberaism, Feminism, gender equality , etc etc are all happening as a movement. But the sexual assault on women doesnt seem to come down. It is increasing day by day , thereby creating an unsafe environment for women to move around.
There is not a single woman, right from childhood to adulthood who can say that they dont have a deep scar within them . Each one is either verbally, physically, emotionally, abused somewhere in their lifespan. The look, the words, the actions, the comments, the messages, the moves, anything would have left a scar in her soul if not in her body. She carries that scar till her death. Who is to be held responsible for this? Admiring and appreciating beauty is different from invading and abusing beauty. we all say that we live in a civilized society, educated society, refined society. But how can a society be named as civilized when there is no safety for women? Women dont ask for security. They plead for safety. It is their birth right. Leave her ALONE . Don't scar her body or soul. She can create a paradise out of this rotten world.

எலி பந்தயம்

எலி பந்தயம்
புது வருடம் பிறந்தாகிவிட்டது. மனதில் புத்துணர்ச்சி புரண்டோடுகிறது. நம்பிக்கையை தும்பிக்கையாய் பிடித்தாகிவிட்டது. இவ்வளவு வருடங்கள் ஓடி ஓடி என்ன கண்டோம் என்று சற்றே இளைபார மனம் முடிவு செய்து விட்டது. இனி செய்யும் யாவற்றிலும் ஒரு அமைதியை, நிதானத்தை கையாளவேண்டும் என்ற ஒரு தீர்க்கமான , தற்சமயத்திற்கான ஓர் முடிவு எடுத்து ஒரு பத்து நாள் உருண்டோடி விட்டது. ஊரிலிருந்து வந்து மெதுவாய் அன்றாட வாழ்வில் மீண்டும் பொருந்தியாகிவிட்டது என்று நினைக்கும் நேரத்தில் மனக்குரங்கு மீண்டும் மரத்தின் மேல் ஏறிவிட்டது.
என்ன நல்லா இருக்கீங்களா? என்று யாரை கேட்டாலும், யாவரும்,”எங்க பொங்கல் வேல ஆரம்பிச்சாச்சு. அத கழுவி, இத தொடச்சு, ஒட்டட அடிச்சு, பெயிண்ட் அடிச்சு, அப்பப்பா வேல ஓயவே மாட்டேங்குது. வேளைக்கு வேற யாரும் இப்பல்லாம் வரவே மாட்டேங்கறாங்க. எல்லாம் சுத்தம் பண்ணி முடிச்சு ராத்திரி படுத்தா கை கால் எல்லாம் வலியா வலிக்குது,”என்ற புலம்பல் எல்லா பக்கங்களிலிருந்தும் ஒலிக்கிறது. ஆஹா நாம் மட்டும் இப்படி ஒன்னுமே சுத்தம் செய்யாம இருக்கிறோமே என்ற குற்ற உணர்வு தொத்திக்கொள்ள எட்டாத திரைச்சீலையை வெளவெளலாய் தவ்வி பிடித்து கழட்டி என் பங்கிற்கு துவைத்தாகிவிட்டது. அதை திரும்பி மாட்டி விட மகனின் உதவியை நாட வேண்டிய கட்டாயம்.
வாழ்க்கையில் முதல் முதலாக திரைச்சீலையை மாட்டிய மகன்,” அம்மா இது ரொம்ப வலிக்குது,” என்றான். ”பொங்கலுக்கு எதுக்கு மா இதெல்லாம் சுத்தம் செய்யனும்,”என்றும் சலித்துக்கொண்டான். இன்னும் சில மாதங்களில் கல்லூரிக்கு போகப்போகும் அவனின் அறையை கற்பனையில் பார்த்தேன். மனதில் பகீர் என்று ஓர் நெருடல்!
புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்ள கூடாது என்ற முடிவுடன் யார் எதை சுத்தம் செய்தால் என்ன என்னால் இவ்வளவு தான் முடியும் என்ற முடிவுடன் சுத்தம் செய்வதற்கு முற்றி புள்ளி வைக்கலாம் என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். அடுத்த அரை மணி நேரத்தில் எழுபது வயது அம்மா தொலைபேசியில் கூறினாள்,”இன்னையிலேந்து அடுப்படி சுத்தம் செய்யனுமா பொங்கலுக்கு.”
சாயங்காலம் வாசல் கதவை திறந்து வெளியே போகலாம் என்று கிளம்பிய போது பக்கத்து வீட்டு சீனப் பெண்மணி அவளின் செருப்பு வைக்கும் cupboardடை ,”சீனப் புத்தாண்டு வருகிறது. வீட்டை எல்லாம் சுத்தம் செய்ய வேண்டும். அதான் தொடங்கி விட்டேன்,”என்றாள் சற்றே சலித்துக் கொண்டு.
ஆஹா நாம வேண்டாம் என்றாலும் இந்த எலி பந்தயத்தில் நம்மை ஓட விடாமல் இந்த உலகம் விடாது போல இருக்கிறதே. கங்கணம் கட்டி எல்லாரும் இப்படி பழி வாங்குகிறார்களே. நாம் சுத்தம் செய்யாமல் விட்டு விட்டால் நாம் என்னவோ குப்பைக்கு நடுவே வசிப்பது போல் உணர்வை அல்லவா ஏற்படுத்தி விடுகிறார்கள். நாம் மிகுந்த சோம்பேரியாய் இருப்பது போன்ற உணர்வு மேலிட, அமைதியாய் இருந்த மனதில் குற்ற உணர்வை தூண்டில் போட்டு பிடித்து வேடிக்கை பார்க்க எத்தனிக்கிறார்கள். படிப்பதில் துவங்கி, வேலை, சம்பாத்தியம், நடை , உடை, பாவனை, என்று எங்கெல்லாமோ இருக்கும் இந்த எலி பந்தயம் வீட்டை சுத்தம் செய்வதில் கூட நம்மை விட்டு வைக்கவில்லையே என்று நானும் சலித்துக் கொண்டு ஒட்டடை அடிக்கும் குச்சியை தேட ஆரம்பித்தேன்.

நீங்கா நினைவுகள்.....

நீங்கா நினைவுகள்.....
பால் நல்லா பொங்குச்சா?
பொங்கல் கூவியாச்சா?
மாடெல்லாம் தண்ணி காம்பிச்சு கூட்டி வந்தாச்சா?
வாசல் கூட்டி, மொழுகியாச்சா?
கோலம் போட்டாச்சா?
இப்படி பல கேள்விகளின் ஒலி....
வண்ணம் பூசிய கொம்புகள் கொண்ட மாடுகள்....
காகித மாலை அணிந்த மாடுகள்......
குட்டி கூடையுடன் அத்தைகள், சித்தப்பாக்களுடன் புல் அருக்க சென்று , அருக்க தெரியாமல் எல்லோர் கூடையிலும் இருந்து ஒரு பிடி எடுத்து என் கூடையில் போட்டு என்னை மகிழ்வித்த நாட்கள்....
செங்கல் மாவு கொண்டு, காவி கொண்டு வாசல் நிறைய சிக்கு கோலம் போட்ட அத்தைகளின் கை வண்ணத்தை கண்டு வாய் பிளந்த நாட்கள்........
கள்ளி வட்டம் என்றால் என்ன என்று தெரியாமல் ”உன் மூஞ்சியில் கள்ளி வட்டம் போட” என்ற சொற்றொடரை ஊருக்கு போகும் போது கேட்ட போது, மாட்டு பொங்கல் அன்று சாணியை வட்டமாக வைத்து நடுவில் கள்ளியை ஒடித்து வைப்பது தான் கள்ளி வட்டம் என்று அறிந்து கொண்ட நாட்கள்.....
உலக்கை ஒன்று வாசலில் கிடக்க குளித்து விட்டு வரும் மாடுகள் அதனை தாண்ட வேண்டும் என்ற பட படக்கும் எதிர் பார்ப்புடன் வேடிக்கை பார்த்த நாட்கள்......
தெருவில் இருந்த அத்துணை வீட்டிற்கும் ஒரு தட்டையும் குச்சியையும் எடுத்துக் கொண்டு ”பொங்கல் கூவ” என்று எல்லோருடனும் ஓடிய நாட்கள்....
“தட்ட நெளிச்சு கொண்டுட்டு வந்திராத” என்று அப்பாயி சத்தம் போட்ட நாட்கள்.......
இருட்டான மாட்டு கொட்டகையில் சித்தப்பா சாம்பிராணி போட்டு, மாடுகளுக்கு சூடம் காட்டி, பொங்கல் கூவிய நாட்கள்...
பயந்து கொண்டும், கொஞ்சம் அசிங்கப்பட்டு கொண்டும் மாட்டு காலில் விழுந்து கும்பிட்ட நாட்கள்......
சொந்தங்கள் யார் வந்தாலும் அள்ள அள்ள குறையாத , மீன், கறி, கோழி என்று வித விதமாய் சாப்பாடு பரிமாறப் பட்ட நாட்கள்......
கன்னுக்குட்டிக்கு பொட்டு வைத்து, மாலை போட்டு கொஞ்சிய நாட்கள்.....
வீட்டு வாசலில் கோடு வெட்டி மாட்டுக்கு பொங்கல் வைத்த நாட்கள்.... விறகை எரிக்க தெரியாமல் தினற யாராவது வந்து ஊதி உதவ, கண்ணை கசக்கிக் கொண்டே பொங்கல் வைத்த நாட்கள்.....
தாத்தாக்கள், சித்தப்பாக்கள் ”பொங்க காசு” என்று ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கொடுத்த நாட்கள்.....
வடையும், பணியாரமும் வயிறு முட்ட எல்லோர் வீட்டிலும் ருசி பார்த்த நாட்கள்....
கரும்பை கடித்து போகும் வழியெல்லாம் சக்கையை துப்பிக் கொண்டே போன நாட்கள்...
வடைக்கும் , பணியாரத்திற்கும் சித்திக்கள் மாவு அரைக்கும் பொழுது நானும் ஆட்டு கல்லை சுத்துகிறேன் என்று நாலு சுத்து சுத்திவிட்டு விளையாட ஓடிய நாட்கள்.....
மறுநாள்,கானும்பொங்கல் அன்று கோவிலுக்கு போன நாட்கள்......
கோவிலில் ராட்டிணம் ஆடிய நாட்கள்....ராட்டிணம் சுற்றும் அந்த பையனை ஸ்பெஷலாக எனக்காக மட்டும் வேகமாக சுத்த சொல்லி சித்தப்பாக்கள் மிரட்டிய நாட்கள்..
மாவிளக்குக்கு நடுவில் திரிபோட்டு விளக்கு எறிய, அதன் அருகில் வெல்லம், பலாப்பழம், தேங்காய் கலந்த கலவை இருந்த நாட்கள்......
கோவில் கடையில் மிட்டாய் கைகடிகாரம் கட்டிக் கொண்டு, கடை கடையாய் சுற்றி , விசிலும், வளையலும் வாங்கிய நாட்கள்....
இனிப்பு சேவு வாங்கி ருசித்த நாட்கள்.....
கோவில் நாடகம் பார்க்க வண்டியில் ஏறிக்கொண்டு அத்தைகளுடனும், சித்தப்பாக்களுடனும் போன நாட்கள்...
நாடகம் ஆரம்பிக்கும் முன்னறே தூங்கி போன நாட்கள்.....
பொங்கல் முடிந்து மீண்டும் ஊருக்கு சோகமான முகத்துடன் கிளம்பிய நாட்கள்....
இத்துனையும் நினைவுகளில் மட்டும் தங்கி கிடந்து ஒவ்வொரு வருடமும் பொங்கல் வரும் பொழுது மனதில் சந்தோஷத்தையும், ஏக்கத்தையும், கலந்து ஒரு வித கலவையான உணர்வை தவறாமல் தந்து கொண்டே இருக்கிறது......
இவ்வளவு சந்தோஷங்களிலும் ஒன்றாய் கூடி மகிழ்ந்த உறவுகளில், மறைந்த சொந்தங்கள் சில, மறந்த சொந்தங்கள் சில, விலகிய சொந்தங்கள் சில , விலக்கப்பட்ட சொந்தங்கள் சில....காலம் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. புதிதாய் சொந்தங்களும் பிறக்கத்தான் செய்கிறது. வருவது வரட்டும், போவது போகட்டும் என்று இருந்தாலும் இந்த நினைவுகள் மட்டும் நீங்காமலே உயிருடன் கலந்து விட்டது...... அடுத்த வருட பொங்கல் வரை இந்த நினைவுகள் உறங்கும்... மீண்டும் எழும்......

ஒரே சாரம் !!

ஒரே சாரம் !!
தோழி சுஜாவுடன் ஆன ஒரு காரசார உரையாடலில் சிலைகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது நான் ஒரு குறிப்பிட்ட கலை நுணுக்கத்தை கூறி ,உடனே “ எனக்கு அந்த மாதிரி கண்கள் இருந்தால் பிடிக்கவே பிடிக்காது “, என்று கடினமாக கூறினேன். அதற்கு அவள் நிதானமாக” ஆமாம் எனக்கும் அந்த மாதிரி கண்கள் இருக்கும் சிலைகளை ரசிக்க தோனாது”, என்று அழகாக கவிதையாய் கூறினாள்.
ஒரு நிமிடம் நாங்கள் பேசி வந்த சாரத்தை விட்டு விலகி அவளின் வார்த்தைகளை யோசிக்க ஆரம்பித்தேன். இரண்டு பேருக்குமே ஒரு விஷயம் பிடிக்கவில்லை . ஆனால் அவள் அதையே எவ்வளவு அழகாக வெளிப்படுத்தினாள்! நான் எப்படி கடினமாக என் நிலையை வெளிப்படுத்தினேன்! எந்த ஒரு விஷயத்தையும் நாம் ரசிக்கும் போது எப்படி எல்லாம் சிரத்தை எடுத்து அதனை மெருகூட்டி நம் ரசனையை வெளிப்படுத்துகிறோமோ அதே சிரத்தையை உபயோகப்படுத்தி நமக்கு பிடிக்காத , உடன் பாடு இல்லாத விஷயத்தை கூட அழகாக இல்லாவிட்டாலும் அசிங்கமாக , பிறர் மனம் நோகாமல் அழுத்தமாக ஆணித்தரமாக வெளிப்படுத்தலாம் அல்லவா? மாற்றம் என்பது நாம் மனது வைத்து ஏற்படுத்திக் கொள்வது தானே ?
சாரம் ஒன்று தான் ! விகிதாசாரம் தான் வெவ்வேறாகி போனது!

KD (எ) கருப்புதுரை

KD (எ) கருப்புதுரை
வாழ்க்கையில் சில விஷயங்கள் பிடித்துப்போக காரணம் அது நம் மனதுக்கு இனிதாக அமைவதாலும், மனதிற்கு ஒரு வித அமைதியான மகிழ்வை தருவதாலும் ஏற்படுகிறது. KD (எ) கருப்புதுரை படம் எனக்கு பிடித்துப் போக காரணமும் அதுவே. இளமையான கதாநாயகனோ, அல்லது அழகான கதாநாயகியோ அல்லது கண் கவரும் நடனக் காட்சிகளோ, சில பல முடிச்சுக்களுடன், திருப்பங்களுடன் கூடிய கதையோ ஏதும் இல்லை. ஆனாலும் படம் பிடித்துப் போனது. நண்பர்கள் சிலரின் பரிந்துரைத்த படியால் படம் பார்க்க ஆரம்பித்தேன். எனக்கு படம் பிடித்துப்போன காரணங்களை பட்டியல் இட்டு எனக்கு நானே பார்த்தேன்.
1. பச்சை பசேல் என்ற வயல் பகுதி.
2. கிராம சூழ்நிலை.
3. வயதான கருப்புத்துரை அவரின் நடிப்பு. இறந்து போன என் தாத்தாவை எங்கேயோ நியாபகப்படுத்தினார்.
4. சிறுவன் குட்டியாக நடித்து இருக்கும் சுட்டிப் பயல் நாகவிஷால்.
5. தாத்தாவிற்கும் சிறுவனுக்கும் இருக்கும் அழகான எதிர் பார்ப்பில்லா உறவு.
6. வயதான பின் பார்த்துக்கொள்ளும் காதலர்களிடையே இருக்கும் பாசம், நேசம். காதலின் பரினாம வளர்ச்சி.
7.அழகிய அந்த ஓடைகளும், ஆறுகளும்.
8. இந்த உலகில் பாசம் வைக்க வயது ஒரு தடை இல்லை என்ற கோட்பாடு.
9. எல்லா சொந்தங்களும் பந்தங்களும் வெறுத்தாலும் யாரும் இந்த உலகில் தனியாக விடப்படுவதில்லை என்ற நிலை.
10. அடுத்தவர் மீது அக்கறை உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை.
11. சாக்குத் துணி கொண்டு கட்டப்பட்டு இருக்கும் அந்த கூடார வீடு. சிறு வயதில் மழைகாலத்தில் குடைகள் கொண்டும், போர்வை கொண்டும் இது போல் கூடாரம் அமைத்து விளையாடிய நினைவுகள் வந்து போனது.மகிழ்ச்சியாக வாழ மாட மாளிகை வேண்டாம். சிறு கூடாரத்திலும் மகிழ்ச்சி உலாவரும். பாசம் வைக்க, நேசம் வைக்க துணை ஒன்று இருந்தால்.
12. ரம்மியமான இசை.
13. தாத்தாவின் bucket list ...என்னுடைய bucket list என்ன என்று நினைத்து பார்க்க வைத்தது. ஓடிக் கொண்டே இருக்கும் இந்த வாழ்க்கையில் நம் ஆசைகளை நினைத்துப் பார்க்க கூட நேரம் கிடைப்பதில்லை நமக்கு.
14. தாத்தா , சிறுவன் இடையே நடக்கும் உரையாடல், விளையாட்டுகள், நக்கல், கேலி. இப்பொழுதெல்லாம் பிள்ளைகள் தாத்தா பாட்டியிடம் பேசுவதே அரிதாகி போய் விட்டது. அவரவர் பிள்ளை வளர்ப்பையே சுமையாக கருதும் இக்காலகட்டத்தில் பேரக்குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவோ, விளையாடவோ இனிவரும் சந்ததியருக்கு தோன்றுமா என்பதே கேள்விக்குறி. எல்லோரும் My time, My space என்பதை நோக்கி போய்கொண்டிருக்கிறோம்.
15.எல்லாவற்றையும் விட பிரியாணியின் வாசம் திரையை தாண்டி மூக்கை துளைத்தது. இந்தியாவின் தேசிய உணவு பிரியாணி தான். இதில் சந்தேகமே வேண்டாம்.
வாழ்தல் என்பது முக்கியம். ஆனால் அனுபவித்து வாழ்தல் என்பது அதைவிட முக்கியம். சிறு சிறு சந்தோஷங்களே வாழ்க்கையின் சுவாரசியமும் ஆணிவேரும் ஆகும். அனுபவித்து பார்க்க வேண்டிய படம்.

நிசப்தம்!!

நிசப்தம்!!
நான் வேண்டி விரும்பி
கேட்ட நிசப்தம்
இதோ என்னைச் சுற்றி இருக்கிறது.
நான் ஏங்கிய அந்த நிசப்தம்
சில நாட்கள் எனக்கு
பிடிக்காமல் போகிறது.
இந்நாள் அந்நாட்களில் அடங்கும்!
ஆம், எனக்கு இந்த நிசப்தம்
வெறுப்பை அளிக்கிறது.
எனக்குள் கேட்கும் சப்தத்தை தவிர
வேறு சப்தங்கள் ,ஒலிகள்
கேட்க வேண்டும் போல் உள்ளது.
அந்த எரிச்சலூட்டும் சப்தங்களை
எனக்குள் கேட்க வைக்கும்
என் மூளையின் மின் இனைப்புகளை
கத்தரித்துவிட வேண்டும் போல் உள்ளது.
என்னைச் சுற்றி கேட்கும் சப்தம்
எனக்குள் கேட்கும் இரைச்சலை
ஆதிக்கம் செய்ய வேண்டும்.
நூறு மடங்கு அதிகமாக கேட்க வேண்டும்.
எனக்குள் கேட்கும் சப்தம் என்னை
மிரளச் செய்கிறது.
சாலையின் நடுவில் நின்று கொண்டு
அந்த வாகனங்களின் இடைவிடாத
ஒலியை கேட்க தூண்டுகிறது.
இந்த நிசப்தம் எனக்குள் கேட்கும்
இரைச்சலை நுட்பமாக கேட்க வைக்கிறது.
அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
என் இருப்பு மீதே எனக்கு சந்தேகம் வரச்செய்கிறது.
அறுவை சிகிச்சை அறைக்கு
வெளியே நிலவும் நிசப்தமும்,
பரீட்சை முடிவிற்கு முன் நிலவும் நிசப்தமும்
ஒரு வித நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
என்னை சுற்றி இருக்கும் இந்த நிசப்தம்
எனக்குள் ஒருவித பயத்தை உருவாக்குகிறது.
கடவுளுக்கு முன் அவன் பாதங்களையும், முகத்தையும் பார்த்துக்கொண்டு
நிற்கும் போது சூழும்
நிசப்தம் நம்பிக்கை ஊட்டுவதாகவும்
பாதுகாப்பளிப்பதாகவும் தோன்றுகிறது.
ஊடலுக்கு பின் சுற்றும்
நிசப்தம் போன்றது இல்லை இது.
ஊடலுக்குப் பின் ஒரு தென்றலின் மெல்லிசை
கண்டிப்பாக கேட்கும்.
இந்த நிசப்தம் எனக்குள் ஒலிக்கும்
சப்தங்களை கேட்க என்னை வற்புறுத்துகிறது.
என் தூக்கத்தை களவாண்ட
இந்த நிசப்தத்தை நான் வெறுக்கின்றேன்.
என்னை வெளியில் அமைதியானவளாகவும்
எனக்குள் ஓர் ஆழிப்பேரலையை உண்டாக்கும்
இந்த நிசப்ததை நான் அடியோடு வெறுக்கிறேன்!

Silence

Silence
The silence which I prayed for
is here around me.
Somedays I hate the same silence
which I longed for .
This is one of those days.
Yes I hate this silence around me.
I wish to here noise and sound
other than that I hear within me.
I want to cut the wires in my brain
to stop them from making those
annoying sounds.
I want the sound around me to
overpower the noise within me.
I dread this silence around me.
It makes me to run into the middle of the road
And just stand and listen to the noises
those running cars and buses make
without any break.
This silence makes me
listen to my inner voice beyond tolerance.
This silence creates a doubt about my existence.
The silence outside an operation theatre
the silence before an exam result
holds a ray of hope.
This silence around me creates a fear within me.
This silence isn't like the one I experience
while I stand before the God staring at his face and feet.
There is some consolation and reassurance there.
This is not like the silence after a fight with your loved one.
For it is sure after that there will be music around.
This silence forces me to hear to the voices within me.
Yes I hate this silence .
which has stolen my sleep.
Yes I hate this silence
which is making me more silent outside
and creating a tsunami inside .

Sunday, January 26, 2020

Girl talk




Image result for drawing of two girls talking over the phone.
Girl talk
நேற்று அடித்த வெயிலுக்கு தலை வலி வந்தது தான் மிச்சம். தொலைப் பேசியில் அழைத்த தோழி சுஜாவிடம் என் ஒற்றை தலைவலியை பற்றி புலம்பி தள்ளிவிட்டு அப்படியே பேச்சை தொடர்ந்தோம். குளிர் காலம் முடிந்து முதல் வெயிலில் வெளியில் போனதால் தான் தலைவலி வந்தது என்று அவள் ஆராய்ந்து கூறினாள். சுஜா எது சொன்னாலும் அது சரியாகவே இருக்கும். கணவர் சொல்வதை கூட சில நேரங்களில் கேட்காமல் இருப்பேன் ஆனால் சுஜா சொன்னால் அது சுந்தரேசுவரர் வாக்கு. தட்டவே தட்ட மாட்டேன்.
தலை வலி தலைப்பிலிருந்து அப்படியே , முதல் வெயில், முதல் பூ, முதல் பனி, என்று சகல விதமான ”முதல் ”களையும் முத்து முத்தாய் கோர்த்து பார்த்துவிட்டு வாழ்க்கையின் பின் நோக்கி பயனித்தோம். எப்படி நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்கில் காலையில் எழுந்தவுடனே தொலைபேசியில் பேசினோம் என்று நினைத்து பார்த்தோம். என்ன பேசினோம் என்று நினைத்தால் ஒன்றுமே நினைவுக்கு வரவில்லை. எல்லாமே sweet nothings் தான். ஒரு முறை cross talkல் ஒரு காதல் ஜோடி பேசுவதை கேட்க நேர்ந்தது. அந்த பெண் “என் தோழிகள் உங்க பேர கேட்டாங்க. நான் எப்படி சொன்னேன் தெரியுமா?” என்று ஒரு வித வெக்கத்துடன் கேட்க, அதற்கு அந்த ஆண், “ என்ன சொன்ன என்ன சொன்ன?” என்று ஆண்களுக்கே உரித்தான அவசரத்துடன் வினவினான். அதற்கு அவள்,” நான் சொன்னேன்,,அவர் பேர் ABCD ல வர்ற K வும் 1 2 3 ல வர்ற sevenம் சேர்ந்தது என்றேன்,” என்று கூறினாள். நான் இடையில் புகுந்து”ஆஹா அவர் பேர் கேசவனா?” என்று கேட்டுவிட்டேன். உடனே இரண்டு பேரும் சுதாரித்துக் கொண்டு,”அச்சோ யாரோ ஒட்டு கேக்கறாங்க வச்சுடுவோம்.”என்று அலறி அடித்துக் கொண்டு போனை வைத்து விட்டார்கள். Cross talk கேட்பதும், ஊடே நாம் பேசுவதும் ஜாலியாக இருக்கும்.
காதல் ஜோடியை பற்றிய செய்தி ஞாபகத்திற்கு வந்ததும், எப்படி கடைக்கு போய் வித விதமாக greeting card வாங்கி சேகரிப்போம் என்பதை பற்றி பேசினோம். பின்னர், பொங்கல், தீபாவளி என்றால் எவ்வளவு அழகழகான வாழ்த்து அட்டைகள் கிடைக்கும் என்று நினைத்துப் பார்த்தோம். இப்பொழுது Whatsappல் வரும் வாழ்த்துச் செய்திகளையும் கொஞ்சம் திட்டி தீர்த்தோம். திடீரென்று பாடல்களை பற்றி அலச ஆரம்பித்தோம்.சித் ஸ்ரீராமின், “வேறெதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும்” பாடல் வரிகளை சேர்ந்தே ரசித்தோம்.
ஒரு காலத்தில் பாட்டு புத்தகம் வாங்கி பாடல்களை மனப்பாடம் செய்தது நினைவிற்கு வந்தது. அப்பொழுது எல்லாம் அப்பா கூறுவார்,”இந்த பாழாப்போன பாட்டு புக்க வாங்கி மனப்பாடம் பன்றதுக்கு பாட புத்தகத்தில இருக்கற பாடத்த மனப்பாடம் செஞ்சாலாவது உருப்பட வழி இருக்கு.ரேடியோக்குள்ள காத வச்சு கேட்டு ஒன்னுத்துக்கும் உருப்பட போவதில்ல,” என்று திட்டுவார். என்ன திட்டினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு தான். இப்பொழுது இருக்கும் என் பிள்ளைகள் காதில் எந்நேரமும் ஒரு வண்டை மாட்டிக்கொண்டு அலைவதை பார்க்கும் பொழுதெல்லாம் என் அப்பாவிற்கு கோபம் ஜிவ்வ்வ்வ் என்று தலைக்கேறும் . ஆனால் “எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன ”என்று கோவத்தை அடக்கிக் கொண்டு போய்விடுகிறார்.
பாட்டு பற்றிய தலைப்பு முடிந்ததும் யாராவது தலையை உருட்டும் நேரம் வந்தது. மூன்று தலைமுறை பின்னோக்கி நீளம் தாண்டி சுஜாவின் கொள்ளு பாட்டி , தாத்தாவின் தலைகளை கொஞ்சம் உருட்டி விளையாடினோம். அந்த கால கதைகள் சுவையாகத்தான் இருந்திருக்கின்றது. பழங்கதைகள் கூறினால் இக்கால குழந்தைகள், soooo boring” என்று கூறுவது போல் இல்லை. சுவாரசியமான கதையாக இருந்தது. கொள்ளு பாட்டி கதையில் இருந்து தாவி குதித்து நயந்தாராவின் அழகு எப்படி மெருகு ஏறிக்கொண்டே போகிறது என்று நயந்தாராவின் தலையை உருட்டி விட்டு. கொஞ்சமாக சோர்ந்து போனோம்.
அதிலிருந்து எப்படி நாங்கள் அரை சதம் அடிக்க போகும் நாள் நெருங்குகிறது , அதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் என்ன என்ன மாற்றங்கள் உணர முடிகிறது என்று அங்குமிங்குமாய் சின்ன சின்ன அலசல்கள் செய்தோம். என்ன தான் வயதென்பது ஒரு எண் என்று சொல்லிக்கொண்டாலும், வயதாவதை பற்றி நினைக்கையில் கொஞ்சம் சோர்வாகத் தான் போய்விடுகிறது. இன்னும் இருக்கும் கடமைகளும், பொறுப்புக்களும் கண் முன்னே நர்தனம் ஆட ஆரம்பிக்கிறது.
சாப்பாட்டு நேரம் வந்து விட்டது. வாயும் வலித்தது, பசியில் வயிறும் வலித்தது. இன்றைக்கு இது போதும் என்று முடிவு செய்து, சாப்பிட்டு விட்டு ஒரு face pack போட்டுக்கொண்டு நயந்தாரா அளவிற்கு அழகாக முடியாவிட்டாலும், ஒரு நாக்காயி, மூக்காயி அளவிற்காவது அழகாக முயற்சிப்போம் என்று, சாவும் தருவாயில் இருந்த தொலைபேசியை உயிர்ப்பிக்க அதில் wire சொருகி விட்டு chargeல் போட்டுவிட்டு அவரவர் வேலையை தொடர ஆரம்பித்தோம். ......வாயாலயே பயணம் செய்த களைப்பு மிகுதியாகிய படியால் கண்களை உறக்கம் கவ்விக்கொண்டது.கச்சேரி நாளை தொடரும்......
பிகு” நான் Girl talk என்று ஏதோ எழுதுவதை பார்த்த ரிஷி, தமிழ் படிக்க தெரியாததால் நான் என்ன எழுதுகிறேன் என்று தெரியாமல் அது என்ன என்று கேட்டான். நானும் பதிலுக்கு ”நானும் சுஜா auntyம் நேற்று பேசியதை சும்மா எழுதுகிறேன் என்றேன். அதற்கு அவன், ”ஓ இன்றைக்கு உனக்கு சுஜா aunty தான் மாட்டினாங்களா mince செய்ய ?” என்று கேட்டு விட்டு ”அப்பாடா நான் தப்பிச்சேன்” என்று கூறி விட்டு நகர்ந்து விட்டான்.......பய புள்ள இப்போ எல்லாம் சுதாரிச்சுருச்சு. வயசு ஆகுதில்ல.........

Friday, October 25, 2019

மருதாணி எனும் மைலாஞ்சி......

தீபாவளிக்கு இன்னும் ஓர் நாள் தான் இருக்கிறது. ஊரில் இருந்திருந்தால் சொந்த பந்தங்களோடு கொண்டாடி இருக்கலாம். சரி பண்டிகை feel வரவேண்டுமே என்று தீபாவளி சந்தையை பார்க்க போய் இருந்தேன். ஒரே கூட்டம். தீபாவளிக்கு ஜவுளி வாங்குபவர்களும், தோரணங்கள், தீபங்கள், விளக்குகள், ப்ளாஸ்டிக் கோலங்கள் , என்று வித விதமாக தீபாவளிக்கு வேண்டிய பொருட்கள் வாங்க மக்கள் குவிந்து இருந்தார்கள். எங்கே திரும்பினாலும் மருதாணி cone விற்றுக்கொண்டு இருந்தார்கள். மருதாணி போட்டு விடுபவர்களும் இருந்தார்கள். அவர்களிடம் பெண்கள் தங்கள் கைகளில் மருதாணி போட்டுக்கொண்டிருந்தார்கள். பத்தே பத்து நிமிடங்களில் அழகாக இரண்டு கைகளிலும் மருதாணி கொண்டு ஓவியம் தீட்டி விடுகிறார்கள்.
தீபாவளி என்றாலே மருதாணி இட்டுக்கொள்வது ஒரு அத்தியாவசியத் தேவை போன்றது எனக்கு. எனக்கு மட்டுமல்ல பல பெண்களுக்கும் தான். அந்த மருதாணி குப்பிகளைப் பார்த்த பொழுது மனம் வாழ்க்கையின் பல பக்கங்களை திருப்பி பார்க்க ஆரம்பித்தது. தீபாவளிக்கு முதல் நாள் அம்மா மும்முரமாக பலகாரம் செய்து கொண்டு இருப்பார். நானும் என் தங்கையும் மருதாணி போட்டுக்கொள்ள தயாராகி விடுவோம். எங்கள் வீட்டு தோட்டத்திலேயே மருதாணி செடிகள் இருந்தது. அதில் இருந்து இலைகளைப் பறித்து கொண்டு வந்து விடுவோம். அடுத்தது அதை யார் அரைப்பது என்பது தான் பிரச்சனையே. நாங்கள் அரைத்தால் கை முழுதும் மருதாணி சாயம் பூசிக்கொள்ளும். அது நன்றாக இருக்காது. அம்மியில் வைத்துத்தான் அரைக்க வேண்டும். வீட்டில் வேலை செய்யும் விஜயாவை தாஜா செய்து அரைத்து தரச்சொல்வோம். அவள் பாவம், வேறு வழியின்றி ஒத்துக்கொள்வாள். கொஞ்சம் புளி சேர்த்து மையாக அந்த இலைகளை அரைத்து வாங்கி வைத்துக்கொள்வோம். அதில் கொஞ்சம் எலும்பிச்சை சாறும் கலந்து வைத்துக்கொள்வோம். பகல் நேரத்தில் போட மாட்டோம். ஓடி ஆடி விளையாட முடியாது. Bathroom போவது கஷ்டமாக இருக்கும். எனவே இரவு படுக்க போவதற்கு முன் போட்டுக்கொள்வோம்.
அப்பொழுதெல்லாம் , இப்பொழுது இட்டுக்கொள்வது போல அழகழகான designகள் போட்டுக்கொள்ளத் தெரியாது. உள்ளங்கையில் ஒரு பெரிய வட்டம். அதைச் சுற்றி சிறு சிறு வட்டங்கள் அவ்வளவு தான். பின் விரல் நுனிகளில் குப்பிகைகள் போல வைத்துக்கொள்வோம். மிகவும் சிறுமியாக இருந்தபொழுது கை நிறைய சிவக்க வேண்டும் என்ற பேராசையில் கை முழுதும் பூசிக்கொண்டதும் உண்டு. ஓர் வயது வந்த பின் அப்படி பூசிக்கொள்வது அழகல்ல என்று புரிந்து, வட்டங்கள் இட்டுக்கொள்ள ஆரம்பித்தோம். புள்ளிகள் வைத்துக்கொள்வதே அழகென்று நினைத்தோம். சிலர் புரங்கையில் வைத்திருப்பதைப் பார்த்து ஆசைப்பட்டு புரங்கையில் ஒரு சிறு வட்டம் வைத்ததும் உண்டு. நான் மாநிறம் என்பதால் அது எடுப்பாக தெரியாது. அதில் சிறு வருத்தம் இருக்கத்தான் செய்தது.
மருதாணி வைத்துக்கொண்ட பின் அத்தோடு அந்த கூத்து நிற்காது. அப்பொழுது தான் உடம்பில் அங்கங்கே அரிக்கும். இங்கே சொரி, அங்கே சொரி என்று விஜயாவை பாடாய் படுத்துவோம். நேரம் பார்த்து மூக்கு நுனியில் அரிக்கும் பாருங்கள் ! அப்பப்பா!ஆனாலும் ஆசை யாரை விட்டது. இரண்டு கைகளையும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டி மூக்கை தோள் பட்டையில் உரசிக்கொள்வோம். சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு விரல் கொண்டு எங்காவது சொரிந்து விட்டால் மீண்டும் அந்த விரலில் மருதாணி போட வேண்டும். தங்கைக்கு சளி பிடிக்கும் என்பதால் அம்மா அவளை கொஞ்ச நேரம் வைத்து இருந்து விட்டு மருதாணியை கழுவி எடுக்க சொல்வாள். மருதாணி குளிர்ச்சியாம். ஆனால் அவள் கேட்க மாட்டாள். மருதாணி போட்டுக்கொள்ள வேண்டும் என்றால் இருப்பதிலேயே பழைய துணியை உடுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் , மருதாணி கரை பட்டால் துணியிலிருந்து நீக்குவது கடினம். தண்ணீர் குடிக்க வேண்டுமானலும் யாரவது ஊட்டி விடவேண்டும்.

படுக்கை கூட பாயில் தான். மெத்தையில் படுக்க முடியாது. தீபாவளி வேறு மழைகாலத்தில் வரும். இரவு நேரங்களில் குளிரும். ஆனாலும் போர்த்திக்கொள்ள பழைய போர்வை தான் தருவார் அம்மா. தூங்கும் பொழுது ஏசு நாதர் சிலுவையில் அரைந்ததைப் போல் இரண்டு கைகளையும் நீட்டி வைத்துக்கொண்டு படுப்போம். அதில் வேறு சண்டை வரும்--நீ என் மருதாணியை கலைத்து விட்டாய் என்று. படுத்தப் பின் போர்வையை போர்த்த ஓர் ஆள் வேண்டும். தூங்கும் பொழுது மருதாணி காய்ந்து, அங்கிங்கெங்கும் திரும்பும் பொழுது விழாமல் இருக்க சக்கரை கலந்த தண்ணீரை தெளித்து விடுவார் அம்மா. சக்கரைத் தண்ணீர் மருதாணியை காய்ந்தாலும் கீழே விழாதபடிக்கு பிடித்து வைத்திருக்கும். அப்பொழுது தான் கைகள் நன்றாக சிவக்கும். பாயில் படுப்பதால் சக்கரைத் தண்ணீருக்கு எங்கே எறும்புகள் மொய்த்து விடுமோ என்ற பயமும் இருக்கும். ஆனாலும் சக்கரைத் தண்ணீர் தெளிக்காமல் படுத்ததில்லை.காலையில் எழுந்தவுடன் முதலில் கைகளை விரித்து சிவந்து இருக்கிறதா என்று பார்ப்போம். இரண்டு கைகளையும் ஒன்று மேல் ஒன்று வைத்து உரசி காய்ந்து இருக்கும் சொச்ச மிச்ச மருதாணியை பாயிலேயே உதிரச் செய்து விட்டு கைகளை கழுவச் செல்வோம். கைககளை கழுவிய பின் யார் கை நன்றாக சிவந்து இருக்கிறது என்று வேறு ஒப்பீடு நடக்கும். பின் கொஞ்சம் தேங்காய் எண்ணெயை எடுத்து கைகளில் பூசிக்கொள்வோம். அப்பொழுது தான் மருதாணி சாயம் பளீர் என்று இருக்கும். எளிதில் மங்காது. எல்லாம் கேள்வி ஞானம் தான்.
ஆண்பிள்ளைகளும் மருதாணி வைத்துக்கொள்வார்கள். அவர்கள் உள்ளங்கைகளில் ஒரே ஒரு வட்டம் அவ்வளவு தான். இப்பொழுதெல்லாம் வட இந்தியர்களின் influenceஆல் அழகாக மருதாணி இட்டு விடுகிறார்கள். முழங்கை அளவிற்கு சித்திரங்கள் வரைந்து தள்ளுகிறார்கள். பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் , சிறுவர்களும் கூட இந்த கலையில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். coneகள் அறியப்படுவதற்கு முன் சில காலம் ஆவின் பால் வரும் பைகளை கழுவி அதனை ஒரு கோன் போல செய்து அடியில் ஒரு சிறு துளையிட்டு மருதாணியை கொண்டு நிரப்பி கோன்களாக பயன் படுத்தியதுண்டு.என் வலது கை கொண்டு இடது கையில் ஓரளவிற்கு ஏதோ ஒரு பூவை போட்டு விடுவேன். ஆனால் இடது கை கொண்டு வலது கையில் போட வராது. ஏதாவது ஒரு டிசைனை கிறுக்கிக் கொள்வேன். சில நேரங்களில் தோழிகளிடம் போட்டுக்கொள்வேன்.
இலைப் பறித்து அரைத்து இட்டுக்கொள்ளும் மருதாணி ஒரு வித ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். சில நாட்களுக்கு பிறகு வெளுக்கும் பொழுது ஒரே சீராக வெளுக்கும். ஆனால் கோன் கொண்டு போட்டுக்கொள்ளும் மருதாணி அடர்ந்த வண்ணத்தில் சிவக்கும். அதே நேரம் ஓரிரு நாட்களிலேயே வெளுக்க துவங்கும். அப்படி வெளுக்கும் பொழுது அங்கங்கே சாயம் போனது போல் காட்சி அளிக்கும். பார்க்க அசிங்கமாக இருக்கும். இலை கொண்டு போடப்படும் மருதாணிக்கு மருத்துவ பயன்கள் உண்டு. இந்த கோன்களில் ரசாயனம் இருப்பதால் எந்த வித மருத்துவ பயனும் கிடையாது. ஆனால் இப்பொழுதெல்லாம் மருதாணி செடிகளை பார்ப்பதே அரிதாகி விட்டது. எனவே வேரு வழியில்லாமல் கோன்களைத்தான் உபயோகப்படுத்தும்படி ஆகி விடுகிறது. எப்படியோ தீபாவளிக்கு பலகாரம் செய்து கைகள் சிவக்கிறதோ இல்லையோ, மருதாணி இட்டுக்கொள்வதால் சிவந்து போகும். இதோ நானும் இன்று இரவு மருதாணி இட்டுக்கொண்டு தீபாவளியை வரவேற்க ஆயத்தமாக போகிறேன்.

Sunday, October 6, 2019

அசுரன் விமர்சனம்



அசுரன் படம் வெளிவந்த நாளிலேயே அசுர வேகத்தில் படம் பார்க்க சென்று விட்டோம். அடித்த அசுர காற்றில் இருந்து இன்னும் மீண்டு வர முடியவில்லை. அருமையான படம். நிறைவான  கதாபாத்திரங்கள். அட்டகாசமான திறமைகளின் வெளிப்பாடு. மிரட்டும் ஒளிப்பதிவு, மனதை படக், படக் என அடித்து கொண்டே வைத்திருக்கும் இசை. ஆழமான திரைக்கதை மற்றும் இயக்கம். சிந்திக்க வைக்கும் கருத்து. ரசிக்க தூண்டும் வசனம். மொத்தத்தில் இது “அடி தூதூள்ள்”!

இப்படத்தில் ஒரு தந்தையாக தனுஷ் மின்னுகிறார். தந்தையாகவே வாழ்ந்திருக்கிறார். வெற்றிமாறன் போன்ற ஒரு இயக்குனர் கைகளில் களிமண்ணாக தனுஷ் மாறிவிடுகிறார். வெற்றிமாறன் அவரை அழகாக உருமாற்றுகிறார், உருவாக்குகிறார், உயிர் கொடுக்கிறார். அவரின் கைகளில் வளைந்து, நெளிந்து ஒத்துழைப்பு கொடுத்து அழகான வடிவம் பெறுகிறார் தனுஷ். தன் பிள்ளைகளின் நலனுக்காக எப்படி தான் கட்டிக் காத்த சூடு , சொரணை எல்லாவற்றையும் இழக்க பெற்றோர் தயங்குவதில்லை என்ற நிதர்சன உண்மையை அழகாக நடித்து காட்டி இருக்கிறார்.


இத்தருணத்தில் இரண்டு மாதங்களுக்கு முன் என் வீட்டில் நடந்த சம்பவம் நினைவிற்கு வருகிறது. என் மகனின் ட்யூஷன் ஆசிரியருக்கும் எனக்கும் இடையில் ஒரு கருத்து வேறுபாடு. அவர் எடுத்த வகுப்புகளின் எண்ணிக்கையும் நான் கணக்கு வைத்திருந்த எண்ணிகையும் ஒத்து போக வில்லை. நான் சொல்ல வந்த விஷயத்தை அவர் ஏற்றுக் கொள்ளும் மன நிலையிலும் இல்லை. அவர் மனதில் தோன்றியதை எல்லாம் message ஆக அனுப்பினார். எந்த விளக்கத்தையும் ஏற்க மறுத்து , இனி என் மகனுக்கு வகுப்புக்கள் எடுக்க போவது இல்லை என்று கடினமாக கூறிவிட்டார். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. என் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிந்து இருந்தும் அவரிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டேன். என் சுய மரியாதையும் விட்டு விட்டு என் மகனுக்காக மன்னிப்பு கேட்டேன். அவன் பன்னிரெண்டாம் வகுப்பில் இருக்கிறான் அவனுக்கு அவரின் உதவி மிகவும் தேவை. இத்தருணத்தில் என் சுயமரியாதை எனக்கு பெரிதாக தெரியவில்லை. என் மகன் கூட,”அம்மா விடுங்கள் நான் சமாளித்துக் கொள்கிறேன். நீங்கள் எதற்காக தவறேதும் செய்யாமல் அவரிடம் மன்னிப்பு கேட்கிறீர்கள்?” என்றான். எனக்கு வேறு வழியே தெரியவில்லை. அந்த சூழ்நிலையில் அவனின் எதிர்காலமே கண் முன் தோன்றியது.

இப்படத்தில் தனுஷ் அப்படி மனம் , ரோஷம் பார்க்காமல், தன் மகனின் கடுஞ்சொல்லை கூட பொருட்படுத்தாமல் தன் குழந்தைகளின் நலனுக்காக பிறந்தது முதல் ஒட்டிக்கிடக்கும் மானம் ரோஷம் எல்லாவற்றையும் தள்ளி வைக்கும் பொழுது ஓர் பாசமிக்க தகப்பனாக, பொருப்புள்ள குடும்ப தலைவனாக மிளிர்கிறார்.

மஞ்சு வாரியாரை பார்க்கும் பொழுது கதைகளில் படித்த, புலியை முறத்தால் அடித்து  விரட்டிய அந்த தமிழச்சியே ஞாபகத்திற்கு வருகிறார். பாசமான அதே சமயம் கண்டிப்பான , வீரமான, வீரத்தை தன் பிள்ளைகளுக்கு பாலாக ஊட்டி வளர்த்த தாயாக மின்னுகிறார். அவர் நடையிலேயே அவரின் மிடுக்கும், தைரியமும் தெரிகிறது. கணவன் மனைவி இடையே மிகுந்த ஈடுபாடு இருக்கும் பட்சத்தில் எப்படி அந்த அன்பை இருவரும் அழகாக பார்வை மூலமாகவும், வார்த்தை மூலமாகவும், கண்டிப்பு மூலமாகவும் , செய்கைகள் மூலமாகவும் ஓர் கவிதையாக பரிமாறிக்கொள்ள முடியும் என்பதற்கு தனுஷ், மஞ்சு வாரியார் ஜோடியே சாட்சி. தனுஷ் குடித்து விட்டு வாந்தி எடுக்கும் போது சளித்துக்கொள்ளாமல் சுத்தம் செய்வதாகட்டும், அவருக்கு அடிப்பட்டு ரத்தம் வரும் போது அதை தன் முந்தானை கொண்டு துடைப்பதில் ஆகட்டும், தன் கணவர் நடக்கும் அக்கிரமங்களுக்காக ஆத்திரம் கொண்டு எதிர் நோக்காமல் அமைதியாக கையாள்வதை பார்த்து கோபம் கொள்வதில் ஆகட்டும் , மஞ்சு வாரியார் ஓர் தாயாய், மனைவியாய் ஒளிர்கிறார். ஒரு குடும்ப தலைவி எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் நிலைகுலையாமல் நிதானமாக கையாளுபவளாக இருக்கும் பொழுது எப்படிபட்ட சூழ்நிலையையும் அந்த குடும்ப தலைவனால் கையாள முடியும் என்பதற்கும் இந்த ஜோடி ஓர் எடுத்துக்காட்டு. தங்கள் குடும்பத்தில் நடந்த இழப்புகளுக்கு அழுது, கூப்பாடு போட்டு ஊரை கூட்டாமல் நிதானமாக ஒரு குடும்பமாக யோசித்து முடிவெடுக்கிறார்கள்.

இளம் கன்று பயம் அறியாது என்பதற்கு படத்தில் தனுஷின் மகன்களாக வரும் இருவராகட்டும், இளம் வயது தனுஷ் ஆகட்டும் இந்த கதாபாத்திரங்களே சான்று. ரத்தம் சூடாக இருக்கும் பொழுது ஒரு பிரச்சனையை அனுகும் விதமும் அதே ரத்தம் சுண்டும் பொழுது , வயதாக ஆக ஒருவன் ஓர் பிரச்சனையை அனுகும் முறையும் எப்படி வேறுபடுகிறது. ஆனால் சமயம் வரும் பொழுது கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது வெளிப்படத்தான் செய்கிறது. பின் விளைவுகளை யோசிக்காமல் மகன்கள் எடுக்கும் முடிவு எப்படி தன் குடும்பத்தை ஆட்டம் காணச்செய்தது என்பதை உணர்ந்து தன் உறவுகளை காக்க வயதான தனுஷ் நிதானமாக செயல் படுகிறார்.

சொத்து, ,சுகம், மானம், மரியாதை , எல்லாவற்றையும் விட ஒருவனுக்கு தன் குடும்பமே பெரிது என்பது தனுஷ் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுகிறது. அன்பும் அரவனைப்பும் மிகுந்த குடும்பங்கள் எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் நிலை குலைவதில்லை. இப்பொழுதெல்லாம் நமக்குத்தான் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க பாடம் கற்க வேண்டி இருக்கிறதே!. ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் ஆள் ஆளுக்கு கைத்தொலைபேசியுடன் உறவாடி, தனித்தனி தீவுகளாக வாழ்கிறோம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் எங்கிருந்து பாசப்பிணைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது? குழந்தைகள் தவறான பாதையில் போனப்பின் கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் செய்ய விழைகிறோம். இவை எல்லாம் ஒரு வித பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதே ஆகும். இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் திருமண வயது அடைந்த பிள்ளைகளை வைத்து இருக்கும் எனக்கு தெரிந்த நிறைய பெற்றோர்கள் ”என் பிள்ளையை அவரையே தனக்கு ஏற்ற துணையை தேடிக்கொள்ள சொல்லிவிட்டேன். நாளைக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் பொறுப்பாக வேண்டாம் இல்லையா?” என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். பொறுப்புக்களை தட்டிகழிக்க பழகி கொண்டு இருக்கிறோம்.

இப்படத்தில் மகனுக்காக தந்தையும், அண்ணனுக்காக தம்பியும், அம்மாவிற்காக மகனும், ஊருக்காக தலைவனும், தந்தைக்காக மகனும், தங்கைக்காக அண்ணனும், காதலிக்காக காதலனும் , உறவிற்காக உற்றாரும் என்று பிறர் நலனுக்காகவே வாழும் நிறைய கதாபாத்திரங்கள் நம் கண் முன் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட சுயநலமில்லா உறவுகளை பார்க்கையில் மனம் இளகுகிறது. தனுஷின் மகன்களாக வரும் கென், டிஜே, மஞ்சு வாரியாரின் அண்ணனாக வரும் பசுபதி, ப்ரகாஷ் ராஜ், நரேன், அம்மு அபிராமி, மற்றும் எல்லா கதாபாத்திரங்களுமே மிக நன்றாக அவரவர் பங்கை செய்து இருக்கிறார்கள்.

படத்தில் சாதி ஆதிக்கம் ஆழமாக அழகாக கையாளப்பட்டிருக்கிறது. இப்படி பட்ட சமூகத்திலா நாம் வாழ்ந்தோம் , வாழ்கிறோம் என்று நினைக்கையில் மனதில் ஓர் வலி ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அந்த வலி படம் பார்த்து முடித்து வீடு வந்தும் மனதிலேயே ஊரல் போட்டு ஓர் சளிப்பை, வெறுப்பை, ஓரு ரணத்தை ஏற்படுத்துகிறது. ஆண்டான் அடிமை, சாதிக்கொடுமைகள் அன்றிருந்த மாதிரி இப்பொழுது இல்லை என்பதை நினைக்கையில் நிம்மதி ஏற்படுகிறது. முற்றிலும் அவை களையப்பட இன்னும் சில காலங்கள் ஆகலாம். ஆனால் அதில் முன்னோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் என்பதில் ஓர் எள் அளவு மகிழ்ச்சி.

படத்தில் வரும் திருநெல்வேலி தமிழை கேட்கும்  பொழுது தாமிரபரணி தண்ணீரை அப்படியே எடுத்து பருகிய நிறைவு ! வசனங்களில் ஆழமும் உண்டு, விவேகமும் உண்டு, அர்த்தமும் உண்டு, நக்கலும் உண்டு, நையாண்டியும் உண்டு! அந்த காடுகளை படம் பிடித்திருக்கும் விதம் நாமும் அந்த காடுகளுக்கிடையே ஊடுருவி சென்று வந்ததை போன்ற அனுபவம். நம் ஊரிலே நம் சொத்தாக எவ்வளவோ காடுகளும் வனங்களும் இருக்கின்றன. கண்களுக்கெட்டா தூரத்தில் இருக்கும் அமேசான் காடுகள் பற்றி எரிவதை பற்றி ஆத்திரம் அடையும் நாம் , நம் கண் முன்னே கொட்டிக்கிடக்கும் இயற்கை வனங்கள் அழிக்கப்படுவதை பார்த்து பொங்கி எழுவதில்லை. அப்படியே கோபம் கொண்டு எழுந்தாலும் இங்கிருக்கும் அரசியலும், அரசியல்வாதிகளும் அதனை நீர் ஊற்றி அனைத்து விடுகிறார்கள்.

படம் முழுதும் அரிவாளின் உரசலும், கத்திகளில் இருந்து வெளிவரும்  தீப்பொறிகளும், குத்தீட்டிகளின் பாய்ச்சலும் , கிழிக்கப்பட்ட சதையும், சிந்திக் கிடக்கும் ரத்தமும், எரிந்த சாம்பலும், மனிதம் மீது ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது. குத்தீட்டிகளும், வீச்சு அரிவாளும் இப்பொழுது அவ்வளவாக இல்லை என்றாலும் அதை விட பயங்கரமான ஆயுதங்கள் சத்தம் இன்றி ரத்தம் இன்றி நம்மை தாக்கிக்கொண்டு இருக்கின்றன. கதிர் வீச்சுகளும், புகை நச்சுக்களும், பூச்சி கொல்லிகளும் நம்மை நாலா பக்கத்திலிருந்தும் தினம் தினம் அனு அனுவாக கொன்றுக்கொண்டிருக்கின்றது. கத்தியும் அரிவாளும் கொண்டு தாக்குவது மட்டுமே வன்முறை இல்லை. சுத்தமான காற்றும், தண்ணீரும் , பசிக்கு உணவில்லா சமூகத்தில் வாழ்வதும், சுகாதரமற்ற சூழ்நிலையில் வாழ நேரிடுவதும், ஒருவரை ஒருவர் அக்கிரமாகவும், வக்கிரமாகவும் வார்த்தைகளால் தாக்கிக்கொள்(ல்)வதும் ,
சுயநலத்திற்காக பொதுநலத்தை காவு கொடுப்பதும், சுய லாபத்திற்காக ஒரு சமூகத்தையே போதைக்கும் ,புகழுக்கும் அடிமையாக்குவதும், பெண்களை, குழந்தைகளை வியாபாரப் பொருளாய் ஆக்குவதும், சுற்றுச் சூழலை கெடுத்து குட்டிச்சுவராக்குவதும், இவற்றிற்கெல்லாம் ஈடு கொடுப்பதும் , தூண்டு கோளாய் இருப்பதும், வன்முறையே! அப்படி பார்க்கையில் இப்பொழுது நாம் ஆயுதம் இல்லா பலவித வன்முறைகளை எதிர் நோக்குகிறோம், நாமும் நம்மை அறியாமல் ஓர் காரணியாகிவிடுகிறோம். இதை எல்லாம் யோசிக்கும் பொழுது படத்தில் வரும் சண்டை காட்சிகள் நமக்கு உண்மை இல்லை , அவை படத்திற்காக படம் ஆக்கப்பட்ட காட்சிகள் என்பதை எங்கோ உணர்த்திக் கொண்டு இருக்கிறது.தனுஷின் ஒவ்வொரு முக பாவத்தையும் படம் பிடித்த ஒளிப்பதிவாளருக்கும் , அழகாக எடிட் செய்த எடிட்டருக்கும் ஒரு பலத்த கைத்தட்டல்.

படத்தின் முடிவில் ஆழமான கருத்து முன் வைக்கப்படுகிறது. கல்வி ஒன்றே ஒருவனை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்பது வலி உருத்தப்படுகிறது. அதை கொண்டு வாழ்வில் மேன்மை அடைவது மட்டும் இல்லை முன்னேறுவது என்பது. அதையும் தாண்டி, அந்த உயர் நிலையை அடைந்த பின் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிறருக்கு செய்யாதிருத்தலே உண்மையான சமூக முன்னேற்றம் என்னும் கருத்தை இயக்குனர் முன் வைக்கிறார்.

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதிகல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.” என்ற பாரதியின் வரிகளை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து வாழ்ந்தால் அழகான ஒரு சமுதாயமாக நம் சமுதாயம் மாறும். நம் வருங்கால சந்ததியர் நலமாக வளமாக வாழ வழி வகுக்கும்.



 ஊர் கூடி தேர் இழுந்தால் எப்படி இருக்கும் என்பதை இப்படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் அவரவர் பங்கை பாங்குடன் செய்து இருக்கிறார்கள். நவராத்திரியில் வந்திருக்கும் அசுரன் ஒவ்வொரு மனிதனுள்ளும் மறைந்திருக்கும் அசுரனை வெளிக்கொணர்வதோடு மட்டும் அல்லாது அந்த அசுரனை வதம் செய்யவும் தூண்டுகிறது. நமக்குள் இருக்கும் அசுரனை கொல்வதற்கு ஒரு மகிஷாஷ மர்த்தினி தேவை இல்லை நாம் மனது வைத்தால் நாமே “மனிதனும் தெய்வமாகலாம்” என்பது போல் கூட வேண்டாம் , மனிதன் மனிதனாகவே வாழலாம். நீ வாழ்ந்து பிறரையும் வாழவிடு என்பதை மந்திரமாக கொண்டு வாழ்ந்தாலே போதும். மனிதம் தழைக்கும் மகிழ்ச்சி பெருகும்!!!

"அசுரன்" கட்டாயம் பார்க்க வேண்டிய நல்ல படம் !!!

Saturday, September 28, 2019

துளிர்




பயிராக இருந்தாலும்
பருவ மெய்திய மகவாக இருந்தாலும்
முளைவிட்டப் பின்
அடக்கி ஆளுதல் முடியாது....
வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும்
தேடி தேடி பார்த்து
துளிர் விட பார்ப்பார்கள்!!

காலை காட்சி:

காலை காட்சி:
நேற்றைய இரவு காட்சி "Article 15" ஹிந்தி படம் பார்த்த பாதிப்பிலிருந்து நீங்காமல் , சனிக்கிழமை என்றும் பாராமல் காலை சீக்கிரமாகவே எழுந்தாகிவிட்டது. இங்குதான் எழுந்தவுடன் வாசல் தெளிக்க வேண்டும், கோலம் போடவேண்டும், பால் காய்ச்ச வேண்டும் என்ற கோட்பாடுகள் இல்லையே! என்ன செய்வது என்று தெரியாமல் நடை பயிற்சிக்கு கிளம்பி விட்டேன். அந்த காலை பொழுதில் பார்த்த காலை காட்சிகள் சில:
காட்சி 1: ஒரு கணவன் , மனைவி, குழந்தை. குழந்தைக்கு ஒரு வயது அல்லது ஒன்றரை வயது இருக்கும். strollerரில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. மனைவி strollerஅய் தள்ளிக்கொண்டு வந்தார். கணவர், தூக்க முடியாத மாதிரி ஒரு back pack பையை முதுகில் மாட்டிக்கொண்டு வேக வேகமாக கூடவே நடந்து வந்தார். பேருந்து நிறுத்துமிடம் நோக்கி நடந்து கொண்டிருந்தனர் . கணவர் மனைவியிடம்,”அந்த stroller sideல இந்த துணிய வச்சுக்கோயேன். அதுல தான் ஒன்னும் இல்லல,” என்றார். அவர் நல்ல உயரம். அதற்கேற்ற உடல்வாகு. அவரை பார்த்தால் ஒரு backpack தூக்க தயங்குபவர் போல தெரியவில்லை. ஆனால் ஏனோ அந்த துணிகள் அவருக்கு கூடுதல் சுமையாக தோன்றியது போல. உடனே அவரின் மனைவி ,”அதெல்லாம் strollerல வைக்க முடியாது,நீங்களே பையில வச்சு தூக்கிட்டு வாங்க. இத கூடவா தூக்க முடியாது? பாப்பா stroller ல கண்டத வைக்க முடியாது!”என்று திட்ட வட்டமாக மறுத்துவிட்டார். அந்த காட்சியை பார்த்த பொழுது பரபரப்பு மிக்க இந்த வாழ்க்கையில் உழலுவதால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அந்த மனைவி ,”இன்றைக்கு ஒரு நாளாவது எங்களுக்காக எதையாவது தூக்கிட்டு வா. வாரம் முழுக்க நான் தானே வீட்ட கவனிச்சுகறேன். புள்ளயதான் தூக்க மாட்ற அதோட துணிமணியனாச்சும் தூக்கி சும”என்று சப்தமில்லாமல் மனதிற்குள் முனுமுனுப்பது கேட்பது போல் இருந்தது. அவர்களை கடந்து நான் சென்ற பொழுது கண்கள் என் அனுமதி இன்றி அந்த strollerஅய் பார்த்தது. கண்டதை வைக்க முடியாத அந்த stroller ரில் மனைவியின் கர்ப்பிணி பை தொங்கி கொண்டே ஆடி ஆடி அவர்களுடன் போனது.............கணவரோ அந்த backpackகோடு விருக் விருக் என்று வேகமாக கோபத்தை அடக்கியபடி நடந்து சென்றார்.இதை எதையும் பற்றியும் புரியாத குழந்தை கையிலிருந்த கைதொலைப்பேசியில் எதையோ பார்த்துக் கொண்டு சிரித்த படி strollerரில் சென்றது.......
காட்சி 2: இரு பெண்மனிகள் தங்களின் எஜமானரின் நாய்களை நடைப்பயிற்சிக்கென அழைத்துக் கொண்டு சென்றனர். வேறு வேறு வீட்டு நாய்களாக இருக்க வேண்டும். காலை வேலையில் தங்களுக்கென நேரம் கிடைத்த சந்தோஷத்தில் இரு பெண்களும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அனேகமாக அவர்களின் உணர்வுகளின் பறிமாற்றமாக தோன்றியது. தன் குடும்பம் குட்டி யாவரையும் விட்டு விட்டு கடல் கடந்து எங்கோ ஒரு நாட்டில் பிழைப்பிற்காக வந்திருந்த இருவரும் தங்களின் சந்தோஷங்களையும், சோகங்களையும் கொட்டி தீர்க்க அந்த சந்தர்பத்தை உபயோக படுத்திக்கொண்டிருந்தனர். இருவரும் கைகளில் தத்தம் நாயின் கயிற்றை இருக பிடித்து இருந்தனர்.நாய்களுக்குள்ளும் ஒரு புரிதல் இருந்தது. அடிக்கடி சந்தித்திருக்க வேண்டும் போல் தோன்றியது. ஒன்று பெண் நாய். மற்றொன்று ஆண் நாய். இரு நாய்களும் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டன . மூக்கோடு மூக்கு வைத்து தேய்த்து கொண்டன . கால்களால் ஒருவரை ஒருவர் வருடிக்கொண்டன . அவைகளின்் காதல் சம்பாஷனை சப்தமில்லாமல் அரங்கேறிக்கொண்டு இருந்தது. திடீரென்று பெண் நாய் லொள் என்று சத்தமாக குரைத்தது. உடனே ஆண் நாய் அந்த குரைப்பின் அர்த்தம் உணர்ந்து உடனே பின் வாங்கி நகர்ந்து சென்றது.நாய்களை பிடித்திருந்த பெண்கள் இருவருக்கும் தூக்கி வாரி போட்டது. தத்தம் நாயை இருக பிடித்து இழுத்து கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டனர். சிறிது நேரம் இரு நாய்களும் வால்களை ஆட்டிக்கொண்டு கண்களால் சமாதானம் அடைந்து அவரவர் வழியில் சென்றன. நாய் என்றாலும் NO என்று பெண் நாய் சொன்னால் அது NO தான். அதனை ஆண் நாய் புரிந்து ஒதுங்கிக் கொண்டால் அங்கே அழகான ஒரு புரிதலும் புரிதலுக்கு பின் ஒரு உறவும் மலர வாய்ப்பிருக்கிறது.
காட்சி 3:போகும் வழி நெடுகிலும் அழகான உயரமான, பச்சை பசேலென்ற மரங்கள் இருக்கும். அவைத் தான் பல விதமான பறவைகளின் வீடுகள் . இன்று மரங்களின் கிளைகள் எல்லாம் வெட்டப்பட்டு வெறுச்சோடி இருந்தது. தாய் மரம் தனிமையில் இருப்பது போல இருந்தது. கிளைகள் சில நேரங்களில் சுமை தான் . ஆனால் தாய் மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளைகள் கீழே வாடி வதங்கி கிடந்தது மனித குழந்தைகளைப்போல்.
காட்சி 4: நடைப் பயிற்சி முடிந்து களைத்துப் போய் கொஞ்சம் நேரம் அமைதியாக அமர்ந்திருக்கலாம் என்று நீச்சல் குளத்தருகே அமர்ந்திருந்தேன். அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் காலையிலேயே புல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்ச ஆட்கள் வந்திடுவார்கள். கடந்த ஒரு மாதமாக இருப்பது போதும் என்று இல்லாமம் கடனுக்கு வாங்கி வெப்பத்தை கக்கும் சூரியனால் பச்சையாக இருக்க வேண்டிய புல் எல்லாம் காய்ந்த சருகாய் காட்சி அளித்தது. பச்சை நிறம் தண்ணீர் பாய்ச்சியவரின் சீருடையில் மட்டுமே இருந்தது. அவர் தண்ணீர் பாய்ச்சும் குழாயை , பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல் தன் தோளில் போட்டுக்கொண்டு தண்ணீரை அளவாகவும் அழகாகவும் பாய்ச்சிக்கொண்டிருந்தார். அவரின் முகத்தில் ஓர் கர்வம்,”இந்த புற்கள் உயிர் வாழ்வது என்னால் தான். நான் தான் இவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சுகிறேன்,”என்று. புற்களின் மேல் தூரளாக விழுந்த தண்ணீருக்கும் ஓர் கர்வம்,”நான் புற்களின் மேல் விழுவதால் தான் அவை உயிர் பிழைக்கின்றன,”என்று. அவரவர் கர்வம் அவரவர் தலையில் என்று நினைத்துக் கொண்டு என் தலையில் விழுந்த சூரிய ஒளியை இதமாக அனுபவித்த படி அமர்ந்திருந்தேன்.
காட்சி 5: நான் அமர்ந்திருந்த மேசைக்கு எதிர் திசையில் மூன்று முதியோர்கள் அமர்ந்திருந்தனர். வேற்று மொழி பேசுபவர்கள். அறுபத்தி ஐந்து வயதிலிருந்து எழுபது வயதிற்குள் இருப்பார்கள். மூவரும் நடை பயிற்சி முடித்து விட்டு அங்கு உட்கார்ந்து கொண்டு போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு எண்பது வயது கிழவி இரு பைகளை தூக்கி கொண்டு என்னை கடந்து சென்றார். நேர்த்தியாக உடை அணிந்திருந்தார். பைகள் கைப்பை அளவுதான். பெரிதான பைகள் இல்லை. தோளில் தொங்கவிட்டு இருந்தார். சற்று கூன் போட்ட படி அந்த வயதிற்கேற்ற முன் எச்சரிக்கையுடன் மெதுவாக நடந்து சென்றார். இதை கவனித்த அந்த மூன்று பெண்மணிகளின் கண்களும் ஒரு நிமிடம் அந்த கிழவி நடந்து சென்ற திசையிலேயே சென்றது. அவர்களுக்கு அந்த கிழவி பரிச்சயமானவரா அல்லது பரிச்சயம் இல்லாதவரா என்று எனக்கு தெரியாது. அவரை பார்த்து அளந்த ஒரு நிமிடத்தில் ஒரே நேரத்தில் மூன்று பேரின் உதடுகளும் ஏதோ இடைவிடாது பேசியது. யார் பேச்சை யார் கேட்கிறார்கள் என்று எனக்கு குழப்பமாகி போனது. அவர்களின் மொழி வேறு எனக்கு புரியாத ஒன்று. எனவே அவர்களின் உதடசைவை வைத்து நான் ஒன்றும் கணிக்க முடியவில்லை. அந்த கிழவியை அவர்கள் போற்றுகிறார்களா அல்லது தூற்றுகிறார்களா அல்லது சாதாரனமாக ஏதோ பேசி கொள்கிறார்களா என்று விளங்கவில்லை.அவர்கள் ஒன்றும் நம் பிக்பாஸோ அல்லது நம் தொலைக்காட்சியில் வரும் டாக் ஷோவோ பார்க்க வாய்ப்பில்லையே. பின் எப்படி இப்படி எல்லோரும் ஒரே நேரத்தில் பேசுகிறார்கள். ஒவ்வொருவரும் தான் பேசத்தான் ஆசை படுகிறார்கள். பிறர் பேசி தான் கேட்க யாருக்கும் ஆசை இருப்பதில்லை போல. அது எல்லா நாட்டவருக்கும் பொதுவான விஷயம் தான் போல. நடப்பவையை தான் நிழற் உலகத்தில் காண்பிக்கிறார்கள் . ஓரிரு நிமிடங்களுக்குப் பின் அந்த மூன்று வயதான பெண்மணிகளும் தங்களின் உதடுகளுக்கு பூட்டு போட்டு அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.
இத்தனை காட்சிகளை பார்த்து ரசித்து விட்டு என் கையில் கட்டி இருந்த கைகடிகாரத்தை பார்த்தவுடன் தான் ஞாபகத்திற்கு வந்தது,”ஆஹா வீட்டில் இரண்டு பேர் இன்னும் சயனத்திலேயே இருப்பார்களே. நாம் போய் அக்காட்சியை களைத்து மனசாட்சி சொல்லும் சொல் கேட்டு இந்த நாளை துவங்கவேண்டுமே “என்று..
இத்துடன் காலை காட்சிகள் முடிவிற்கு வந்தது........